தேர்தற் களம்:

இன்றைக்கு, இலங்கை அரசியலில் நடந்தேறும் ஜனாதிபதித் தேர்தல்-அரசியல் வித்தைகளில் ஒழித்துக்கட்டபட்ட தமிழ்பேசும் மக்களின் உரிமைகளும்-உயிரும் இந்த அரசியலின் விளைபயனாக மேன்மேலும் விருத்தியாக அறுவடையாகிறது.இந்த அரசியல் ஈழத் தமிழனை ஒண்டிக் கொள்ள இடமற்றதாக்கியபின் அகதிக் கோலத்தோடு அடுத்தவர் தெருக்களில் அலையவிட்டுப் புலிகளின் „தமிழீழத்தில்“ புடம்போட்டு ஈழத்தைக் கனவுகாண வைத்தது அன்றும்-இன்றும்!

„KRIEG BEDEUTET FRIEDEN
FREIHEIT IST SKLAVEREI
UNWISSENHEIT IST STAERKE“-Dahn

யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக…

இறுதியான „ஈழயுத்தம்“ இலங்கைச் சிங்கள இராணுவத்தின் சில ஆயிரம் தலைகளை உருட்டிவிட்டால் „ஈழம்“மலர்ந்துவிடுவதாக எண்ணிக்கொண்ட குழந்தைகளுக்கு முள்ளி வாய்க்காலில் விடைகிடைத்தவுடன் இப்போது சரத்திடமும்,மகிந்தாவிடமும் இன்னுஞ்சிலருக்கு விக்கிரமபாகுவிடமும் தமிழருக்கான“தீர்வு“த் திறவுகோல் இருக்கிறதாகக் கனவு…

கடந்த காலங்களிலெல்லாம் இலங்கை இனப் பிரச்சனையுள் அந்நியத் தலையீடென்பதை „நமது அரசியல்“ இந்தியாவின் முட்டுக்கட்டையாகவே புரிந்து வைத்திருக்கிறது.இந்தப் புரிதலில் மக்களைத் திடமாக இருத்தி வைத்தவர்கள் நமது தமிழ் அரசியல் வாதிகள்தாம்.எனினும்,கடந்தகாலத்தில் புலிகளின் போராட்டச் செல் நெறி நம் மக்களை தமது அரசியல் முன்னெடுப்பிலிருந்து மெல்லத் தனிமைப்படுத்தி வந்துள்ள நிலையை இன்னும் உச்சப் படுத்தும் ஒரு உத்தியாகவே இந்த ஜனாதிபதித் தேர்தல் அமைகிறது.

இந்தவொரு நோக்குள் அமையப்பெற்ற பற்பல அரசியல் சூழ்ச்சிகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முரண்பாட்டைத் திசை திருப்பி, அதை வெறும் புலிப்பயங்கரவாதமாக்கி இலங்கையை ஒட்டச் சுரண்டுவதற்கும் அதன் கடல் வளத்தையும்,இராணுவ முக்கியத்துவம் வாய்ந்த துறைமுகங்களையும் இந்திய-சீனா மற்றும் அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்காகப் பயன்படுத்துவதையும் இலக்காகக் கொண்டே வளர்த்தெடுக்கப்படுகிறது.ஆனால், இந்த இலக்கைத் திட்டமிட்டு மறைத்து வரும் ஊடகங்கள்,நம் மக்களை நம்ப வைத்து நலம் அடிக்கும் அரசியலை „மகிந்தாவின் மனிதாபிமானித்தை“ பேசியும்-எழுதியும் தமது எஜமான விசுவாசத்தைச் செய்கின்றன.

வரும் ஜனவரி 26.2010, ஜனாதிபதித் தேர்தலில், சரத்துக்கும்,மகிந்தாவுக்கும் நன்றி விசுவாசமாக இலங்கை மக்கள் அனைவருமே இருக்க வேண்டுமெனக் கட்டளையிடும் இனம்சார் கட்சிகள், தமது எஜமானர்களது தயவில் தமது கட்சி இருப்பைக் குறிவைத்து இயங்குகின்றார்கள்.அண்மையில் அழித்தொழிக்கப்பட்ட புலிகளது போராட்டம் அந்நிய அடியாட் சேவையாக இருந்தது.அஃது, பிழையான வகையில் தமிழ் மக்களது எதிர்ப்பு அரசியலைக் கொண்டியங்கியது. சிங்களப் பேரினவாதத்தின்முன் ஒடுங்கி-அழிந்துபோகாதிருப்பதற்காகப் போரிட்ட தமிழ்பேசும் மக்களது நியாயமானபோர்- இனவொடுக்குமுறைக்கெதிரான போர் பரிதாபகரமாத் தோல்வியாகியது. இப்போது,அவ்வெதிர்ப்பு அரசியல் பாசிசப் புலிகளது அழிவுக்குப்பின் பயங்கரவாதமாகப் போயுள்ளது.இதைச் செவ்வனவே முள்ளிவாய்க்கால்வரைச் செய்து ஒப்பேற்றிவிட்டுப் புலிப்பினாமிகள் இப்போது வட்டுக்கோட்டைத் தீர்மானமென வம்பளக்கும்போது,துன்பமும் துயரமும் மேலும் தொடர்கதையாகப் போகிறது, இலங்கை வாழ் சிறுபான்மை இனங்களுக்கு.

நமது மக்களோ இந்த இனவழிப்பையெல்லாம் மறந்து,ஜனாதிபதி மகிந்தாவின்பின் மிகவும் பெருமையாகவும்-மகிழ்வாகவும் இருக்க முனைகிறார்கள்.அல்லது அங்ஙனம் இருக்கவைக்கப்படுகிறார்கள்.கூடவே, இலங்கையில் இனவொதுக்கல்-அரசபயங்கரவாதம் அற்ற சூழல் உருவாகிவிட்டதாகவும் நம்புகிறார்கள்.இத்தகைய நம்பிக்கை வெறும் மனவிருப்பாகவும்-புலிப் பாசிச ஒடுக்கு முறைகளுக்கு எதிரான மனோபாவத்தால் தீர்மானிக்கப்பட்டவொரு கூட்டுச் சமூதாய உணர்வாகத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலை பெறுகிறது.இஃது, ஒருவகையில் கட்சி-பாராளுமன்றக் கோமாளிகளை நம்பும் பழையபாணி அரசியல் மனோபாவத்தைத் தமிழ்ச் சமுதாயத்திடம் மீளவும் தோற்றி வைத்துத் தனிநபர் மீதான அதீத நம்பிக்கையையும்,தலைமை வழிபாட்டையும் இன்னும் அதிகமாகத் தூண்டும்.இத்தகைய ஒரு சமூக உளவியலை எமது எதிரிகள் விரும்பியே நமக்குள் விதைக்கவும் அதை வளர்த்தெடுக்கவும் தீராத மனவிருப்போடு செயலாற்றுகிறார்கள்.இவையெல்லாம் புதிய வடிவிலான நச்சு அரசியலாகும்.மகிந்தாவோ அல்லது சரத்தோ நமது மக்களது எதிர்காலத்தைத் தீர்மானிப்பவர்கள் அல்ல!மாறாக,இன்றைய நிதிமூலதனத்திடம் சரணாகதி அடைந்த இலங்கை ஆளும் வர்க்கத்தின் நலன்களது தெரிவில், அந்நியர்களே நமது மக்களது தலைவிதியைத் தீர்மானித்துச் செயற்படுகின்றனர்.அந்த வைகையற்றாம் இன்றைய முள்ளிவாய்க்கால் இனவழிப்புடனான புலி அழிப்பு நடந்தேறியது.

அந்நியச்சக்திகளது சதுரங்க ஆட்டம் இலங்கையில்:

இலங்கைத் தீவில் எண்ணை வளமோ அன்றிக் குறிப்பிட்டுச் சொல்லுமளவுக்குக் கனிப் பொருள் வளமோ கிடையாது.எனினும், இலங்கையின்மீது அமெரிக்காவுக்கும்,சீனாவுக்கும் நீண்ட நாள் கனவொன்றிருக்கிறது.அஃது, இலங்கையின் கேந்திர முக்கியத்துவம் நிறைந்த துறைமுகங்களும் இலங்கையின் புவிகோள இருப்புமேயாகும்.

இந்தக் கனவில் அமெரிக்காவுக்கான நலனை முதன்மைப்படுத்தும் அந்தக் காரியம்(அமெரிக்க ஆதிக்கம் வலுத்த இலங்கையும் அதன் துறைமுகங்கள் அமெரிக்கக் கடற்படைத் தளங்களாவதும்) நிகழ்ந்துவிட்டால் அமெரிக்காவினதும் மற்றும் மேற்கு ஐரோப்பாவினதும் வணிகத்துக்கு இன்னும் வலுக்கூடிவிடும்.இந்த வலு இலங்கையின் இராணுவ முக்கியத்துவம் பெற்ற துறைமுகங்கள்மீதான ஆதிக்கத்தைச் சார்ந்தே இருக்கிறது.இங்கு,மகிந்தா தலைமைதாங்கப்போகும் ஐக்கிய இலங்கைக்கு ஒரு இராணுவ யுத்தப்பேய் சரத் பொன்சேகாவடிவில் அமெரிக்காவுக்கான தெரிவாக, பாசிச மகிந்தா குடும்பத்தின்முன் சவால் விடுகிறது.இது,தமிழ்பேசும் மக்களது குரல்வளைகளில் பதித்த தனது கொடியபற்களை தேர்தலுக்குப்பின் மெல்லக்காட்டி மக்களைப் பயமுறுத்தும் காலமொன்றும் உருவாகலாம்!

