புலிகளின் பாசிசமோ ஜனநாயக விரோதமான சமூகத்தை நிலைநாட்டியதால், துரோகம் சார்ந்த ஒரு சமூகப் பிரிவை அது இடைவிடாது உற்பத்தி செய்தது. ஒப்பிட்டு அளவில் அரசுக்கும் புலிக்கும் இடையில், பாசிசத்தை கையாளும் அளவிலும், பண்பிலும், புலிகள் மிகவும் வக்கிரமாக இருந்தனர். இறுதி யுத்தத்தின் போதும், அதன் பின்னும் அரசு புலியை மிஞ்சியது.  புலிபாசிசம் ஆட்டம் போட்ட காலத்தில், மக்களிள் பிரதான எதிரி அரசாக தொடர்ந்து நீடித்தது, இங்கு உள்ள ஒரு முரண்நிலையாக இருந்தது. புலிகளின் மேலான அழித்தொழிப்பு அரசியலுக்கு எற்ப, அரசுக்கு பின்னால் ஒரு பெரும் பிரிவு மக்களை புலிப்பாசிசம் அணிதிரட்டி கொடுத்தது. குறிப்பாக புலிப் பாசிசத்தின் நிலையால் ஆயுதம் எந்திய மற்றும் எந்தாத நிறுவனமயப்படுத்தப்பட்ட துரோகக் குழுக்கள் கூட, ஒரு சமூகப் பிரிவாக வளர்ச்சியுற்றது.

போராட்டத்தின் பெயரில் உலகில் மிகப் பெரியளவிலான அழித் தொழிப்பை புலிகள் செய்த போதும், இது எதிர்மறையில் தமக்கு எதிரானவர்களை உற்பத்தி செய்தது. இந்த உண்மையை நாம் இலங்கையில் தெளிவாக கற்றுக் கொள்ளமுடியும்;. ஜனநாயக மறுப்புடன் கூடிய பாசிசமும், இதற்கான தண்டனை முறையும், எதிரிக்கு பெருமளவில் ஆட்களை சேர்த்துக் கொடுத்தது. ஆரம்பத்தில் இயக்கங்களாக போராடிய குழுக்களை ஈவிரக்கமின்றி அழித்தனர் புலிகள். அதன் உறுப்பினர்களை உயிருடன் வீதிகளில் எரித்தும் அடித்தும் கொன்ற போது, அவர்கள் தவிர்க்க முடியாத புலிகளிடமிருந்து தப்பியோட வேண்டி இருந்தது. புலியின் கையில் சிக்கிய எவரும், தொடர்ந்து உயிர் வாழமுடியாத அவலம் தமிழீழத்தின் பாசிச போரட்ட ஒழுக்கமாகியது. தப்பி ஒடியவர்களை அரசும், இந்தியாவும் அரவணைத்துக் கொண்டது. இப்படி தப்பி ஒடியவர்கள் தமது தற்காப்பைச் சார்ந்து அரசின் தயவில் தப்பிப் பிழைக்க முடிந்த நிகழ்வு, போராட்டத்துக்கு பாதகமான ஒரு தொடர்ச்சியான அழிவு அரசியலுக்கு அது இட்டுச் சென்றது. இது படிப்படியாக வளர்ச்சியுற்றது. இது சித்தாந்த ரீதியாகவே ஏகாதிபத்திய சார்பும், தமிழ் மக்களுக்கு எதிரான அரசியல் போக்கவும் வளர்ச்சி உற்றது.

 

புலிகளை சொந்தக் காலில் நின்று எதிர்க்க வக்கற்ற இந்தக் குழுக்கள், தம் இயலாமையில் மக்களையும் புலிகளையும் ஒன்றாக்கி எதிர்க்க தொடங்கினர். மக்களின் நியாயமான தேச விடுதலைப் போராட்டத்தையும் எதிர்த்து, எதிரியுடன் கூடி களத்தில் நின்றனர். அதை நியாயப்படுத்தும் அரசியல் பலம் பெற்றனர். இந்த நிலைக்கு, புலிகளின் ஜனநாயக விரோத பாசிசமே துணையான நின்றது. துரோகம், அரசியல் ரீதியாக ஜனநாயகத்தை முன்னிறுத்தி நியாயப்படுத்தப்பட்டது. இதற்கு அரசியல் ரீதியாக கருத்துரைக்கும் அளவுக்கு, புலிகளின் பாசிசம் வழிகாட்டியது. புலிகளின் ஜனநாயக விரோத அரசியல் பாசிசமாக மாறி மலடாகிப் போனதால், அரசியல் ரீதியாக புலிகள் பலவீனமானர்கள். இப்படி புலிகள் துல்லியமாக தாம் தமக்குள் தனிமைப்பட்டதால், படுகொலைகள் மூலம் தமது அரசியலை தொடர்ந்து வழிநடத்தினர்.

இதனால் அரசியல் ரீதியாக புலிகளின் பாசிசத்தை மட்டுமல்ல, துரோகக் குழுக்களின் அரசியல் மற்றும் அது முன்வைக்கும் ஜனநாயக சித்தாந்த்ததையும்; கூட, நாம் எதிர்த்துப் போராட வேண்டி இருந்தது. உலகளவில் எகாதிபத்தியங்கள் நடத்துகின்ற ஆக்கிரமிப்புகள் அனைத்தும், இந்த ஜனநாயகம் என்ற கண்ணியைத்தான் மக்கள் மேல் புதைக்கின்றனர். இதையே அரசுடன் சேர்ந்து கொண்ட துரோகிகளும், தமிழ் மக்களின் தேசவிடுதலைப் போராட்டத்துக்கு எதிராக புதைத்தனர். இதற்கமைய புலிப் பாசிட்டுகள் தாரளமாக துரோகிகளை நாள் தோறும் உற்பத்தி செய்தனர். உலகளாவிய ஆக்கிரமிப்புக்குரிய, தலையிட்டுகுரிய, மக்கள் விரோத அரசியல் தளத்தை, கூட்டாகவே இடைவிடாது உற்பத்தி செய்தனர். ஒன்றில் இருந்து ஒன்றை பிரிக்க முடியாத வரலாற்றச் சூழலில் நாம் போராட வேண்டியிருந்தது. இந்த நிலையில் இரு தளத்தில் எமது போராட்டம் தெளிவானதும் துல்லியமானதாகவும் மாறியது.

தொடரும்
பி.இரயாகரன்

7.இனவாத யுத்தம் மக்களின் அவலங்களை முடிவின்றி பெருக்கியது (வதை முகாமில் நான் : பாகம் - 07)

6. சிறுபான்மை தேசிய இனங்களுக்கு எதிராக சிங்கள பேரினவாதம் (வதை முகாமில் நான் : பாகம் - 06)

 

5.பாசிசம் கட்டமைத்த அரசியல் மீது (வதை முகாமில் நான் : பாகம் - 05)

4. புலியின் இந்த வதைமுகாமுக்கு முன்னும் பின்னுமான படுகொலை முயற்சிகள் (வதை முகாமில் நான் : பாகம் - 04)

 

3. மக்களை ஒடுக்கும் தேசியம், பாசிசத்தை விதைக்கின்றது (வதைமுகாமில் நான் : பாகம் - 03)

 

2. 1987ம் ஆண்டு என் நினைவுக்குள் நுழைய முன்.. (வதை முகாமில் நான் : பாகம் - 02)

 

1.வதை முகாமில் நான் : மரணத்தை முத்தமிட்ட என் நினைவுகள் அழிவதில்லை - (வதை முகாமில் நான் : பாகம் - 01)