Language Selection

பி.இரயாகரன் -2025
Typography
  • Smaller Small Medium Big Bigger
  • Default Helvetica Segoe Georgia Times

காதலென்பது என்ன? காதல் தோன்றிய வரலாற்றுச் சூழல் என்ன? 

மனித உழைப்பானது ஆணின் தனியுடைமையாகிய போது, பெண் வரைமுறையின்றிப் பாலியல் சுரண்டலுக்குள்ளாக்கபட்டாள்.  ஆணாதிக்க வரைமுறையற்ற பாலியல் சுரண்டலுக்கு எதிராக, பெண் தேர்ந்தெடுத்த உறவுமுறை தான் காதல். இதன் மூலம் தனியுடைமை ஆணின் பாலியல் சுரண்டலுக்கு எதிராக, பெண் தான் தேர்ந்தெடுக்கும் உரிமையைத் தனதாக்கினாள். இது மனித வரலாறு.

இன்று அந்தக் காதலின் பெயரில், வரைமுறையற்ற பாலியல் சுரண்டலை ஆண்கள் நடத்த முடிகின்றது. காதலின் பெயரில் பெண்ணைப் பாலியல் ரீதியாக சுரண்டுவது, கைவிடுவது ஆணாதிக்க சமூகத்தில் நடப்பதும் - அதற்கு எதிரான பெண்ணின் போராட்டமும் சமூகத்தில் காணமுடியும்.
 
இதிலிருந்து தப்பித்துக் கொள்ள ஆணாதிக்கமானது, பரஸ்பரம் செக்ஸ் தாண்டி எமக்கு இடையில் எதுவும் இருக்காது, இருக்கவும் கூடாது என்ற நிபந்தனையுடன், பாலியல் வேட்டையில் அறிவுத்துறை சேர்ந்த ஆணாதிக்கவாதிகள் தமக்கான சொந்தக் கோட்பாட்டை உருவாக்குகின்றனர். கொடுக்கல் வாங்கலற்ற இந்த பாலியல் வேட்டையை மூடிமறைக்க, அதை காதல் என்கின்றனர். "இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" என்கின்றனர். இதைக் கேள்விக்குள்ளாக்க முடியாத "தனிப்பட்ட தேர்வு" என்கின்றனர்.

இதனால் பாதிக்கப்பட்ட பெண்கள் கேள்விக்குள்ளாகின்றனர். "இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" என்பதை மறுதளித்து நிற்கின்றனர்.

பல எண்ணிக்கையில் "எனக்கு இருந்த காதல் உறவுகளும் பகிரங்கமானவை" என்கின்றார். இது அவரைப் பொறுத்தவரையில, மனித ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்ட உறவு. இப்படி முன்வைத்துக்கொண்டு, தன்னையும் தன் நடத்தையையும்  ஒழுக்கமானதாக எப்படி நியாயப்படுத்தவும் - தர்க்கிக்கவும் முடியும்? ஒழுக்கத்துக்கு அப்பாற்பட்ட ஒருவன், தன்னைத் தற்காத்துக்கொள்ள தன் ஒழுக்கம் பற்றி வகுப்பெடுப்பு நடத்துவதே முரணானது. தன் ஆணாதிக்க ஒழுக்கக்கேட்டை, ஒழுக்கமான "இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" என்றும், இது போல் பல ஒழுக்க "காதல்"கள் இருந்தது என்று, தனது பாலியல் வேட்டையை ஒழுக்கமானதாக பறைசாற்ற முடிகின்றது.                  
    
இந்தப் பாலியல் நடத்தைக்கு பெண்ணை இணங்க வைக்க, வரைமுறையற்ற தங்கள் பாலியல் வக்கிரத்தை பெண்ணிய கோட்பாடாக்கி விடுவதையே ஆணாதிக்க அறிவுத்துறை செய்கின்றது. பணம், அதிகாரம், புகழ்… மூலம், வரைமுறையற்ற வகையில் பெண்ணை இணங்கவைத்து பாலியல் ரீதியாக வேட்டையாடும் சமூக அமைப்பில், கலை, இலக்கியம், அறிவு, நடிப்பு, நடனம்.. மூலம் பெண்ணை இலக்கு வைத்து, இணங்க வைத்துச் சுரண்டுவது நடந்தேறுகின்றது.