இன்றைய வியாபாரப் போட்டியில் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்து துறைமுகங்களே நாளையச் சந்தையைத் தீர்மானிக்கும் வலுவுடையவை.உற்பத்தியானது இப்போது மேற்குலகை விட்டு வெளியேறி மூன்றாம் மண்டல நாடுகளின் கனிவளத்தையும்- குறைய+தியத்தையும் நீண்ட வேலை நேரத்தையும் குறி வைத்து இலங்கைபோன்ற நாடுகளுக்கு மாறி விட்டன.இத்தகைய நாடுகளிலிருந்து உற்பத்தியாகும் பொருட்களை கடற்போக்குவரத்துக் கட்டுப்பாட்டுக்குள் வைத்து இயக்கும்போது மட்டுமே சந்தையில் ஆதிக்கம் பெறும்“மார்க்“ வெற்றியோடு இலாபத்தைக் குவிக்கும்.இங்கே, இந்த அரசியல் மிகவும் அவசியமான தேவையாகப் பல் தேசியக் கம்பனிகளுக்கு இருக்கிறது.இதற்கான காரணம் வளர்ந்துவரும் சீனாவினதும்,இந்தியாவினதும் பாரிய உற்பத்தி ஊக்கத்திலிருந்து பரவலாக அறியப்பட்ட அவர்களது அதிவேகத் தயாரிப்புகளால் அரசியல் முக்கியத்துவம் பெறுகிறது.இந்தியாவுக்கு இக்கிழமை வருகை தந்த பங்காளதேஷ் அதிபரின்(Premierministerin Sheikh Hasina Wajed)முன் வாக்களிக்கப்பட்ட இந்தியக் கடன் நூறுகோடி டொலர்களாகும்.இந்தியா பங்காளதேஷ் இலங்கைபோன்ற நாடுகளைத் தனது அரைக் காலனியாகவே பயன்படுத்தி வரும்.இதற்காக அது,தனது பிராந்திய நலனுக்கிசைவான இராஜபக்ஷா குடும்பத்தை எப்பாடுபட்டும் காக்கும்.

புலிகளது அழிவுக்குப் பின்பான இன்றைய சூழலில்,அந்நிய மூலதனத்துக்கு எதிரானதும் இலங்கையின் அந்நிய எடுபிடி ஆளும் வர்க்கத்துக்கு எதிரானதுமான இன்றைய இலங்கையின் உழைப்புப் பிரிவினையானது அந்த நாட்டில் தொழிலாள வர்க்க ஒருங்கிணைவுக்கும் அது சார்ந்த எழிச்சிக்குமான சூழலைக் கொண்டிருப்பதாலும் இந்தச் சூழலை உடைப்பதும் இந்திய-சீன,அமெரிக்க-ஐரோப்பிய ஆர்வமாகவும் இருக்கிறது.இதில் இந்தியாவே முதலிடத்தில் இருக்கிறது.என்றபோதும், இந்தியா-சீனா மற்றும் அமெரிக்கா,ஐரோப்பாவுக்குமான இலங்கை மீதான அரசியல் இலாபங்கள்-எதிர்பார்ப்புகள் முற்றிலும் முரண்பாடானது.இதுள், இத்தகைய நாடுகள் முரண்படும்போது கட்சிசார் அரசியல் நடாத்தையில் வலுக்கள் கூடும் குறையும்.இதை நாம் பற்பல வடிவங்களில் கடந்த காலத்துள் எதிர்கொண்டோம்.இந்தியா இலங்கையைத் தனது வழிக்குள் கொண்டுவருவதற்காக விடுதலை இயக்கங்களைத் தனக்காகப் பயன்படுத்தியதும் பின்பு இலங்கையோடு ஏற்பட்ட உடன்பாடுகள்-தேன் நிலவோடு இயக்கங்களை நிராயுதபாணிகள் ஆக்கியதும்,இதுபோலவே புலிகளை மேற்குலகமும் அமெரிக்காவும் நிதி கொடுத்து வளர்த்ததும் பின்பு புலிகளது முதுகை உடைத்த ஆசிய மூலதனத்திடம் ஏமாந்ததும் இன்றைய வரலாறு!புலிகள் என்றவொரு அதி தீவிர வலதுசாரியப் பாசிச இயக்கமொன்று அமெரிக்க-ஐரோப்பிய நலன்களுக்கு மிகவும் அவசியமானதாக இருந்தது.அஃது, இப்போது ஆசிய மூலதனத்தால் அழிக்கப்பட்ட இடத்துக்குச் சரத் பொன்சேகாவாக வரமுடியும்.எனவே, புலிகள் இல்லாத தமிழ் அரசியலை ஈடுகட்ட யுத்தக்கிரிமனல் சரத் பொன்சேகாவை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆதரிப்பதுதாம் புலிகளது வெற்றிடத்தை நிரப்பும் அரசியல் முன்னெடுப்பாகிறது.ஒருபோதும் அமெரிக்க நலன்-ஐரோப்பிய நலன் இலங்கையை முற்றுமுழுதாக ஆசியப் பிராந்திய வல்லரசுகளிடம் மண்டியிட அனுமதியாது.இதைப் பண்டார நாயக்காவின் கொலையில் உரைத்துப் பார்க்க முடியும்.பாகிஸ்தானில், இந்துநேசியாவில் தாய்லாந்தில் எப்படி இராணுவ ஆட்சிகள் நடக்கிறதோ அவ்வகைப் பாணியிலான அரை இராணுவத் தன்மையிலான காட்டுமிராண்டிப் பாசிசக் குணம்சமுடைய அரச வடிவத்தை மூன்றாம் மண்டல நாடுகளில் இருத்திவைக்க விரும்பும் அமெரிக்க-ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் அரசியல் தந்திரோபாயத்தை இப்போது சரத் பொன்சேகாவினது அரசியல் பிரவேசத்தில் இனங்காண முடியும்.இது,இலங்கைச் சிறுபான்மை இனங்களது விடுதலைக்கு எதிரானதும்,அவர்களது உரிமைகளைப் பெறுவதற்கான தடைக் கற்களாகவுமே இருக்கும்.

ஆசிய-மேற்கு உலகங்களது மூலதனம்:

இங்கே,ஆசிய மூலதனமானது இந்தச் சூதாட்டத்தில் இலங்கையின் சிறுபான்மை இனங்களது முரண்பாடுகளை அரசியல்-பொருளாதார முறைமைகளோடு தீர்க்க முனையாதபோது இவ் முரண்பாடுகளைச் சாதகமாக்கிக்கொள்ள மேற்குலகத்துக்கு முடியும்.புலம் பெயர் தேசங்களிலுள்ள அனைத்துப் புலிக்கட்டமைப்பும் இத்திசைவழியில் மேற்குலகுக்குப் பயன்பாடானவர்கள்.புலம் பெயர்ந்த ஈரானியர்கள் இன்றைய ஈரானுக்கு எதிராக இருப்பதுபோல்.இந்நிலையில்,சங்காய் ஓர்க்கனேசேசன் கோப்பிரேசன் தனது தெரிவாகப் புலியை அழித்தபின் அவர்களோடு சேர்த்துத் தமிழ்பேசும் மக்களது நியாயமான அரசியல் கோரிக்கைகளை அழித்ததாகக் கனவு காணுமா அல்லது அரசியல் தீர்வை முன்வைக்குமா என்பதற்கு மகிந்தாவினது வெற்றியின்பின் சில தீர்மானகரமான முடிவுகளை எட்டியே ஆகவேண்டும்.

1: இலங்கை பூராகவும் இனப் பாகுபாடற்ற பொருளாதார முன்னெடுப்புகள்-அபிவிருத்திகள் நடந்தே ஆகவேண்டும்.யுத்தத்தால் பாதிப்படைந்த பொருளாதாரக் கட்டமைப்புகள் சீராக்கப்படுவதும்,யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களது வாழ்வாதாரங்கள் அவர்களது வாழ்வுக்கானதாகப் பயனெட்டுவதும்,குடிசார் அமைப்புகள்
சமூக வாழ்வைச் செப்பனிடுவதும்,குடும்பங்களை இணைப்பதும் அவசியம்.இதற்காகக் குடிசார் அமைப்புகள் செயலிழந்த கடந்தகாலத்தைத் தொடைத்து எறியவேண்டிய நிலையில் இலங்கை ஜனநாயகம் தன்னைப் புதிப்பித்தாகவேண்டும் இல்லை உயிர்த்திருக்க வேண்டும்.

