"புத்திஜீவிகள்" "முற்போக்காளர்கள்" என்று தங்களைக் கூறிக் கொள்ளும் - காட்டிக் கொள்ளும் தமிழர்களின் சிந்தனை முறை, வெள்ளாளியமாக இருக்கின்றது. வெள்ளாளியச் சமூக வாழ்க்கை முறையில் வாழும் மக்களிலிருந்து இந்த "புத்திஜீவிகள்" வெள்ளாளியத்துக்கு எதிரான நடைமுறைகள் மூலம் வாழ்வதற்கும் – அதற்காகப் போராடுவற்கும் தயாரில்லை. முன்னுதாரணமான நடைமுறையைக் காணவும், காட்டவும் முடியாது உள்ளனர். இதை மூடிமறைக்க

1.எங்கள் பிறப்பு எங்கள் குற்றமா என்று கேட்டு, பிறப்பைக் கொண்டு வெள்ளாளியத்தை, ஆணாதிக்கத்தை.. எல்லாம் குறுக்கி விளக்க முற்படுகின்றனர்.

2.தங்கள் மனிதாபிமான செயலைக் கொண்டு, தம்மை முன்னிறுத்துவது. உதாரணமாக பெண்கள், ஒடுக்கப்பட்ட மக்களுடனான உதவி மற்றும் நடத்தையைக் கொண்டு தன்னை வெள்ளாளியத்துக்கும், ஆணாதிக்கத்துக்கும்.. எதிரானவனாக நிறுவ முனைவது.

3.தங்கள் முரண்பட்ட கருத்துக்கள் - எழுத்துக்களைக் கொண்டு தங்களை வெள்ளாளியத்துக்கு, ஆணாதிக்கத்துக்கு எதிரானவராக முன்னிறுத்துவது

தண்ணி அடிக்க ஊறுகாய் தேவைப்படுவது போல், அரசியல் - இலக்கியம் பேசும் அக வெள்ளாளியத் தனத்துக்கு ஒடுக்கப்பட்ட மக்கள் பயன்படுத்தப்படுகின்றனர். தமிழ் அரசியல் இலக்கிய உலகில் இந்த வெள்ளாளிய நரித்தனமே, பகல் வேசம் போட்டு நிற்கின்றது.

இந்தப் பின்னணியில் தமிழ் அரசியல், இலக்கிய சிந்தனை முறைகள் அனைத்துமே வெள்ளாளியமாக இருப்பதுடன், அதையே "முற்போக்கு" என்றும் "புத்திஜீவித்தனம்" என்றும் பீற்றுகின்ற – நம்புகின்ற மனநிலையும் காணப்படுகின்றது. கடந்தகால போராட்டம் மட்டுமல்ல போராட்டம் குறித்த விமர்சன அரசியலும் வெள்ளாளியக் கண்ணோட்டத்தைக் கொண்டு காணப்படுகின்றது.

2009 வரையான யுத்தகாலத்தில் புலிகளின் வெள்ளாளியச் சிந்தனையிலான சமூக வாழ்வியல் முறை மட்டும் எம்மை அழிக்கவில்லை, புலிக்கு வெளியில் செயற்பட்ட புலம்பெயர் அரசியல் இலக்கியமும் முரண்பட்ட அக வெள்ளாளியத்தையே மாற்றாக முன்வைத்தது. இதுதான் அன்றைய அழிவுக்கும், இன்றைய சமூக பின்னடைவுக்கும் அடிப்படைக் காரணமாகும்.

இந்த வகையில் கடந்தகாலம் குறித்த விமர்சன அரசியல் முதல் இலக்கியம் வரை, வெள்ளாளிய சமூக உள்ளடக்கத்தை காய்வெட்டித்தான் முன்வைக்கப்பட்டு வருகின்றது. நிகழ்கால அறிவியல் இதற்குள் புளுக்கின்றது.

தோற்றுப்போன போராட்டங்கள் தொடங்கி இன்றைய சமூக ஓடுக்குமுறைகள் வரை, இந்த வெள்ளாளியச் சிந்தனையிலான வாழ்க்கை முறைக்குள் குறுகிக் கிடக்கின்றது. இதனால் தமிழ் சமூகம் முன்னுதாரணமிக்க சமூகமாக முன்னிறுத்த முடியாத சிந்தனை முறையில் சிக்கி, பாதாளத்தில் வீழ்ந்து கிடக்கின்றது.