ஆண் – பெண் பாலியல் உறவு என்பது, இயற்கையான சமூக உயிரியுடனான சமூக உறவென்பதை மறுப்பதிலிருந்து, இந்த ஆணாதிக்க வக்கிரம் கருக்கொள்ளத் தொடங்குகின்றது. சமூக உறவல்லாத மனித - பாலியல் உறவு, சமூகத்தன்மையை மறுதளிக்கின்ற நுகர்வே. சக மனிதர்களைச் சுரண்டுதற்குரிய (உழைப்பு, பாலியல்..) பண்டமாக்கிவிடுவதே.

இந்தச் சுரண்டலை அடிப்படையாகக் கொண்ட தனியுடைமைவாத ஆணாதிக்க சமூக அமைப்பு ஆணுக்குரியதேயொழிய பெண்ணுக்குரியதல்ல. பெண்ணை இதற்குள் இணங்க வைப்பதே, ஆணின் பாலியல் நடத்தையாகும். இங்கு பெண் இணங்க வைக்கப்படுகின்றாள். இங்கு பெண்ணியம் பேசும் பெண்ணை - சமூக அக்கறையுள்ள பெண்ணை, தங்கள் பாலியல் நடத்தைக்கு இணங்க வைப்பது, பாலியல் வேட்டையில் ஈடுபடும் ஆணைப் பொறுத்த வரையில் "பெண்ணியமாகும்". விதவிதமாக விதவிதமான பெண்ணை நுகர்வதே, இந்தகைய ஆண்களின் பொது இலக்கு. இங்கு பெண்ணை ஆணாதிக்கம் குறிவைக்கும் போது, அதை பெண் சுதந்திரத்தின் பெயரிலும், பெண் தீர்மானமெடுக்கும் உரிமையின் பெயரில், பாலியல் சுரண்டல் நடந்தேறுகின்றது.

இங்கு சேர்ந்து சமூகமாக வாழும், மனிதப் பண்பாடு மறுதளிக்கப்படுகின்றது. மனிதன் சமூக உயிரி என்பது மறுதளிப்படுகின்து. காதல் என்பது பாலியல் (செக்ஸ்) என்ற ஒற்றை கண்ணோட்டத்தில் குறுக்கி, நுகர்வுக்குள் குறுக்கப்படுகின்றது.

மனித வரலாற்றில் காதலைப் பெண் தேர்ந்தெடுத்த போது (ஆண் தேர்ந்தெடுத்ததல்ல), பெண் ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வாழ்வியல் முறைக்குள் மனித சமூகம் வாழ்வதை வரையறுத்துக் கொண்டாள்.  வரைமுறையற்ற ஆணாதிக்கப் பாலியல் வேட்டைக்கு, இந்த வாழ்வியல் முறை எதிரானது. பெண்ணின் தெரிவுக்கு எதிரான ஆணாதிக்கவாதிகளே "திருமணம், குழந்தைகள், ஒழுக்கவாதம், கலாச்சாரம்"..  போன்றவை,  எமக்குக் கிடையாதென்கின்றனர். ஆண்கள் இதன் மூலம் கூறுவது, தங்கள் பாலியலுக்காக (செக்ஸ்சுக்காக) பெண்கள் ஒழுக்கத்தை முன்வைக்கக் கூடாது. அதாவது கூட்டு சமூக வாழ்வைக் கோருவது ஒழுக்கவியல். இதற்கு பதில், வரைமுறையற்ற பாலியலில் பெண்கள் ஈடுபடவேண்டும் என்கின்றனர். இதைக் கடந்த மனித வாழ்வியலுக்குட்பட்ட பெண்ணுடனான உறவு என்பது, "ஒழுக்கத்துக்கு" உட்பட்டது. 