2: இராணுவவாதம் மங்கி,குடிசார் நிறுவனங்களுக்குள் அரசியல் ஆதிக்கமும்,சிவில் சமூக ஆளுமைiயும் இணைந்துகொள்வது.அரசியல் ரீதியான இனஞ்சார் அதிகாரப்பரவலாக்கம் பொதுவான ஒருகிணைந்த இலங்கை அரச சட்டயாப்பாக மாற்றப்பட்டே ஆகவேண்டும்.இதுவே,தடையற்ற பொருளாதார முன்னெடுப்புகளை மேற்குலக மூலதனத்திடமிருந்து பாதுகாத்து ஆசிய மூலதனத்துக்குச் சாதகமான தெரிவுகளை வலுப்படுத்தும்.இது,மாகண சபைகளுக்கு சட்டரீதியான அதிகாரங்களைக் கையளித்தே ஆகவேண்டும் என்ற பொருளில் புரிக.

இவையிரண்டும் நேராதிருப்பதற்கான தெரிவுகளாக எதிர் தரப்பை மேற்குலகம் பயன்படுத்தும்போது,அதைப் புலம் பெயர்ந்த தமிழர்களும் சேர்ந்தே முன்னெடுப்பர்.இதைத் தடுப்பதற்கு முனையும் ஆசிய மூலதனத்துக்கு, இலங்கைவாழ் மக்கள் அனைவரையும் ஒருகிணைந்த இலங்கைக்குள் தேசிய இனமாக்கிக்கொள்வது அவசியமாகவே இருக்கிறது.இதைத்தாம்“நாம் அனைவரும் இலங்கையர்கள்,சிறுபான்மை இனங்கள் என்பது கிடையாது“என்ற மகிந்தாவின் கோரிக்கைக்குள் இனங்கண்டாக வேண்டும்.தவிர்க்க முடியாத இந்தப் பொருளாதார நகர்வுகள்-முரண்பாடுகள் மக்களினங்களை வலு கட்டாயமாக ஒரு தேசத்து நிலவரையறைக்குள் ஒன்றிணிக்கவே முனைகின்றன.இதைப் புரிய ஐரோப்பியக் கூட்டமைப்பின் உருவாக்கத்தையும்,ஐரோப்பிய மூலதனத்தின் போட்டிகளையும்,தனித்தனியாக ஐரோப்பிய நாடுகள் இருந்தபோது நேர்ந்த அரசியல்-போராட்டங்களையும் உற்று நோக்குவது அவசியம்.இதற்குப் „பழைய ஐரோப்பா“என்ற பதம் ஒரு குறியீடாக உலகத்துள் இன்றும் இருக்கிறது.

கண்டம்விட்டுக் கண்டம் பாயும் மேற்குலக நிதி மூலதனமானது மத்திய ஆசியாவின் எரிவாயு-மற்றும் மசகு எண்ணையோடும் மற்றும் கனி வளங்களோடும் சம்பந்தப்பட்ட இராணுவக் கேந்திர வலயமொன்றை இலங்கையைச் சுற்றி பின்னிவைத்திருக்க விரும்புகிறது.இது வளர்ந்துவரும் இந்திய மற்றும் சீனப் பொருளாதாரத்தை மட்டுப்படுத்தித் தமது உற்பத்திக்கு எதிரான போட்டியிலிருந்து தோற்கடிக்கப்பட வேண்டிய அரசியலோடு பின்னப்பட்ட விய+கமாகும்.இதற்காக இலங்கையை முற்று முழுதாக இந்தியாவினதும் சீனாவினதும் ஆதிக்கத்திலிருந்து விடுபட வைத்தாகவேண்டும்.அதற்கானவொரு அருமையான தேர்வாக இந்த ஜனாதிபதித் தேர்தலில் சரத் பொன்சேகவாயும்,தமிழ்தேசியக் கூட்டமைப்பையும் மேற்குலகம் பயன்படுத்துகிறது.அவ்கானிஸ்த்தானது மேற்குலக யுத்தத்தில் இலங்கையானது மேற்குலகச் சார்பு கட்சியால் அரசபரிபாலனஞ் செய்யப்பட்டால் தென்னாசியக் கடற் போக்குவரத்து மேலாண்மைக்கு மேலும் வலுக்கூடி இரட்டிப்பு வெற்றியை அவ்கான் யுத்தத்தில் எட்ட முடியும்.இது,பரவலான மேற்குலகப் புவிகோள வியூகமாகவே விளங்கத்தக்கது.

இந்த ஜனாதிபதித் தேர்தலில் முன்னாள் இராணுவத்தளபதி சரத் பொன்சேகாவை ஜனாதிபதி வேட்பாளராக மேற்குலகச்சார்பு ஐக்கிய தேசியக் கட்சியே ஏற்றுத் தேர்தலில் வேட்பாளராக முன்னிறுத்துவது அமெரிக்காவினது தெரிவு.இஃது,இலங்கை அரசின்மீதான இந்திய-சீனா ஆதிக்கத்துக்கு விழுந்த பாரிய அடியென்பதை இந்திய ஆளும் வர்க்கம் உடனடியாகவே புரிந்து கொண்டது.தென்னாசியப் பிராந்தியத்திலிருந்து இந்தியா,சீனா போன்ற இரண்டு பொருளாதார ஆதிக்கச் சக்திகளைத் தனிமைப்படுத்தும் அரசியலை அமெரிக்காவும் மேற்குலகமும் முழு முயற்சியாகச் செய்து வருகிறது.இந்தியாவின் சந்தையை வெற்றிகொண்ட மேற்குலகமும் அமெரிக்காவும் அதன் அரசியல் ஆதிக்கத்தையும் பொருளாதாரச் சந்தையையும் மெல்ல உடைப்பதின் ஒரு அங்கமே சரத்,ஐக்கிய தேசியக்கட்சி மற்றும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புகளது கூட்டு.இலங்கையில், இந்தியா-சீனா போன்ற நாடுகள் அதிகமாக ஆதிக்கத்தைச் செலுத்தி, இலங்கையை இந்தியாவினது-சீனாவினது செல்வாக்குக்கு உட்பட்ட நாடாக்கவே புலியழிப்பைக் கொள்கையாக வகுத்தது சங்காய் ஓக்கனேசன் கோப்பிரேஷன்!இங்கு, இவ்வமைப்பின் செல்வாக்கு என்பதன் மறுவடிவம் இந்திய-சீன,இருஷ்சிய ஆதிக்கத்துக்கு உட்பட்ட நாடு என்பதன் பொருளைக் குறித்து நிற்பதென்பதை இந்த மேற்குலகம் நன்றாகவே புரிந்து கொண்டது.இத்தகைய நாய்ச் சண்டையில் அடியாளாக இருக்கும் ஒவ்வொரு இனம்சார் கட்சிகளும்,அமைப்புகளும்- இயக்கங்கங்களும் தத்தமக்குரிய வேலைகளைத் தமது எஜமானர்களுக்காச் செயற்படுத்தும்போது“இலங்கைத் தேசியம்,தமிழ்,ஜனநாயகம்,மக்கள் நலன்,பசிபோக்குதல்,நிவாரணம்,மீள்கட்டுமானம்,பேச்சுரிமை,வாழ்வாதாரம்“என்று பற்பல முகமூடிகளைப் போட்டுக் கொள்கின்றன.புலம் பெயர் புலி மாபியாக்கள் இன்னமும் வட்டுக்கோட்டைத் தீர்மானத்துக்கூடாகத்“தமிழீழ“வரைபடம் காட்ட முனைதலும் இதன் ஒரு அங்கமே.

இயற்கை:

ஆசிய மூலதனம் ஒரு புறமும்,மறுபுறம் மேற்குலக மூலதனமாகப் உலகத்தின் கனிவளங்கள் சில குடும்பங்களது சொத்தாக மாறிவிட்டென.இதைச் சுற்றித் தேசங்களது அரசியல்,மக்களது அழிவுகள் நடந்தேறுகிறது.இயற்கை அனர்த்தங்களாக சீறிச் சொல்கிறது மனிதத் தவறுகளை.கெயிட்டியில் இலட்சம் மக்களது உயிர் கடந்து மூன்று நாட்களுக்குமுன் பறிக்கப்பட்டது.புவி அதிர்வு!

சுனாமி வந்த இலங்கை ஜனாதிபதித் தேர்தலில் மூலதனத்து முரண்பாடாக…

உலகத்தின் இன்றைய பொருளுற்பத்தியினது நோக்கமென்ன? அதன் இலாபவேட்கையானது மனித நாகரீகத்தை எங்ஙனம் காப்பாற்றப்போகிறது?

„இன்றைய மனிதர்கள் இப்படிக் கணக்கு வழக்கற்று கனிவளத்தை எடுக்கின்றார்கள்,இயற்கை வழங்க மறுக்கும் தறுவாயிலும்!நிச்சியமாக நாளையிந்த இயற்கையானது இதே கணக்கில் எடுக்கப்போகிறது மனிதர்களின் அனைத்தையும், கூடவே அவர்களது உயிரையும்-அவர்கள் வழங்காதபோதும்!!.“இந்தப் புவிப்பரப்பில் நாம் 100.000.தலைமுறைகளாக வாழ்ந்துவிட்டோம்,எனினும், இந்தத் தலைமுறைக்கு நன்றாகவே தெரியும் தாம் மட்டுமே இந்த 100.000. தலைமுறைக்கு இறுதியாகப்போவது.