இப்படி இருக்க வெள்ளாளியச் சமூக வாழ்க்கைமுறையை தழுவிக் கொண்ட மக்கள் கூட்டத்தில் இருந்து முரண்பட்ட எங்கள் "புத்திஜீவித்தனத்தை" எப்படி வெள்ளாளியமாக கூற முடியும் என்று பலர் முணுமுணுப்பதை தொடர்ந்து காணமுடிகின்றது.

இப்படி முணுமுணுக்கின்றவர்கள் இந்தியாவில் பார்ப்பனிய சமூகமாக இருப்பதை போன்று இலங்கையில் வெள்ளாளியச் சமூகமாக தமிழ்ச் சமூகம் இருப்பதை கண்டுகொள்வதில்லை. இதன் பொருள் அதை மறுக்கின்றனர்.

வெள்ளாளியச் சமூகத்தை வெள்ளாளியச் சமூகமாக முன்னிறுத்தாத எல்லாச் சிந்தனை முறையும், வெள்ளாளியம் தான். இதை முன்வைக்காத தலித்தியமாகட்டும், அதுவும் வெள்ளாளியம் தான்.

இலங்கை தமிழ் சமூகத்தை சாதியச் சமூகமாக வரையறுப்பதும், யாழ் மையவாத சமூகமாக அடையாளப்படுத்துவதும், வெள்ளாளியத்தை மூடிமறைக்க உதவும் ஒரு கருவிகளாகவே வெள்ளாளியச் சிந்தனைமுறையால் பயன்படுத்தப்பட்டு வந்திருக்கின்றது. இதுதான் இன்றைய எதார்த்தம்.

தேசங்களின் சுயநிர்ணயத்தை எப்படி இனவாதிகள் தங்கள் பிரிவினைவாதத்துக்கு பயன்படுத்துகின்றனரோ, அதேபோன்று தான் வெள்ளாளியத்தை மூடிமறைக்க வெள்ளாளியமல்லாத சொற்களைப் பயன்படுத்துவதுவதன் மூலம், தங்களை சாதிக்கு எதிரான புத்திஜீவிகளாக முன்னிறுத்துவதே - அரசியல் இலக்கியத்தில் நடந்தேறுகின்றது. இதுவே இன்று வரலாறாகவும் முன்வைக்கப்படுகின்றது.

வெள்ளாளிய அக முரண்பாட்டை "முற்போக்காகவும்", "புத்திஜீவித்தனமாக" அங்கீகரிக்கவும் கோரும் இந்த வெள்ளாளியத்தையே, தமிழ் சமூகத்தின் மாற்றாக முன்வைப்பதுடன், அதை நம்புவதும் - காட்டுவதும் நடக்கின்றது. தமிழ் சமூகமானது வெள்ளாளியச் சாதிய சமூகமாக குறுகிக் கிடப்பதற்கு, இதுதான் காரணம்.

வெள்ளாளியச் சிந்தனைமுறை பிறப்பைக் கொண்டு வரையறுப்பதில்லை. வாழ்க்கை முறையைக் கொண்டு வரையறுக்கப்படுகின்றது. இந்த வெள்ளாளியச் சமூக வாழ்க்கை முறையை மாற்றும் வாழ்க்கைப் போராட்டத்தை நடத்தாத செயற்பாடுகள், கருத்தியல் என அனைத்தும் வெள்ளாளியத்தின் மற்றொரு மறுபிரதிதான்.

சிந்தனை முறையை தனிமனித தனத்தில் இருந்தோ, அமைப்பு சார்ந்தோ மதிப்பிடுவதென்பது, அடிப்படையில் மூடிமறைக்கப்பட்ட வெள்ளாளியம் தான்;. சிந்தனை முறையானது சமூக பொருளாதார கட்டமைப்பிலானது. சமூக பொருளாதார கட்டமைப்பை சார்ந்து சிந்திக்கின்ற சிந்தனை முறையானது, அந்த சமூக கட்டமைப்பிலானது.