ஆணாதிக்கத்தால் ”காதல், பாலுறவு போன்றவை உட்பட எனக்கு எவ்விதமான ஒழுக்கம் சார்ந்த மதிப்பீடுகளும் கலாசாரத் தளைகளும் கிடையாது. இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு அவர்களது தனிப்பட்ட தேர்வு. இதில் மதம், சட்டம், கலாசாரம் போன்றவற்றிற்கு எந்த வேலையும் கிடையாது.” என்று ஆண்கள் தங்கள் பாலியல் வேட்டைக்கு விளக்கத்தையும் - கோட்பாட்டையும்  முன்வைக்கின்றனர்.

"மதம், சட்டம், கலாச்சாரம்" போன்றவற்றை தங்கள் பாலியலுக்காக மறுதளிக்கும் இவர்கள், தனியுடைமைவாத நோக்கில் வங்கி, பணம்.. சட்டம் என்பதை அடிப்படையாகக் கொண்ட அமைப்புக்குள் தம்மை, தமது பணத்தையும் பெருக்கி பாதுகாப்பவர்களே. பெண்ணை சமூக அமைப்புக்கு வெளியில் முன்னிறுத்தி பாலியல்ரீதியாக நுகரத் தடையாக இருப்பதை தன் சுயநலம் சார்ந்து கேள்விக்குள்ளாக்குகின்றனர். பொது இலக்கிய நோக்கில் சமூகம் சார்ந்தும், சமூகத்தையும் வழிநடத்துவதில்லை. சுயநலத்தைத் தாண்டி, அதாவது தனது பாலியல், தனது பணம், தனது புகழ் .. என்ற வட்டத்தைத் தாண்டி எதையும் காணமுடியாது.     

"இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" தான் பாலியல், இது தான் காதல், என்ற குறுகிய வரையறைக்குள் மனித உறவைக் குறுக்கிக் காட்டுவது, தனியுடைமையிலான தன்னலமாகும். இது முதலாளித்துவமாகும். "இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" தான் பாலியல் நடத்தை, இது "தனிப்பட்ட தேர்வு" என்ற அடிப்படையை மறுதளிக்கும் வண்ணம், இவருடன் தொடர்பிலிருந்த பெண்களை மய்யப்படுத்தி, பெண்கள் ஏமாற்றப்பட்டதை பலருடைய வரலாறு சுட்டிக்காட்டுகின்றது.

"இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" என்பது, ஆண் தன் சொந்தப் பாலியல் தேவையைப் பூர்த்தி செய்யும் ஆணாதிக்க அளவுகோல். பாலியலில் (செக்ஸ்சில்) ஆணின் அளவுகோல் பெண்ணுக்குப் பொருந்தாது. பாலியலில் (செக்ஸ்சில்) ஆணின் உணர்ச்சி, பெண்ணின் உணர்ச்சியும் ஒன்றல்ல. பெண் இயற்கையிலேயே சமூக உயிரியென்பதால், ஆணின் நுகர்வுக் கண்ணோட்டத்திலிருந்து பெண் பாலியலில் ஈடுவதில்லை. சமூக உயிரியான இயற்கைக் கூறு, அதை அனுமதிப்பதில்லை.

ஆண் பெண்ணிடம் பாலியலை நுகர்வை அணுகவும் – நோக்கவும் கோருகின்றதை, இயற்கை மறுதளிக்கிறது. ஆண்கள் "இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" என்று கூறி, தங்கள் பாலியல் வேட்டையை ஜனநாயகமாகச் சித்தரிக்க முனைகின்றனர். இரு உயிர் எனப் பொதுமைப்படுத்துவது தவறானது. இங்கு ஆண் என்ற உயிரியும், சமூக உயிரியான பெண்ணும் ஈடுபடுகின்றாள்.