என்ன செய்வோம்?

எங்கும் இயற்கை அனர்த்தம்- யுத்தம்!

அதீத பொருள் உற்பத்தி,கனிவளச் சுரண்டல் அதற்காக அணுயுத்தம்…விடுதலை-தேசியவிடுதலை,அந்த விடுதலை,இந்த விடுதலை!ஆனால், சூழலும் மனிதர்களும் அழியும் விளிம்பில்…உழைப்பவர்கள் ஓட்டாண்டியாகிப்போய் ஓய்வின்றி உலகமே உழைப்பென்றொடுங்கும் நிலை.ஒரு பருக்கை சோற்றுக்கே உழைப்புப் போதாத நிலை!இந்த அவலத்தில் நாம் வாழும் „இந்த இயற்கை“ இன்னும் எவ்வளவுக்கு நம்மைத் தாங்கும்?

இயற்கை தாங்காது அழிவுகளாக அள்ளிச் செல்கிறது மனிதவுயிர்களை,இது போதாதற்கு அணுமின்சாரம் அதன் கழிவுகள் உலகத்தைப் பூண்டோடு அழித்து மனித நாகரீகத்தைப் பாடைகட்டி அனுப்பத் தயாராகிவிட்டது.இதில் எனது தேசமென்ன உனது தேசமென்ன?

உழைப்பவர்களுக்குத் தேசமுண்டா?வீடுண்டா,காடுண்டா?

எதுவெப்படியோ நாளொன்றுக்கு இந்தப் பொருளாதார அமைப்பானது 100 மில்லியன்கள் தொன் „கரியமில வாயு“வை மூலப் பொருள்களைப் பொருளாக்குவதில் இந்த வளிமண்டலத்தில் கொட்டுகிறது.இது வளிமண்டலத்தில் இருக்கின்ற அளவில் ஐந்து மடங்கு அதிகமானது.எதை நோக்கிச் செல்கிறோம்?இந்தப் புவியைச் சிதைத்த பொருளாதாரம் எமக்கு வேறொரு உலகத்தைத் தயாரிக்க முடியுமா? இது கேள்வி.இந்தப் புவிப் பரப்பில் என்றுமில்லாதவாறு பொருளாதாரப் போட்டிகள் ஆரம்பமாகிறது.இனியொரு யுத்தம் ஆயுதங்களால் உருவாக முடியாது.அது இயற்கை அழிவால் ஒப்பேறுமென்றே கருதமுடியும்.

உலகத்தில் பொருள் உற்பத்தியானது மூலவளத்திலும்,சக்தியிலுமே தங்கி இருக்கிறது.இந்தச் „சக்தி“ என்பது எரிபொருள்மட்டுமல்ல மிகவும் அவசியமான மின்சாரத்திலுமே அர்த்தம் பெறுகிறது.இங்கே மின்சாரமானது தொழிற்சாலைகளின் தேவைக்கேற்றளவு எந்த நாட்டாலும் தயாரிக்க முடியாத நிலையில் அணுவிலிருந்து மின்சாரத்தை உற்பத்தி செய்வதில் அனைத்து நாடுகளும் முனைகின்றன.ஆனால் இந்த அணு மின்சாரமானது மனித நாகரீகத்தையே அழிப்பதற்கு „நேரக் குண்டாக“நேரம் குறித்திருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டமும் அணுவும்:

இந்தியாவானது அடுத்த பத்தாண்டுகளில் இன்னும் பலபத்து அணுமின்னாலைகளை நிறுவிவிடும்.அதன் வளர்ச்சியும்,பொருளுற்பத்தியும் சீனாவுக்கு நிகராக உயரும் சாத்தியமுண்டு.இந்தத் தேவையின் பொருட்டு வளர்ந்துவரும் இந்தியாவானது எந்த நிலையிலும் சூழற் பாதுகாப்புணர்வுடன் நடந்துகொள்ள வாய்ப்பில்லை.அதன் பொருளாதாரச் சார்பானது அமெரிக்க ஆதிகத்தின் பக்கம் இருக்கும்போது இந்தச் சூழலியற்றேவைகளை ஒருபோதும் இந்தியா மதிக்காது.பண்டைய வாழ்வு அதற்கினிக் கைகூடாது.இந்தியத் துணைக்கண்டத்தின் அணுமின்சாரத்திட்டமானது மிகவும் சிறுபிள்ளைத்தனமானது!இதற்குச் சில உதாரணங்களைப் பார்ப்போம்.

1):வளர்ந்துவரும் சூழலியல் விஞ்ஞானமானது நமது உயிர்வாழ்வின் அவசியத்துக்கு இப் புவிப்பரப்பானது அணுமின்சாரத்தை நிராகரித்த உற்பத்தித் திறனோடு எதிர்காலத்தை எதிர்கொள்வதே சாலச் சிறந்ததாகக் காண்கிறது.இதன் பொருட்டுப் பற்பல மேற்குலக நாடுகள் 2030 ஆண்டுகளுக்குள் தமது அனைத்து அணுமின் நிலையங்களையும் படிப்படியாக மூடிவிடும் திட்டத்தோடு மாற்று வழிகளைக்காணும்போது இந்தியாவோ அணுமின் திட்டத்தை வலுவாகச் செயற்படுத்தத் தயாராகிறது!.

2):இந்தியா அணுமூலமாகத் தயாரிக்கும் மின்சாரத்தை மிகவும் இலாபகரமாகப் பெறமுடியாது.இதற்கான தகுதி அதற்குக் கிடையாது.அதாவது அமெரிக்காவுடன் அதன் ஒப்பந்தம் இத்தகுதியை அதனிடமிருந்து பறித்துவிடும்.மின்சாரம் போதியளவு பெற்றுவிடலாம்.ஆனால் அணுக் கழிவுகளே மிகப் பெரும் செலவை இந்தியாவுக்கு வழங்கி அதன் உட்கட்டமைப்பைச் சிதறிடிக்கும்.இது மிகவும் நிதானமான அமெரிக்காவின் சதிவலை.இந்திய ஆளும் வர்க்கமானது தமது வருவாயை மட்டுமல்ல அந்நிய சக்திகளோடிணைந்து இந்தியக் கனிவளங்களையும் சூறையாடிப் பெருவங்கிகளில் பதுக்குவதற்குத் தயாராகிறார்கள்.இதன்படி அந்த வர்க்கம் எந்த முன் நிபந்தனையுமின்றி அமெரிக்காவோடு கூட்டிணைவதில் மும்மரமாகச் செயற்படுவார்கள்.

இவை மிகமுக்கியமான உதாரணங்களாகும் இந்தியத் தரகு முதலாளிய ஆட்சியாளர்களின் ஈனத்தனத்தை அறிவதற்கு.ஏனெனில், அணுமின்சாரமானது மிகவும் ஆபத்தானது.அது புவிப்பரப்பு எதிரானது!ஏன் உயிரினங்கள் அனைத்துக்குமே எதிரானது.இதை எங்ஙனம் நிறுத்தமுடியுமென மானுவர்க்கஞ் சிந்தித்து அதற்காகப் போராடி வரும்போது இந்தியா மிகச் சிறுபிள்ளைத்தனமாகக் காரியமாற்றுகிறது.இலங்கையில் தொடர்ந்து அணுமின்சார ஆலைகள் நிறுவப்படும்.அதன் உற்பத்திக்கேற்ற வலுவுள்ள ஆலைகள் இனிவரும் ஆண்டுகளில் நிறுவப்படும்.

அணுக்கழிவுகளின் இறுதிப் பராமரிப்பு ஒரு இலட்சம் வருடங்களுக்கு:

இன்றைய மூன்றாமுலக அரசியல் வாதிகள் அதிகமாகக் கற்றவர்களோ அல்லது மனித நேயமிக்கவர்களோ கிடையாது.இவர்கள் ஆளும் பூர்ச்சுவா வர்கத்தின் வெறும் அடியாட்கள்-மாபியாக்கள்!இவர்களிடம் பணம் சேர்க்கும் அவாவுடைய மனதிருக்கு,ஆனால் மக்களின் எந்தத் தேவைகளையும் பற்றிய துளியளவு அறிவும் கிடையாது.இதனாற்றான் அநேகமான அரசியல்வாதிகள் அணுமின்சாரத்தை எதிர்ப்பதில்லை.மாறாக அவற்றை மின்சாரப் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்கான முக்கிய கருவியாகக் கணக்குப் பண்ணுகிறார்கள்.

அணுமின்சாரத்தின் இறுதிக்கழிவு வடிவமானது புளோட்டோனியமாகும்.இந்தப் புளோட்டோனியத்துக்கு பலவகைத் தரப்படுத்தற் காலமுண்டு.அந்தவகையில் அதன் அரைதரக் காலமானாது 24.000.வருடங்களாகும்.இதன் அர்த்தம் என்னதென்றால்முதற்பகுதி24.000 ஆண்டுகளுக்கு நடைபெறும் கதிர்வீச்சு பின்பும்24.000.ஆண்டுகளுக்கு கதிரியக்கமாக நடக்கும்- அடுத்த அரைக் காலத்திலும் கதிரியக்கம் நடைபெறும்,அதன்பின்பு இதே தொடர்கதையென்று கதிரியக்கம் பற்றிய அறிவு குறித்துரைக்கிறது. இந்தக் கேடுவிளையும் அபாயமான சாமான் மிகவும் பாதுகாப்பாகச் சேமித்து வைத்திருக்கவேண்டும்.இந்தியாவல் இது சாத்தியமில்லை.அதாவது என்னென்ன வடிவங்களில் இது காக்கப்படுவேண்டுமென்றால்:

1):கதிர்வீச்சை தடுப்பதற்கான முறைமைகளைத் தவிர்காதிருக்கவேண்டும்.

