நேற்றைய தினம் லண்டன் வெஸ்ட்மினிஸ்டர் பாராளுமன்ற சதுக்கத்திற்கு அருகாமையில் சமவுரிமை இயக்கத்தால் ஒழுங்கு செய்யப்பட்டிருந்த "அரசியல் கைதிகளை விடுதலை செய்" போராட்டம் சர்வதேசத்து மக்களின் கவனத்தை ஈர்க்குமுகமாக நடாத்தப்பட்டது. இந்த நிகழ்வில் சிங்கள- தமிழ் மக்கள் கலந்து கொண்டு கோசங்களை எழுப்பி அரசியல் கைதிகளை உடனடியாக விடுதலை செய்யக்கோரினர்.
இந்நிகழ்வு நிகழ்ந்த இடத்திற்கு அருகாமையில் பிரித்தானிய அரசின் தொழிலாளர் விரோதப் போக்குக்கு எதிராக பல ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் கலந்து கொண்ட பேரணியும் பொதுக் கூட்டமும் இடம் பெற்றது. இதில் கலந்து கொண்ட தொழிலாள்களின் கவனத்தை சமவுரிமை இயக்கத்தின் இந்தப் போராட்டம் ஈர்த்திருந்தது. பலர் சமவுரிமை இயக்கத்தின் போராட்டம் நிகழ்ந்து கொண்டிருந்த இடத்திற்கு வந்து தோழர்களுடன் உரையாடி துண்டுப்பிரசுரத்தையும் பெற்றுச் சென்றதுடன் தமது ஆதரவினையும் தெரிவித்திருந்தனர். மேலும் பல உல்லாச பயணிகளையும் இந்த போராட்டம் கவனத்தை ஈர்த்திருந்ததும் குறிப்பிடத்தக்கது.
சமவுரிமை இயக்கத்தின் தோழர்கள் இந்த பேரணி மற்றும் பொதுக் கூட்டம் நிகழ்ந்த இடத்திற்கு சென்று பல நூற்றுக்கணக்கான துண்டுப்பிரசுரங்களை விநியோகித்தது குறிப்பிடத்தக்கது. மேலும் பிரித்தானிய காவல்துறை பெண் அதிகாரி ஒருவர் பல கைதிகள், பல வருடங்களிற்கு மேலாக குற்றம் ஏதும் சுமத்தப்படாமல் தடுத்து வைத்திருப்பது தனக்கு அதிர்ச்சி அளிப்பதாக தெரிவித்திருந்தார்.
மேலதிக படங்களை காண இங்கே அழுத்தவும்