இப்படி உயிரியல் விதியிருக்க, எனக்கு - எமக்கு எந்த வரையறையும் - கட்டுப்பாடும் கிடையாது என்று கூறுகின்றதன் மூலம், வரைமுறையின்றி, முதலாளித்துவ சந்தை நுகர்வைப் போல் "இரு உயிரிகளுக்கு இடையேயான உறவு" களை ஆணாதிக்கம் முன்வைக்கின்றது. இது இன்றைய உலகச் சுரண்டலின் பொது வடிவமாகும். வரைமுறையின்றி நுகர்வதன் மூலம் சுரண்டும் சந்தைப்பொருளாதாரத்தின் பொது விதி, ஆண் பெண் உறவிலும் ஆணாதிக்கம் தனியுடைமைவாதம் கோருவதுடன் - அதை முன்வைக்கின்றது. இதை பெண்ணுரிமையாக ஆணாதிக்கம் முன்வைக்கின்றது.

ஆண் தன் அறிவு, இலக்கியம்.. புகழ் மூலம், நுகர்வாக்க தனியுடைமை உலகில் பயணிக்கின்ற பெண்ணை இலக்கு வைப்பதன் மூலம் இணங்க வைப்பது நடக்கின்றது. எப்படி நுகர்வாக்கத் தனியுடைமை, சமூக வாழ்வியல் முறைக்கு எதிரானதோ, அதே போல் பெண் இயற்கையில் சமூக உயிரி என்றஏவகையில், ஆண் எமாற்றியதையும், ஏமாற்றி வாழ முனைவதையும் தொடர்ந்து தன் இயற்கை உணர்வுடன் உணருகின்றாள். 

இயற்கையான சமூக உயிரியான பெண், இயற்கைக்கு முரணான ஆணாதிக்க பாலியல் வேட்கையை அங்கீகரிப்பதில்லை. தான் ஏமாற்றப்பட்டதைத் தொடர்ந்து உணருகின்றாள்.             

பெண்ணை நுகர்ந்த பின் "எனது வாழ்க்கைமுறை பகிரங்கமானது. எனக்கு இருந்த காதல் உறவுகளும் பகிரங்கமானவை. இந்தக் கண்டன அறிக்கையில் ‘திருமணம், குடும்பமாக சேர்ந்து வாழ்தல் போன்ற பொய்யான வாக்குறுதிகள் என்னால் கொடுக்கப்பட்டது’ எனச் சொல்லப்பட்டிருப்பதை நான் முற்றிலும் மறுக்கிறேன். நான் எவருக்கும் அவ்வாறு வாக்குறுதி கொடுத்ததில்லை என்பது எவ்வளவு உண்மையோ அதேபோன்று என்னுடன் உறவிலிருந்த யாருமே அவ்வாறு என்னிடம் வாக்குறுதி கேட்டதில்லை என்பதும் உண்மையே." என்று கூறுவது, அப்பட்டமான ஆணாதிக்க மோசடியுடனான  வன்முறையாகும். உறவின் பின் இன்று பொது வெளியில் கேட்பது, உறவின்போதான ஆணாதிக்க மோசடிகளை தோலுரிக்கின்றது. பாலியல் உறவு இணக்கமற்ற சூழலில், இணங்க வைக்கப்பட்ட ஆணாதிக்க மோசடிகளாலானது.   

சமூகமாக வாழாத இடத்தில் இணங்குதல் என்பது, ஆணாதிக்க அமைப்பில் பெண்ணின் மீதான அதிகாரமும், வன்முறையுமாகும். இங்கு இணங்குதல் என்பதும், இணங்க வைத்தல் என்பதும் எந்த வடிவத்திலும், எந்த இடத்திலும் இருக்கலாம் என்பதை வரலாறு காட்டுகின்றது. சமூக உயிரியாக இணைந்து வாழாத எல்லாவிடத்திலும், தனியுமைமைவாத அதிகாரமும், வன்முறையும், மோசடிகளும்.. தொடர்து அரங்கேறுகின்றது. ஆணாதிக்கத்திற்கு விதிவிலக்கு என்ன?

17.04.2025