திடீர் இடதுசாரிகள் இப்படித்தான் திடீர் திடீரென புரட்சி செய்கின்றனர். அமெரிக்காவுடன் இந்தியாவுடன் நின்று அரசியல் செய்வதென்பதை நூறு கருத்துக்களாக காட்டி, இதன் மூலம் நூறு பூக்கள் மலர முடியும் என்கின்றனர். இப்படி 1983 களில் தொடங்கி 2009 இல் முள்ளிவாய்க்காலில் முடிந்து போன தமிழ் தேசியத்தின் பின், இந்தியா முதல் அமெரிக்கா வரை வழிகாட்டி அழித்ததை நாம் மறக்கத்தான் முடியுமா? மீண்டும் அதையே இனியொருவும், புதியதிசையும் இடதுசாரியத்தின் பெயரில் புரட்டுத்தமாக முன்தள்ளுகின்றனர்.

இலங்கையில் மகிந்தா அரசுக்கு எதிராக, "பிரிந்து போகும் சுயநிர்ணயத்தை" (அதாவது தமிழீழத்தை) முன்வைக்கும் அனைவருடனும் கூட்டுச் சேர்வதுதான் இடதுசாரியம் என்கின்றனர். இப்படி இடதுசாரியம் பேசும் மே18 யும், இனியொருவும், புதிய திசையும் மார்க்சியத்தை தமக்கு ஏற்ப அங்குமிங்குமாக திரித்து வருகின்றனர்.

10.04.2011 அன்று "நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்ற பெயரில் அரங்கேற்றிய கூத்து போன்று, மே 18 கூத்து கனடாவில் அரங்கேறவுள்ளது.

"நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்று கூறிக்கொண்டு, இந்தியா முதல் அமெரிக்கா வரை புலியுடன் கூடி தமிழ் மக்களை வழிகாட்டுகின்றனர். இதன் மூலம் வலது இடதுமற்ற ஒரு தமிழ்தேசிய அரசியல் வெளியையும், இந்திய றோ முதல் அமெரிக்க சீ.ஐ.ஏ. வரை உள்ளடங்கிய நூறு கருத்துக்களை நூறு ப+க்;களை காட்ட முற்படுகின்றனர். என்ன வக்கிரம்;!

அண்மையில் சோனியாவை சந்தித்த பின் குடுகுடுக்காரன் போல் வழி பிறக்கும் என்றவர்களும், அமெரிக்காவின் தென்னாசிய பிரதிநிதி ரொபேர்ட் ஒ பிளக்குடன் கூடி தமிழ் மக்களை வழிகாட்டியவர்களும், டெல்லி நோக்கி நடைப்பயணம் நடத்தி தமிழ் மக்களை மொட்டை அடிக்கும் ஈ.டி.எல்.எல்.எவ்.வும் முன்வைப்பது கூட நூறு கருத்துகளில் ஒன்றுதான் என்று கூறி, அவைகளையும் நூறு பூக்களாக காட்டுகின்றனர். இதுதான் இனியொருவும், புதிய திசையும் முன்தள்ளுகின்ற தமிழ்தேசிய மார்க்சியம்;.

எதிரி யார்? நண்பன் யார் என்பதையே இது மறுக்கின்றது. இலங்கை அல்லாத எதிரியுடன் நிற்பதை நூறு கருத்தாகவும், தமிழீழத்தை அடையும் வழியில் நூறு ப+க்களாகவும் திரித்துக் காட்டுகின்றனர். அமெரிக்க, இந்திய சார்பு அரச பிரதிநிதிகளுடன் கூடுவதை "நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்று காட்ட முடியும் என்றால், மகிந்த அரசுடன் கூட இதை செய்யமுடியும் தானே!? அதையும் செய்வார்கள்.

மகிந்த அரசின் பின் இதே இந்தியாவும், அமெரிக்காவும் கூடி நின்றுதான், இந்த யுத்தத்தையும் இந்த இனப்படுகொலையையும் நடத்தி முடித்தது. இங்கு பிரிந்து செல்லும் சுயநிர்ணயமான தமிழீழத்தை முன்னிறுத்தி, வலதும் இடதுமற்ற முகமூடியை அணிகின்றனர். இந்த முகமூடியின் உதவியுடன் அமெரிக்கா வரை நூறு கருத்தாக காட்டி, பிரிந்து செல்லும் தமிழீழத்தை அடையும் வழியில் இவையும் நூறு பூக்கள் தான் என்கின்றனர். அமெரிக்கா பின் நிற்;கும் அரசியலிலும், இந்தியாவின் வழிகாட்டலிலும் "பிரிந்து செல்லும் சுயநிர்ணயக்" கருத்துக்கள் உண்டு என்கின்றனர்.

"நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்று மாவோ சொன்னது, ஒடுக்கப்பட்ட வர்க்கத்தினைச் சார்ந்து தான். அது வர்க்கம் கடந்ததல்ல. அதை தங்கள் கட்சி திட்டத்துக்குள் தான் மாவோ கோரினார். வர்க்கமற்ற எந்த அணுகுமுறையின் மேலுமல்ல. மார்க்சியவாதியின் அணுகுமுறை எப்போதும் வர்க்க நலனை முன்னிறுத்தியதாக, அதை மையப்படுத்தியதாக அமைய வேண்டும். வர்க்கமற்ற ஒடுக்கப்பட்ட இன அடையாளம் சார்ந்த நூறு கருத்து, நூறு பூக்கள் என்பது குறுந்தேசிய இனவாதமாகும். குறுந்தேசியத்தை முன்னிறுத்திய, அதன் வர்க்க குணாம்சத்தை மூடிமறைத்து மக்களை ஏமாளியாக்குகின்ற அரசியல் பித்தலாட்டம். இது போன்று தான் 1983 களில் இப்படித்தான் இடதுசாரியம் பேசி, வலதுசாரியத்தை தமிழ்தேசியமாக்கி போராட்டத்தை சிதைத்து மக்களை ஒடுக்கினர்.

மாவோவின் வர்க்க அடிப்படையை வர்க்கமற்ற தேசியத்தின் பின் திரித்து அமெரிக்கா வரை வழிகாட்டுகின்றனர். இதைத்தான் "பிரிந்து செல்லும் சுயநிர்ணயவுரிமை" என்கின்றனர். இது மற்றொரு அப்பட்டமான திரிபு. சுயநிர்ணயம் என்பது தான் மார்க்சியம். "பிரிந்து போவது", "ஐக்கியம்" தான் என்று நிபந்தனை போட்டு சுயநிர்ணயத்தை காட்டுவது, குறுந்தேசிய பெருந்தேசிய இனவாத தேசியமாகும். "பிரிந்து போவது", என்ற பிரிவினையையும், "ஐக்கியம்" என்று பெயரில் ஐக்கியத்தையும், முறையே குறுந்தேசிய பிரிவினைவாதிகளும் பெரும் தேசிய ஐக்கியவாதிகளும், சுயநிர்ணயத்தின் பெயரில் சுரண்டும் வர்க்கம் சார்ந்து அதைத் திணிக்க முற்படுகின்றனர். பாட்டாளி வர்க்கம் முன்னிறுத்திய சுயநிர்ணயம் இதுவல்ல. அது "பிரிந்து" அல்லது "ஐக்கியம்" என்று நிபந்தனை விதிப்பதில்லை. இது இரண்டு விடையத்தையும் உள்ளடக்கிய, ஒடுக்கப்பட்ட மக்களின் ஐக்கியத்தை முன்னிறுத்திய சுயநிர்ணயத்தை முன்வைக்கின்றது.

இங்கு "பிரிந்து செல்லும் சுயநிர்ணயவுரிமை" தமிழ் பாட்டாளி வர்க்கம் முன்வைப்பது தான் சரியானது என்றால், ஐக்கியத்தை முன்னிறுத்திய சுயநிர்ணயத்தையா சிங்களப் பாட்டாளி வர்க்கம் முன் வைக்கவேண்டும்? மார்க்சியத்தை புதியதிசையும், இனியொருவும் புரட்டிப் போட்டு அதன் மேல் பித்தலாட்டம் செய்கின்றனர்.

இதற்கு அமைவாக "பிரிந்து செல்லும் சுயநிர்ணயத்துக்குள்" "நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்று கூறிக்கொண்டு குறுந்தேசியத்தை அமெரிக்;க ஏகாதிபத்தியம் வரை பூக்கும் என்று கூறி வழிகாட்டுகின்றது.

இந்திய றோவின் சதிகார அமைப்பான ஈ.என்.டி.எல்.எவ் பிரதிநிதி உள்ளடங்க, சோனியா முதல் அமெரிக்கா வரை நக்கிய புலியிஸ்டுகஞடன், மார்க்சியத்தின் பெயரில் புதிய திசையும் இனியொரு கும்பலும் கூடி "நூறு கருத்துக்கள் மோதட்டும் நூறு பூக்கள் மலரட்டும்" என்கின்றனர். இதை வர்க்கப்போராட்டம் என்கின்றனர். இதை சர்வதேசிய மார்க்சியவாதிகளும் ஆதரிப்பதாக காட்ட, நேபாள மாவோயிஸ்டுகள் முதல் ம.க.இ.க வரை தம்முடன் தம் அரசியலுடன் சேர்ந்து நிற்பதாக காட்டி புலுடா அரசியல் நடத்துகின்றனர். திடீர் அரசியல் வியாபாரிகள், பித்தலாட்டம் மூலம் தமிழ்மக்களை ஏமாற்றி அவர்களை; மீண்டும் புதைகுழிக்கு அனுப்ப முனைகின்றனர்.

 

பி.இரயாகரன்

14.04.2011