ஆண் மட்டும் ஆணாதிக்கச் சிந்தனையைக் கொண்டு இருப்பதில்லை. முதலாளி மட்டும் முதலாளித்துவச் சிந்தனை முறையை கொண்டு இருப்பதில்லை. வெள்ளாளனாக பிறப்பவன் மட்டும் வெள்ளாளியச் சிந்தனையைக் கொண்டு இருப்பதில்லை. வெள்ளை நிறத்;தவன் மட்டும் நிறவாத சிந்தனையைக் கொண்டு இருப்பதில்லை. இதுபோல் தான் மதவாத, இனவாத சிந்தனை முறைகளும்.

இவை சமூகத்துக்கு வெளியில் தனித்து இயங்குவதில்லை. முழு சமூக பொருளாதாரக் கட்டமைப்பு ஆணாதிக்கமாக, முதலாளித்துவமாக, வெள்ளாளியமாக.. இயங்குகின்றது. இது ஓன்றுடன் ஓன்று தொடர்புபட்டு, ஓன்றையொன்று சார்ந்தும் இயங்குகின்றது. இதை ஒருங்கிணைந்த முறையில் கேள்விக்குள்ளாக்காத சிந்தனை தொடங்கி நடைமுறைகள் அனைத்தும் - இந்த சிந்தனை முறையின் மறுபிரதி தான். ஓன்றுடன் ஒன்று தொடர்பு கொண்டதால் ஓன்றை விலக்கி ஒன்றை மட்டும் தனித்து அணுக முடியாது. அப்படி அணுகுவது என்பது, மூடிமறைக்கப்பட்ட மறுபிரதி தான்.

மிகத் தெளிவாக இந்த வெள்ளாளியமானது சமூக பொருளாதாரக் கட்டமைப்பில் மாற்றத்தை முன்வைத்த செயலையோ, கருத்தையோ முன்வைப்பதில்லை. வெள்ளாளியச் சீர்திருத்தத்தை கொண்டு, தன்னை முன்னிறுத்தி இயங்குகின்றது.

இந்த "முற்போக்கு" தனம் அசலான வெள்ளாளியத்தின் மறுபிரதி மட்டுமின்றி ஆபத்தான படுபிற்போக்கான வெள்ளாளியத்தனமாகும். இன்று தமிழ் "புத்திஜீவிகள்" என்றும் "இடதுசாரிகள்" என்றும் கூறிக்கொண்டும் - காட்டிக்கொண்டும் உலாவுகின்ற பின்னணியில், இந்த வெள்ளாளியத் தனமே காணப்படுகின்றது.

சமூக பொருளாதார கட்டமைப்பில் ஒடுக்கப்பட்ட மக்களை சார்ந்து தங்களை முன்னிறுத்திய கருத்துகளையோ, செயற்பாடுகளையோ இந்த வெள்ளாளியம் முன்வைப்பதில்லை. இது முதலாளித்துவச் சிந்தனைக்கும் பொருந்தும், ஆணாதிக்க சிந்தனைக்கும் பொருந்தும். எல்லா வகையான சமூக ஒடுக்குமுறையிலான சிந்தனைக்கும் பொருந்தும். இவை ஒருங்கிணைந்த சமூகமாகும் போது, ஒரு சிந்தனை முறை அதை வழிநடத்தும். இந்தியாவில் பார்ப்பனியம் இருப்பது போல், இலங்கைத் தமிழரை வெள்ளாளிய சிந்தனை வழிநடத்துகின்றது. கடந்தகால இயக்க அரசியல், இந்த வெள்ளாளியத்தின் தோற்றுவாய்தான். இது இன்றுவரை மூடிமறைக்கப்படுகின்றது. இன்று தங்களின் வெள்ளாளிய வாழ்க்கை முறைக்கு ஏற்ப, பூசிமெழுகும் வெள்ளாளிய இயக்க வரலாறுகள் பல தொடர்ந்து எழுதப்படுகின்றது.

இப்படி இன்றைய அரசியல், இலக்கியம், வரலாறுகள் எதுவும், கடந்த மற்றும் நிகழ்கால தமிழ் வெள்ளாளியத்தை கேள்வி கேட்பதில்லை. வெள்ளாளியத்தின் அக முரண்பாடே விமர்சனமாக மாறி, சமூகத்தையே முடக்கி - குட்டிச் சுவராக்குகின்றது. முரண்பட்ட வெள்ளாளியமே இன்று அறிவியலாக – வெள்ளாளிய சிந்தனை முறையால் கொண்டாடப்படுகின்றது.