கடந்த ஜூன் 24ஆம் தேதி நள்ளிரவிலிருந்து சமையல் எரிவாயு சிலிண்டருக்கு 50 ரூபாய், டீசல் விலை லிட்டருக்கு 3 ரூபாயஇ, மண்ணெண்ணெய் லிட்டருக்கு 2ரூபாய்  என விலையேற்றத்தை அறிவித்து நாட்டு மக்களின் மீது மீண்டும் பொருளாதாரச் சுமையைத் திணித்துள்ளது. சர்வதேசச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை அதிகரிப்பு, பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் சந்தை விலைக்குக் குறைவாக பெட்ரோலியப் பொருட்களை விற்பதால் ஏற்படும் நட்டம், சமையல் எரிவாயு முதலான வற்றுக்கு அரசு அளிக்கும் மானியத்தால் ஏற்படும் நிதிப்பற்றாக்குறை  என்ற வழக்கமான பொய்களைக் கூறி விலையேற்றத்தை நியாயப்படுத்தி வருகிறது.

 

இப்பொருளாதாரத் தாக்குதலுக்கு எதிராக, ஓசூரில் இயங்கிவரும் பு.ஜ.தொ.மு., தோழமை அமைப்பான வி.வி.மு.வுடன் இணைந்து 25.6.2011 அன்று ஓசூர் ராம்நகர் அருகில் திரளான உழைக்கும் மக்கள் பங்கேற்புடன் மாபெரும் ஆர்ப்பாட்டத்தை நடத்தியது. இந்த விலையேற்றம் என்பது பன்னாட்டு மற்றும் உள்நாட்டு கார்ப்பரேட் முதலாளிகளின் கொள்ளை இலாப வேட்டைக்காக நடை முறைப்படுத்தப்படும் தனியார்மயதாராளமயத்தின் கொடிய விளைவுதான் என்பதை உணர்த்தி, விண்ணதிரும் முழக்கங்களுடன் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டம் மக்களிடம் பெருத்த தாக்கத்தை ஏற்படுத்தியது.

 

பு.ஜ.செய்தியாளர், ஓசூர்.