நவம்பர் புரட்சி நாளை நெஞ்சில் ஏந்துவோம்!
புதிய ஜனநாயகப் புரட்சிக் கனலை மூட்டுவோம்!!

1917 நவ 7.

"உழைக்கும் மக்களால் வாழவே முடியாது,
இதில் ஒரு நாட்டை ஆளமுடியுமா?"என்று இறுமாப்புடன்
ஏளனம் பேசியது முதலாளித்துவம்.


உழைக்கும் மக்களால் மட்டுமே
இழிவான தனியுடைமைச் சுரண்டல் இல்லாமல்
ஒரு நாட்டை ஆளமுடியும்
என்ற உண்மையை எடுத்துக் காட்டியது கம்யூனிசம்.


பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில்
உழைப்பவர்க்கே அனைத்து அதிகாரங்களும் என்ற
உயரிய நாகரிகத்தை - ஒரு சோசலிச அரசை
உலகுக்கு அறிவித்தது ரசியப்புரட்சி.

ரசியாவிலும், சீனாவிலும் - முதலாளித்துவ மீட்சி,
ஈராக்கிலும், ஆப்கானிலும் அமெரிக்கக் கந்தகம்.
ஈராக்கிலும், பாலஸ்தீனத்திலும் நேரடியாக நுழையும்
அமெரிக்கத் தலைமையிலான இராணுவக் கம்பெனிகள்

123 லெ·ப்ட் ரைட்
ஒப்பந்தத்தைத் திணித்து
அரைகுறை இறையாண்மையையும் பறித்து
இந்தியாவை அடிமையாக்கி
ஆசிய அடியாளாக்கவும் துடிக்கிறது
உலக ரவுடி அமெரிக்கா

ஏனைய நாடுகளையும், இந்தியாவையும் மறுகாலனியாக்கும்
ஏகாதிபத்தியங்களின் பன்னாட்டுக் கம்பெனிகள்;
விவசாயத்தைச் சின்னாபின்னமாக்கி
அடிமாட்டு விலைக்கு நம் நிலத்தைப் பிடுங்கிக் கொள்ளும்
அந்நியக் கம்பெனிகளுக்கே சிறப்புப் பொருளாதார மண்டலங்கள்.

விளைப்பொருளுக்கு விலையின்றி வேலை வாய்ப்புக்கு வழியின்றி
அலைக்கழிக்கப்படும் நமக்கும் நம் வாரிசுகளுக்கும்
மலேசிய நீல் மெட்டலின் குப்பைத் தொட்டிகள்.
சீரழிய வழி நெடுக டாஸ்மார்க் புட்டிகள்.

வர்க்க உணர்வை சீரழிக்க
பார்ப்பன இந்துமதவெறிப்
பாசிஸ்டுகளின் இராம அவதாரங்கள்
உழைக்காமல் உடலை வளர்க்கும்
ஊதாரிச் சாமியார்களின் ஆன்மீகப் போதனைகள்.

ஆற்றுநீரும், ஆழ்கடலும், நீள் மலையும்
காற்று மண்டலமும் பன்னாட்டுக் கம்பெனிகளுக்கு
அவன் கார் கம்பெனி கருக்கிவிடும்
தூசு மண்டலமும் தொற்று நோயும் நமக்கு.

பன்னாட்டுக் கம்பெனிகள் காட்டுவதைப் படித்து
பன்னாட்டுக் கம்பெனிகள் நீட்டுவதைக் குடித்து
இந்நாட்டுக் குடிமகன் போல் என்னமாய் நடித்து
போதும்...... இன்றோடு இந்தக் கேவலத்தை நிறுத்து!

அந்நியனுக்குப் பண்ணைவேலை செய்யும்
ஒரு கால் செண்டர் வேலையா உன் கனவு?
நம்முடையது இந்த நாடு, நமக்கெதற்கு அந்நியக் கம்பெனிகள்?

நாடு நம்முடையது என்றால்....
உழைக்கும் மக்களுக்கே அதிகாரம் என்றால்....
எண்ணிப்பாருங்கள்.... இது தான் உண்மையான மகிழ்ச்சி!
இனைந்து செயலாற்ற வாருங்கள்,
இங்கும் நடக்கும் ஒரு நவம்பர் புரட்சி!

பார்ப்பன இந்து மதவெறிப்
பாசிசத்தை வேரறுப்போம்!
தமிழகத்தில் வேரூன்ற அனுமதியோம்!

ஆபாச, நுகர்வு வெறிக் கலாச்சாரத்தைத்
தூக்கி எறிவோம்!

அருவெறுப்பான பிழைப்புவாதக்
கண்ணோட்டத்தைத் துடைத்தெறிவோம்;
அனைத்து உழைக்கும் மக்களுக்கான
புரட்சி அரசியலைப் படைத்திடுவோம்!

மறு காலனியாக்கத்தை முறியடிப்போம்!
புதிய ஜனநாயகப் புரட்சியை முன்னெடுப்போம்!

[மக்கள் கலை இலக்கியக் கழகம் - நவம்பர் புரட்சி நாளை முன்னிட்டு வெளியிட்ட நோட்டீஸ் -ல் இருந்து பிரசுரிக்கப்பட்டு உள்ளது.]