2):யுத்தத்தால் பாதிப்படைவதைத் தடுத்தாகவேண்டும்.

3):வெள்ளப் பெருக்கிடமிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

4):பயங்கரவாதத் தாக்குதிலிலிருந்து பாதுகாக்கப்படுவேண்டும்.

5):பலாத்தகாரத்துக்குள்ளாகப்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

6):ஊழலிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

7):கீழ்த்தரமாகப் பயன்படுத்தலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

8):நிர்வாகக் கவனக்குறையிலிருந்து பாதுகாக்கப்படவேண்டும்.

9): ஞாபக மறதியிலிருந்து தவறேற்படுவதைத் தடுத்தாகவேண்டும்.

இப்படிப் பல்வகைக் கடப்பாடோடு இந்த உயிர்கொல்லியைப் பாதுகாத்தாகவேண்டும்.அதாவது கண்ணுக்குள் எண்ணையை ஊற்றிக்கொண்டே பாதுகாத்தாகவேண்டும்.இந்த வகைப் பாதுகாப்போடு எந்த நாட்டிலுமுள்ள பகுதிகளும் இல்லை!வளர்ச்சியடைந்த நாடுகளே திண்டாடும்போது இந்தியாபற்றிச் சொல்லவே தேவையில்லை!இந்த நேரக்குண்டானதையெங்குமே பாதுகாத்துவிட முடியாது.இதன் கதிரியகத்தை எந்த விஞ்ஞானமும் கட்டுப்படுத்திட முடியாது.இலட்சம் ஆண்டுகளுக்குப் பாதுகாக்கப்பட வேண்டியதை,எந்தக் கொம்பரும் மலிவாகச் செய்துவிட முடியாது.பலகோடிக்கணக்கான செல்வத்தை இது வேட்டையாடிவிடுகிறது.

இதைப் பாதுகாக்கப் பயன்படும் செலவானது அந்த நாட்டின் மொத்தவுற்பத்தியில் பல பங்கைச் சூறையாடும்.இந்தப் புளோட்டோனியம் நமது புவியையும், உயிர்களையும் கொன்று இல்லாதாக்கி வருகிறது.இன்றைய உற்பத்தி முறைமையின் சக்திவளாதாரம் எங்ஙனம் மனிதவலத்தை ஏற்படுத்துகிறது?-இதையும் சற்று நோக்குவோம்.

இன்றைய சக்திவள ஆதாரத்தில் மனித வாழ்வு:

-ஒவ்வொரு செக்கனுக்கும் ஒருவர் பட்டுணி கிடக்கிறார்.

- ஒவ்வொரு நிமிடத்துக்கும் 30 கெக்டர் காடு அழிக்கப்படுகிறது

-நாளொன்றுக்கு 80 வகைத் தாவரங்கள் அழிந்தே போகிறது.

-ஒவ்வொரு கிழமையும் 50 கோடித் தொன்கள் கரியமில வாயுவை நமது வளிமண்டலத்தில் கொட்டுகிறோம்.

-ஒவ்வொரு மாதமும் பாலைவனத்தில் 5 இலட்சம் கெக்டரை விஸ்தரித்துப் பெருக்கிவிடுகிறோம்.

-ஒவ்வொராண்டும் ஓசான் பாதுகாப்புறையில் 1 வீதம் மெலிதாக்கி வருகிறோம்.

இந்த மனித வாழ்வு எங்கே செல்கிறது?

எதை நோக்கி முதலாளியம் மனித வாழ்வை நகர்த்துகிறது?

நாம் பிறக்கிறோம்,கற்கிறோம் வேலைக்குச்செல்கிறோம்,மணமுடித்துக் குழந்தைகள் பெறுகிறோம்!எங்களில் எத்தனை பேர்கள் நமது சூழலின் தூய்மை-மாசு பற்றிய உணர்வோடு வாழ்கிறோம்?எத்தனை பேர்கள் தத்தம் நாட்டின் அரசியல் பொருளாதாரச் சூழல் நெருக்கடியை உணர்வுபூர்வமாக உள்வாங்கி அதை நிவர்த்தி செய்வதற்கான அழுத்தங்களை முன்வைக்கின்றோம்?

இன்றைய சூழலல் நெருக்கடியான மிக உண்மையானது.கடுமையானது!இந்த நெருக்கடியை தீர்த்தாகவேண்டும்.அங்ஙனம் தீர்க்கப்படாதுபோனால் புவிப்பரப்பில் இன்னும் ஓரிரு நூற்றாண்டில் உயர் வாழ்தல் சாத்தியமின்றிப்போவது உண்மையாகும்.நச்சுக் கிருமிகளினதும்,விஷச்செடிகளினதும் இருப்பே சாத்தியப்படலாம்.இத்தகைய எதிர்காலத்தை எதிர்கொள்ளவா நாம் மாடாய் உழைக்கிறோம்,குழந்தைகளைப் பெறுகின்றோம்?

எமது உற்பத்தி முறைகளுக்கும்,சக்திவள நுகர்வுக்கும் எந்தப் பொறுப்பும் சுமத்தாமால் வெறுமனவே இலாப வேட்கையுடன் தொடர்ந்தாற்றும் மனித இடைச்செயலானது, நம் தலைமுறையையே நோய்வாய்ப்படுத்தியுள்ளதை எத்துணை மதிப்பீடுகளுக்குள் நாம் உட்படுத்தி ஆய்ந்திருக்கிறோம்?

சமுதாயத்தின் முழுமொத்த மக்களும் ஆரோக்கியமற்ற மனிதர்களாகவும்,ஏதோவொரு குறைபாடுடைய சிசுவாகக் கருவில் உருவாகும் புதிய மனிவுயிருக்கு யார் பொறுப்பாளிகள்?நமது வாழ்கை முழுதும் பெரும் குற்றவாளிகளாக மாறிவரும் இந்தப் பொருளாதாரத்தைக் கொண்டு நடாத்தும் „நம் கூட்டுழைப்பு“ நம்மையடிமைப்படுத்தும் இன்றைய காலத்தில் வாழ்வின் அர்த்தம் என்ன?

சூனியத்துள் விழுந்துகிடக்கும் ஒரு ஊதாரிக்கூட்டமாக மாறியுள்ள தலைமுறைக்கு எதிர்காலத்தையும்,சூழலையும் அது சார்ந்த உயிர் வாழ்வையும்,மனித இடைச் செயலையும் பற்றிய மதிப்பீடுகளா முதன்மை பெறுகிறது?

„நாவிலுள்ள எச்சிலை விரலில் தொட்டு எங்கோ பூசுவென்று „சேட்“பண்ணும்போது எழுதுகின்ற கூட்டமாக மாறியுள்ள இந்தத் தலைமுறைதாம்“ நமது அடுத்த கட்டத்தை நகர்த்தப் போகிறது!நினைக்கவே தலை சுற்றுகிறது.எங்கே போகின்றது நமது தலை முறைகள்?

இந்தத் தலை முறையின் பின்னாலுள்ள உற்பத்தி-இலாப வேட்கையின் சூத்திரதாரிககளான இந்த முதலாளிப் பிசாசுகள் இப்போது குளோபல் வர்த்தகத்தின்மூலம் புவிப்பரப்பின் அனைத்துப் பாகத்தையும் தமது கட்டுப்பாட்டுக்குள் கொணர்ந்தபின், நமது சூழல் அனைத்து வடிவங்களிலும் சிதைந்து சின்னாபின்னமாகியுள்ளது!

இன்னும் எவ்வளவு காலத்துக்கு இந்தச் சூழல் பொறுத்துக் கொள்ளும்?

அது பொறுமையுடையதாக நாம் காணவில்லை!உலகெங்கும் புவி அதிர்வுற்றுப் பற்பல அழிவுகளையும்,வளிமண்டலத்தில் பலகோடி நோய்க் கிருமிகளையும் அது இயல்பாகமாற்றித் தந்துகொண்டேயிருக்கு. இன்றைய „எச்5 என்1″வைரஸ் அடுத்த பத்தாண்டுகளில் நம்மில் பலரைக் கொல்லப்போகிறது.இதை எந்தக் கொம்பரும் தடுத்துவிட முடியாது.அவரது எந்த மருந்தும் அதைத் தடுக்கும் ஆற்றலையும் பெறமுடியாது.இதுதாம் இன்றைய முதலாளிய உற்பத்திப் பொருளாதாரத்தின் மகத்தான பரிசு.இந்த நோயை வழங்கியது மனித இடைச்செயலேயன்றிச் சூழலல்ல!

