புஸ்பராணியின் போராட்டமும் - தியாகமும் உணர்வுபூர்வமானவை. போலித்தனமற்ற உன்னதமானது. தான் நம்பிய சமூகக் கனவுகளுடன் பயணித்தவை. இந்தப் பயணத்தில் சிறைகள், சித்திரவதைகளை மட்டுமல்ல, சமூகரீதியான புறக்கணிப்புகளையும் எதிர்கொண்டவர்.
வரலாற்றில் போராட வந்த ஆயிரக்கணக்கான பெண்களுக்கு முன்னோடியாவார். யாழ்ப்பாண ஆணாதிக்கக் கலாச்சார மரபுகளை மீறியவர். அடங்கியொடுங்கவே பெண் என்ற தமிழ் கலாச்சார அடையாளத்தைத் தகர்த்தவர். யாழ் மையவாத வெள்ளாளியச் சமூகத்தின் ஆணாதிக்க ஒழுக்க கலாச்சார வேலிகளுக்கும் - அவர்களின் பெண்கள் மேலான கண்ணோட்டதுக்கும் சவால் விடுத்தவர். ஒடுக்கும் சாதிகளின் அதிகாரத்தையும், அதன் திமிரையும் எதிர்த்து நின்றவர்.
ஒடுக்கும் சாதியால் வரையறுக்கப்பட்ட ஒடுக்கப்பட்ட சாதியில் அவர் பிறந்ததால், யாழ்ப்பாணத்தின் ஒடுக்கும் சாதிய சமூகத்தை எதிர்கொண்டு வாழ வேண்டுமென்பது சவால் மிக்கது, 1960 - 1970 வரை ஒடுக்கப்பட்ட சாதிகள் கல்வி கற்க அனுமதியில்லை. பொது இடங்களை பயன்படுத்த உரிமையில்லை. இதுதான் அன்றைய தமிழினவாதம் முன்வைத்த தமிழ்தேசியம்.
![]()
இந்த வகையில் புஸ்பராணி தன்னளவில் யாழ் சாதிய சமூகத்தை எதிர்த்துப் போராட வேண்டியிருந்தது. இவர் நம்பிய தமிழினவாத தமிழ் தேசியம், இந்த சாதிய ஒடுக்குமுறையை அமைதியாக – ஆணுக்கு அடிமையான பெண் போல் அனுசரிக்கவே கோரியது. போராடும் பெண் குறித்த ஆணாதிக்க கண்ணோட்டத்தை, தமிழ் தேசியம் தமிழரின் ஒழுக்கமாக – கலாச்சாரமாக ஏற்றுக்கொள்ளக் கோரியது. இந்த வரலாற்றுச் சூழலில் புஸ்பராணி குடும்பம், தமிழன் முன் வைத்த தமிழினவாத தமிழ் தேசியத்தின் அகவொடுக்குமுறையை எதிர்கொண்டது.
இவருடைய தங்கைகள் 1986 யாழ் பல்கலைக்கழகத்தில் கல்வி கற்க வந்தபோது, ராக்கிங்கிக்கு எதிரான எமது போராட்டத்தின் போது, முதல் வரிசையில் அணிவகுத்தவர்கள். குடும்பமே போராட்டத்தின் மரபு ஊடாக வாழ்ந்ததற்கு இது ஒரு எடுத்துக்காட்டு.
பிழைப்புவாதத்தை அரசியலாகக் கொண்ட தமிழரசுக் கட்சி தமிழ்தேசியம் என்று போலியான தன்நலன் சார்ந்த தமிழினவாதக் கோசத்தைக் முன்னிறுத்தியது. இதன் மூலம் வழிநடத்தப்பட்ட வன்முறை அரசியலுக்குள் இக்குடும்பம் பலியாக்கப்பட்டதும், இவர்களின் தியாகம் அர்த்தமற்றுப் போனதும் வரலாறு.
1960 களில் ஒடுக்கப்பட்ட மக்கள் நடத்திய சாதிய போராடங்களை முறியடிக்க, ஒடுக்கும் சாதிகளின் முயற்சிக்கு இவரின் குடும்பம் பலியானது. ஒடுக்கும் சாதிகள் தங்கள் சாதி சமூக அதிகாரத்தை பாதுகாக்க, ஒடுக்கப்பட்ட சாதிகளிலிருந்து இளைஞர்களை முன்னிறுத்தி - தமிழினவாதத்தை வன்முறைக்குள் நகர்த்தினர். வெள்ளாளிய தமிழினவாத அரசியலுக்காக முன்னிறுத்திப்பட்ட இந்த குடும்பத்தின் தியாகங்கள், ஒடுக்கும் சாதிய நலனுக்கு பயன்படுத்தப்பட்டது.
1970 களில் தமிழரசுக்கட்சியின் தலைவர்கள் தேர்தல் அரசியலில் தோற்றபோது, தம்மை தேர்தலில் தோற்கடித்தவர்களைத் துரோகி என்று கூறினர். அவர்களைக் கொல்ல நடத்திய தனிநபர் பயங்கரவாத வன்முறைக்கு பலியிடப்பட்ட இளைஞர்கள் வரிசையில், புஸ்பராணி குடும்பமும் சிக்கியது.
இந்த தனிநபர் வன்முறை அரசியல்வழி தமிழ்மக்களின் விடுதலைக்கானது என்று நம்பிய பலர் தம்மை அர்ப்பணித்தனர். விடுதலைக்கானது என்று அப்பழுக்கற்றது என்று நம்பிய அவர்களின் நோக்கம், அவர்களுக்கே எதிரானது என்பதை உணராத காலத்தில் - புஸ்பராணி போன்றவர்கள் வீரமிக்க புதல்வர்களே.
இதுதான் விடுதலை என்று நம்பிய தியாகங்கள், இன்று அர்த்தமற்ற வரலாறாகி இருக்கின்றது. தியாகங்களை விற்றுத் தின்னும் பிழைப்புவாதக் கூட்டம், அதிகாரத்தில் கொழுக்கின்றது.
தம்மை அர்ப்பணித்துப் போராட முன்வந்தவர்களைத் தவறாக வழிநடத்தியவர்களின் சொந்தநலன் சார்ந்த துரோகங்கள், இன்னமும் போற்றப்படுகின்றது. இத்தகைய இன்றைய சூழலில், புஸ்பராணி தனது அப்பழுக்கற்ற அன்றைய நோக்கத்துடன் வரலாறாகி இருக்கின்றார்.
18.04.2025
அப்பழுக்கற்ற நோக்கத்துக்காக போராடிய புஸ்பராணி
Typography
- Smaller Small Medium Big Bigger
- Default Helvetica Segoe Georgia Times
- Reading Mode