நிலவும் இன முரண்பாட்டைப் பயன்படுத்தாது, அதற்கான தீர்வை முன்வைக்கும் சுயநிர்ணயத்தையே ஏகாதிபத்தியம் பயன்படுத்தும் என்ற வாதம், மார்க்சிய வர்க்க அரசியல் உள்ளடக்கத்தில் இருந்து விலகிச் செல்வதாகும். இதன் அரசியல் அர்த்தம் இனமுரண்பாட்டை நியாயப்படுத்தும் கோட்பாடாக சுயநிர்ணயத்தைக் காட்டி, இறுதியில் அதை நிராகரித்து விடுவதாகும்.
முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சி நடைபெறாத நாடுகளில் எழும் தேசியம் பாட்டாளி வர்க்க கோரிக்கை அல்ல, மாறாக முதலாளித்துவக் கோரிக்கையாகும். அதேநேரம் தேசியம் ஜனநாயகக் கோரிக்கையே ஒழிய, ஏகாதிபத்தியக் (நலன் சார்ந்த) கோரிக்கை அல்ல. இந்த வகையில் இது ஏகாதிபத்தியத்துக்கு எதிரான அரசியல் கோரிக்கை. இதை நாம் அரசியல்ரீதியாக, முரணற்ற வகையில் புரிந்து கொள்ளவேண்டும். இதில் பாட்டாளி வர்க்கத்துக்கு எந்தவிதமான அரசியல்ரீதியான குழப்பம் இருக்கக் கூடாது.