எந்தப் பொறுப்புணர்வுமற்ற இந்தவுலகத்தின் அதிகார வர்க்கமானது முழுவுலகத்தையும் பாழாக்கிய பின் இன்னும் அணுவைக்கொண்டு இலாபமீட்டிவரும் பாரிய திட்டங்களோடு காரியமாற்றுகிறது.இந்த அணுவே இன்னுமொரு தலைமுறைக்கு-நூற்றாண்டுக்குமேல் உற்பத்திக்குக் கிடையாதுபோகும் சூழலில், அதன் கழிவுகளை நமது ஆயிரம் தலைமுறை கண்ணும் கருத்துமாகக் கட்டிக் காத்தாகவேண்டும்.இதை இந்த முதலாளியப் பொருளாதாரம் நமது தலைமுறைகளுக்குச் சுமத்தும்போது நாம் வாழாதிருக்கின்றோம்.

இன்றைய யுரேனியத்தின் இருப்புக்கு எல்லையுண்டு!

யுரேனியத்தின் கச்சாவிருப்பு இன்னுமொரு தலைமுறைக்குச் செல்லமுடியாது.ஆகக்கூடிய அதன் வளம் இன்னும் எண்பது அல்லது நூறு வருஷங்களே

.இந்த அணுமின்,மற்றும் அணுச் செயற்பாடுகளை இந்த எல்லையிலிருந்து பார்க்குமொரு விஞ்ஞானிக்கு அதன் மாற்றைப் பற்றிய தெளிவு தெரிந்தேயிருக்கு.அந்த விஞ்ஞானி மனித இனத்தைக் காப்பதற்காக இன்றே மாற்றுச் சக்தி வளத்தைப் பயன் படுத்தும்படி கோரிக்கை செய்யும்போது(பேராசிரியர் எரிக் பீல் மற்றும் பொல்கர் பிறேயஸ்ரெட்:“தாவரத்திலிருந்து சக்தி“ எனும் நூலின் ஆசியர்கள்), நமது இந்திய பேரரசோ அவற்றை உதாசீனம் செய்து அமெரிக்காவோடு அடிமை ஒப்பந்தம் போடுகிறது(புதிய ஜனநாயகம்-ஏப்பிரல்2006).

என்னைப் பொருத்தவரை நமது பொருளாதாரமானத்து சூழலிருந்து திருடுவதை நிறுத்தாதவரை மனிதவினத்துக்கு எந்த விமோசனமுமில்லை.இதற்காகவேனும் இந்தப் பொருளாதாரமானது தேவைக்கேற்ற உற்பத்தியை அனுமதிக்கும் ஷோசலிசச் சமுதாயமாக மாற்றப்பட்டே தீரணும்.

அவுஸ்ரேலியாவிலும்,தென் ஆஜென்டீனாவிலும் பெற்றோர்கள் தமது குழந்தைகளை 13 நிமிடங்களே வெய்யிற் காலத்தில் வெளியில் அனுமதிப்பது நடக்கின்றது.இதற்கு மிஞ்சினால் தோற் புற்று நோயை அந்தக் குழந்தைகள் எதிர்கொள்வதில் முடியும்.புவியின் தென்துருவத்தில் மெலிதாகிப்போன ஓசான் பாதுகாப்பு உறை இன்று புற்று நோயைப் பரிசாக வழங்குகிறது!இன்னும் சில வருடங்களில் புவியின் வடதுருவத்திலும் ஓசான் ஓட்டை பெரிதாகி எல்லோருக்கும் இதைப் பொதுவாக்கிவிடும்.வருடமொன்றிக்கு அவுஸ்ரோலியாவில் 140.000. பேர்கள் தோற் புற்று நோய்க்கு உள்ளாகி வருகிறார்கள்.சுவாசப்பை மற்றும் கண்,தொண்டை,மூக்குப் பகுதிகளில் கண்ட கண்ட நோய்கள் வந்து தொலைக்கிறது.

200 வருடங்களுக்கு முன் இமானுவேல் கன்ட் எனும் தத்துவவாதி சொன்னார்:“இயற்கைச் சீற்றமென்பது கடவுளின் தண்டனையல்ல மாறக மனிதர்களின் குற்றமே“அதாவது மனிதரின் இடைச் செயலே என்றான்

இயற்கை குறித்து மனிதர்கள் எந்தத் திசைவழியில் சிந்திக்கிறார்களென்பதைப் பல பத்துத் தத்துவ ஞானிகள் பதறியடித்துப் பாடங்கள் சொல்லியாச்சு.எனினும் நமது இன்றைய பொருளாதாரப்போக்குகள் அதன் வாயிலாகவெழும் போராட்டங்கள் குவிப்புறுதிச் சமுதாயத்தின் சில பத்து நிறுவனங்களுக்கான பொருள் வளத்தை மேம்படுத்துவதற்காக, சூழல் மற்றும் ஜீவராசிகளுக்கெதிரான யுத்தமாக நடக்கின்றன.இதைச் செயற்கரிய வியூகமாச் செய்து முடிக்கும் இன்றைய விஞ்ஞானம் அணுக்குண்டுகளால் தமது போரியற் சமநிலையை அடைவதற்கு விரும்புகின்றன!இயற்கையின் வளங்கள் புவிப்பரப்பில் வாழும் அனைத்து ஜீவராசிகளினதும் பொதுச் சொத்தாகும்!இது தனிப்பட்டவொரு நாட்டுக்கோ அல்லது சில நிறுவனங்களுக்கோ உரித்தாக யாரும் பட்டயம் எழுதிக் கொடுத்ததாக எந்த விபரமும் இல்லை.இந்தச் சூழலின் அதீத பொருட்குவிப்பானது மனித வளத்தைமட்டுமல்ல புவிப்பரப்பின் அனைத்துக் கொடைகளையும் உதாசீனப்படுத்தி ஓரிரு ஆதிக்க நாடுகளினது பரம்பரைச் சொத்தாக மாற்றப்பட்டுள்ளது.

அதீதத் தேவைகள், மனித உயிராதாரமாக இருக்கும்போது-பல நாடுகளுக்கு உணவும் ,சுத்தமான குடி நீரே அதீத் தேவையாகும்!ஆனால் பொருளுற்பத்தியில் முன்னணி வகிக்கும் நாடுகளுக்கோ கனிவளத்தைக் கட்டுப்படுத்தித் தமதாக்கும் அவசியமே அதீதத் தேவையாகிறது.இந்த இருவகைப் போராட்டங்களுக்குள் சிக்கித் தவிக்கும் உழைப்பாள வர்க்கமானது தமது உயிர்வாழும் சாத்தியத்தை வெறும் உடலுழைப்பை நல்குவதில் உறுதிப்படுத்துதில் முனைப்பாக இருக்கும்படி அனைத்துச் செயற்பாடுகளும் பூர்ச்சுவா அரசுகளால் மேற்கொள்ளப்பட்டுச் சட்டமாக்கப்பட்டிருக்கு.ஆனால் இந்த இயற்கையோடு மிக நெருங்கி உயிர்வாழும் சாத்தியத்தை இல்லாதாக்கும் பாரிய செயற்திட்டத்தைச் செயற்படுத்துமொரு காட்டுமிராண்டி வர்க்கமாக இன்றைய „கொன்சேர்ன்களின் பங்காளிகள்“ மனிதர்களை ,உயிரினங்களை,இயற்கையைச் சுரண்டுவதை முதலாளித்துவ உற்பத்திப் பொறிமுயையென்ற நெறிமுயைக்குள் எல்லாவற்றையுமே நாசஞ் செய்வதில் வலுவுடைய விஞ்ஞானத் தொழில் நுட்பங்களாக விரிந்து கிடக்கும், அதீதப் பூர்ச்சுவாக்கள் இன்றுரையும் மதங்களின் பெயரால் ,இனங்களின் பெயரால்,மக்களையும் மற்றெல்லாவற்றையும் அடக்கி வைத்துள்ளார்கள்.இதை எந்தவொரு பொது நிறுவனமும் எதிர்த்துப் போராடாத வகைகளில் மதவாதப் புனைவுகள் மக்கள் விரோத மதவாதிகளால் மிக நுட்பமாகச் செயற்படுத்தப்பட்டு,இந்தப் பூர்ச்சுவா வர்க்கம் காக்கப்படுகிறது.

எல்லா வகைத் தேவைகளும் இலாபத்தை முன்வைத்து,ஒவ்வொராண்டும் மிகையான வருமானத்தையும்,அதீத இலாபத்தையும் உறுதிப்படுத்தியே செயலாகவிரிகிறது.இன்றைய தொழில் நிறுவனங்கள் போடும் முகமூடியானது சூழற்பாதுகாப்பு என்ற பெரு முகமூடியாக நம்முன் விரிந்து கிடக்கிறது.ஆனால் இந்த முகமூடி தமது எதிர்கால வளத்தேவைகளை மட்டுப்படுத்தும் சூழலியளர்கiளின் காதுகளில் பூச்சுற்றும் வேலையென்பதை பல விஞ்ஞானிகள் ஏலவே கூறியுள்ளார்கள்.

புவிப்பரப்பானது சில பெரும் தொழிற்கழகங்களின் சொத்துரிமையாக இன்றைய சிலபூ ர்ச்சுவா அரசுகளால் முடிவெடுத்துக் காரியமாற்றப்படுகிறது.இந்தச் சந்தர்ப்பத்தில் உழைப்பாள வர்க்கம்மானது வாளாதிருக்கும்படி அவர்களின் அனைத்து நலன்களும் பறிக்கப்படுகிறது.இழப்பதற்கரிய சொத்தாக மாற்றப்பட்ட அடிமை உடலுழைப்பு ,இன்று உயிர்வாழ்வதற்கு அவசியமாக மாற்றப்பட்டுள்ளது.இதனால் வாளாமை நமக்கு எல்லா விஷயத்திலும் தொடர்கிறது.நாம் எந்தத் திசையிலும் அணித்திரட்சி கொள்ளத்தக்க சூழலில்லை.இன்றைய உலகப் போராட்டங்கள் பூர்ச்சுவா வர்க்கத்தைச் செயலிழக்க வைப்பதற்கானதல்ல.அவை இந்த வர்க்கத்தோடு சமரசஞ் செய்வதில் ஒவ்வொரு பொழுதும் தொழிலாள வர்க்கத்தைக் காட்டிக் கொடுத்தே தனது உயிர்வாழ்தலைச் செய்கிறது.இதுவே புரட்சிகரப் போராட்டமல்ல.சூழலைப் பாதுகாப்பதும்,தொழிலாளர் விடுதலையும் ஒரே தளத்துக்கு வரும் பெரும் போராட்டத் தேவையாகும்.இந்தத் தேவையில் எந்தவொன்றையும் எவரும் மறுத்தொதுக்க முடியாது.இதுவே மனித சுதந்திரத்துக்கான போராட்டமாகும்!சுதந்திரம் மனிதருக்கு மட்டுமானதல்ல மாறாகப் புவிப்பரப்பிலுள்ள அனைத்து ஜீவராசிகளுக்கும்,சூழலுக்கும் இது பொதுவாகும்.சூழலை விடுவிப்பதும்,மனிதர்களை விடுவிப்பதும் வெவ்வேறானதல்ல!

அதாவது ,இன்றைய சுதந்திரம் எனும் அர்த்தமானது மார்க்ஸ் கம்யுனிச அறிக்கையில் கூறியபடி: >>Unter Freiheitversteht man innerhalb der jetzigen buergerlichen Produktionsverhaeltnisse den freien Handel ,den freien Kauf und verkauf.<<(Manifest der Kommunistischen Partei:seite.11) „இன்றைய உற்பத்தி நிலைமைக்குள் மனிதர்கள் புரிந்துகொள்ளும் சுதந்திரம் எனும் அர்த்தம், திறந்த வர்த்தகத்தில் சுதந்திரமான கொள்வனவு,விற்பனையே!“இதற்கு மேலாக நமது காலத்துச் சுதந்திரமென்பது வெறும் அர்த்தமிழந்த பூர்ச்சுவாக்களின் நரித்தனமான மனிதவிரோதத் தொழிற்சங்கங்களுமெனலாம்!இவையே இன்றைய பொருளாதார வாதத்துக்குள் புரட்சிகரப் பாட்டாளிய வர்க்கத்தின் உணர்வைத் தள்ளி கையாலாகாத கூட்டமாக்கியுள்ளார்கள்.இந்த ஈனத்தனத்திலிருந்து விடபட முனையும் தொழிலாள வர்க்கத்துக்கு விசுவாசமானவொரு புரட்சிகரக் கட்சியெங்கும் நிலவுவதாகவில்லை.கூலியுழைப்பென்ற ஒரு அடிமைத்தனமில்லையென்றால் பெரும் மூலதனமுமில்லாது போகும்!அப்படி இல்லதுபோகும் மூலதனத்தால் மக்களுக்கு உயிர்வாழத்தக்கவொரு சூழலும், அதைக் காத்து நலனடையும் ஒரு சமூகக்கட்டுமானம் உருவாகும்.இதை முன்வைத்து நடைபெறாத எந்த் திசை வழியும் இறுதியில் பூர்ச்சுவா வர்க்கத்துக்குள் ஐக்கியமாவதே வரலாறாக விரிவது நமது காலத்தில் அடிக்கடி நிகழும் ஒரு போராட்ட வடிவமாக இருக்கிறது.

இறுதியாக ஜனாதிபதித் தேர்தல் குறித்து:

இன்று நமது எதிர்காலம் வேறெந்தக்காலத்தையும்விட பாரிய அழுத்தத்துக்குள் தள்ளப்பட்டுள்ளது.இதனால் நமது சமூகவாழ்வானது சிதைந்து சின்னாபின்ப்பட்டுப்போனதன் காரணத்தால் நாம் ஒற்றை மனிதர்களாக-அதீத தனிநபர்வாதக் கண்ணோட்டத்துகுள் வந்துவிடுகிறோம்.இதனால் எதையும் ஒருபொருட்டாக எடுப்பதற்கான காலவகாசமின்றி „ஏதோ எப்படியோ“சமூகமாக மாறியுள்ளோம். இந்த நிலையிலும் பற்பல முறைமைகளில் நமது வாழ்வுமீதும்-இருப்பின்மீதும் அடாத காடைத்தனஞ்செய்யும் இந்த வர்த்தகச் சமுதாயத்தின் கருத்தியல்-ஊடகவன்முறையைப் புரிந்துகொள்வதும்,இவர்களின் அழகிய ஒளிவட்டங்களுக்குப்பின் பாரியபிசாசுக் கரங்கள் இருப்பதையும் நாம் அறிந்துகொண்டு செற்பட வேண்டும்.

தேர்தல்கள்,வாக்குச் சீட்டுகளால் நாம் ஏமாற்றப்படுகிறோம்.எனினும்,அத்தகைய தேர்தல்களே ஜனநாயகத்தின் இருப்பை உரைத்துப் பார்க்கும் வழியாகவும் இருக்கிறது.நாம் மக்களது திறந்த விவாதத்தைக் கோருகின்றாம்.அவர்களது பிரச்சனையை அவர்களே பேசுவதற்கூடாக மக்களது ஆளுமையை வலுப்படுத்திடலாமென்பது எனது புரிதல்.இலங்கையில் மக்கள் யுத்தத்தாலும்,தேர்தல் நாடகங்களாலும் ஆளும் வர்க்கத்தால் ஏமாற்றப்பட்டுப் பலியிடப்பட்டார்கள்.மக்களது உரிமைகளை அவசரகாலச்சட்டம்-பயங்கரவாதம் என்ற கொடும் ஜனநாயகவிரோதச் செயற்பாடுகளால் இல்லாதாக்கினர்கள்.

இதற்கு உடந்தையாகக் குரல் கொடுத்த தமிழ்க் கட்சிகள் தமிழ்பேசும் மக்களின் உரிமைகளை மறுத்தபடியேதாம் தமது கட்சிகளை அந்நிய நலன்களுக்காக வளர்தார்கள்.எந்தவொரு ஓட்டுக் கட்சித் தலைவனும் தமது எஜமானர்களாக நம்பிய அந்நிய அரசுகளையும் அவர்களின் நலனையும் முதன்மைப்படுத்தியே தமது நலன்களை மக்களுக்கான நலனாகக் காட்டிக் கொண்டார்கள்.

இதன் தொடர்ச்சியானது இலங்கையில் வாழ்ந்து,தத்தமது தொழில்களைத் தாமே தீர்மானிக்கும் இலங்கையின் இறமைசார்ந்த அனைத்து நகர்வுகளும் மிகக் கவனமாக அழித்து வரப்பட்டது.இதன் உள்நோக்கமே „ஈழம்-தமிழீழம்“எனும் அரசியற் கருத்தாக்கமாக விரிந்தது.எதையும் அந்நியச் சக்திகளின் தயவில் ஆற்றி வந்த ஓட்டுக் கட்சிகளுக்கு இந்த ஈழக்கோசமானது மிக அவசியமான இருப்பைத் தமிழ்ச் சமுதாயத்துள் நிலைப்படுத்தியது.அத்தகைய அரசியற்றேவைகள் இலங்கையின் இனங்களுக்கிடையிலான முதலாளித்துவ வளர்ச்சியின் முரண்பாடுகளுக்குத் தீனீபோடும் அரசியற் கருத்து நிலையாகவும்,தந்துரோபாயமாகவும் இருந்தது. இவைமிக அவசியமானவொரு இந்தியப் பாத்திரத்தை இலங்கைக்குள் தொடர்ந்து நிலைப்படுத்தும் இந்திய நோக்கங்களின் பிறப்பே தவிரத் தமிழ்பேசும் மக்களின் கோசங்களாகவோ அன்றி உரிமையின் வெளிப்பாடாகவோ இருக்கவில்லை.

இன்றுவரை தொடரும் தான்தோன்றித்தனமான அரசியல் மற்றும் கோரிக்கை முறைமைகளுக்கு, இத்தகைய நலன்களை வெவ்வேறு அமைப்புகள் தத்தமது எஜமான விசுவாசத்துக்குச் சார்பாக ஆற்றும்போது இவை மக்களின் உரிமைகளுக்காக் குரல் கொடுப்பதாகவும், அவர்களின் அடிப்படை வாழ்வாதாரங்களைச் செம்மையுற வைப்பதற்காகவுமெனத் திட்டமிடப்பட்ட ஏமாற்றும் அரசியலாக விரிகிறது.இன்றைய இலங்கையின் அரசியல் மற்றும் வியூகங்கள் யாவும் ஏதோவொரு அந்நியச் சேவகத்துக்காக ஆற்றப்படும் தந்திரத்தோடு சம்பந்தப்பட்டதெனினும் அந்த வியூகத்துள் இலங்கையை ஆளும் கட்சிகளின் உயிர்த்திருப்போடும் மிகவும் பிணைந்த நலன்களைக் கொண்டிருக்கிதென்ற உண்மை மிகக் கறாராக விளங்கத் தக்கதாகும்.

மூன்றாம் உலகக் கட்சிகள் மட்டுமல்லை வளர்ச்சியடைந்த உலகங்களின் கட்சிகளும் இன்றையப் பொருளாதார உலகப் பங்கீடுகளுக்கும் பாரிய தொழிற் கழகங்களுக்குமான சேவகர்களாகவே தொடரமுடியும்.ஏனெனில், இத்தகைய கட்சிகளே இன்றைய உலகத்தில் மிகப் பெரும் தொழில் துறைகளைக் கொண்டு இயக்குகின்றன.இந்தக் கட்சிகளே முதலீட்டாளர்களாக இருக்கும் போது அவைகளின் வர்க்க நலனானது முதலாளித்துவப் பொருளாதாரத்தின் மிகப் பழையபாணியிலான பூர்ச்சுவாத் தன்மைகளைக்கடந்து புதிய பாணியிலானவொரு முக மூடியை“அமைதி,சமாதானம்,திறந்த பொருளாதாரச் சுதந்திரம்,மக்கள் நலன்“போன்ற வார்த்தைகளுக்கூடாகக் காரியப் படுத்தும் நிறுவனங்களாக இருக்கிறன.என்றபோதும், ஒவ்வொரு ஐந்தாண்டும ஜனநாயகம் போதித்துத் தேர்தல்கள் வந்துபோகின்றன.ஆனால்,இத்தகைய தேர்தல்களில் வாக்களிக்கப்பட்ட மக்களது எந்தத் தேவையும் எந்தக் கட்சித் தலைவனாலும் பூர்த்தி செய்யப்பட்டதாக வரலாறு இல்லை.ஓட்டுக்கட்சித் தலைவர்களை நம்பித் தேர்தலில் ஓட்டளிக்கும் மக்கள் தொடர்ந்து ஏமாற்றப்படுகிறார்கள்.எனீனும் வாக்களிப்பது மக்களது உரிமை.ஆனால்,எவருக்கு வாக்களிப்பது?

இதைத் தீர்மானிப்பது மக்களது தெரிவு.அவர்களது பிரச்சனையை இந்த முதலாளிய அமைப்புக்குள் எவரும் தீர்க்கப் போவதில்லை.ஆனாலும் இவ்வமைப்பை உடனடியாக மாற்றவும் முடியாது.எனவே,அதிகாரத்திலுள்ளவர்கள் தாம் சார்ந்த முதலாளியக் கூட்டுக்கேற்றபடியேதாம் இயங்குவார்கள்.அவர்களில் இப்போது இலங்கையின் அபிவிருத்திக்கேற்றவர்கள் எவர்?

மேற்குலக மூலதனமா இல்லை ஆசிய மூலதனமா?

இரண்டினது இயல்பும் ஒன்றாகவேதாம் இருக்கும்.ஆனால்,ஆசிய மூலதனம் தன்னை நிலைப்படுத்தும் முன் தெரிவில் இலங்கையில் குடிசார் உரிமைகளைக்கொணர்ந்தே ஆகவேண்டும்.இது,மக்களது அழிவுகள் குறித்துக் கவனமெடுத்தே ஆகவேண்டும்.ஆனால்,மக்களைக் கொன்றுகுவித்த யுத்தக்கிரிமினல்களது பக்கம் இத்தகைய ஆசிய-மேற்குலக மூலதனங்கள் ஒளிந்து இயங்குவதால் இலங்கை மக்கள் எவரை ஆதரித்தாலும் அது விடிவைத் தரப்போவதில்லை.

தமிழ்பேசும் மக்கள் தமது அழிவுகளைக் குறித்துச் செயற்படுவதாகவிருந்தால் இத் தேர்தலில் தமது ஓட்டுக்களை எதிர்ப்பு அரசியலாக்க முடியும்.அது ஜனநாயக உரிமையினது அடிப்படையில்.அப்போது,உண்மையான மக்கள் பிரதிநிதியாக-மக்களுக்காக உழைப்பது,குரல்கொடுப்பதென்று சிவாஜிலிங்கம் முனைந்தால் அவருக்கு ஓட்டுப்போடலாம்.அவரைப்போல் விக்கிரபாகு கருணரெத்தினாவுக்கும் போடலாம்.ஆனால்,அவர்கள் எவரும் உண்மையான மக்கள் பிரதிநிதிகளாகவிருந்தால் இந்தப் பாராளுமன்றப் பண்டித் தொழுவத்தைக் கேலி செய்து மக்களை வர்க்க உணர்வோடு அணிதிரடி இனவழிப்புக்கு எதிராக ஆர்ப்பாட்டப் பேரணியாகத் தேர்தலைப் பகிஸ்கரித்து மக்களோடு மக்களாக முன் நின்றிருப்பர்.எனவே, இலங்கை வாழ் தமிழ் பேசும் மக்கள் இத் தேர்தலில் நாட்டங்கொள்ளத் தேவை இல்லை.இதைப் பகிஸ்கரித்துத் தமது அழிவுக்கு நீதி கேட்கும் நாளாக தேர்தல் தினத்தில் ஆர்பாட்ட ஊர்வலுஞ் செய்யலாம்.அப்படிச் செய்யும்போது இலங்கையின் அரச பாசிசத்தை உரைத்தும் பார்க்கலாம்.இதைவிட இலங்கை ஜனநாயகத்தில் நம்புவதற்கு வேறென்ன உண்டு?

மகிந்தா மானுடன் நேயன் என்றால்,நான் இவனால் கொல்லப்பட்ட ஆயிரக்கணக்கான மக்களது பிணத்தில் அரசியல் செய்து, அண்டிப் பிழைப்பவனே.இல்லை, „பொன்சேகா தமிழருக்குத் தீர்வு தருபவன்“ என்றால், இலங்கைப் பாசிச இராணுவத்தின் அத்துமீறிய ஒடுக்குமுறையையும்-பாசிச் சேட்டையையும் நியாயப்படுத்திப் பிழைக்கும் மனிதவிரோதி என்பதே சரியானதாகும்!

„இந்தக் கணம்வரை எதுவும் என்னிடமில்லை,
எனது சிந்தனையைத்தவிர தங்குதடையற்ற
என் ஆன்மாவை உலகத்துள் ஊற்ற முனைகிறேன்!
ஒவ்வொரு நாளியும்,கண்ணிமைக்கும் கணமும்
மகிழ்ந்திருப்பதென்பது இடையுறாத போராக…“

Fuer alle:

„KRIEG BEDEUTET FRIEDEN
FREIHEIT IST SKLAVEREI
UNWISSENHEIT IST STAERKE“-Dahn

யுத்தம் விடுதலையாக
அடிமைத்தனம் சுதந்திரமாக
அறியாமை பலமானதாக…

„…..“

ப.வி.ஸ்ரீரங்கன்
ஜேர்மனி
16.01.2010

P/S:
இக்கட்டுரைக்காக வாசிக்கப்பட்ட நூல்கள்,தளங்கள்:

http://www.uni-kassel.de/fb5/frieden/regionen/Bangladesch/indien2.html

http://www.imi-online.de/

Neues Deutschland, 14. Januar 2010

http://www.imi-online.de/download/EU-Studien-30-2007.pdf

# Vgl. Hantke, Martin (2008): »Alles wieder offen «. Georgienkrieg und imperiale Geopolitik. IMI-Studie 2008-10. Tübingen.

# Vgl. Wagner, Jürgen (2009): Gas-OPEC und afrikanische Nabucco.

http:// www.imi-online. de/download/JW-Gas-OPEC-Nabucco.pdf

# Kreimeier, Nils & Wetzel, Hubert (2007): EU und USA zittern vor neuer »Opec«, Financial Times Deutschland, 06.03.2007.

# U.S. Senate Committee on Foreign Relations, Senator Richard G. Lugar Opening Statement for Hearing on Oil, Oligarchs and Opportunity: Energy from Central Asia to Europe, 12.06.2008.

http://www.bmu.de/atomenergie_sicherheit/dossiers/doc/2708.php

Ausstieg aus dem Atomausstieg?:

http://www.greenpeace.at/406.html

http://www.bundestag.de/dokumente/textarchiv/2009/23866757_kw12_atomausstieg/index.html

http://mitglied.multimania.de/jenswahnfried/atomausstieg.pdf

 

http://srirangan62.wordpress.com/2010/01/16/அந்நியச்சக்திகளது-சதுரங/