இன்னும் வெட்டவும் புரளவும் தலைகள் இருக்கின்றன.
புதைப்பதற்கு சவுக்கந் தோப்புக்களும்
எலும்பும் கிடைக்காமல் எரிப்பதற்கு சுடலைகளும்
எங்கள் கண்காணிப்பில் தான்
வினவு என்பது வீண் வார்த்தை
 
அடங்கிப் போ ஆசான்கள் வருகின்றார்கள்.
எந்தக் கற்களையும் புரட்டிப் பாராதே
நாளைய புரட்சிக்காரர்கள் அங்கும் பதுங்கியிருக்கலாம்.
வீண் வம்பு பேசாதே வினவாதே விலகிப்போ
காட்டிக் கொடுக்கும் தோழனா நீ ?
 
புதியதாய் இனியொரு வியூகம் அமைப்போம்
வினவுவோர் எல்லாம் தூர விலகுங்கள்
கொலைக்களங்கள் தாண்டி வந்ததால்
எங்கள் கைகளிலும் சிவப்பு
இது தான் உங்களுக்கு வெறுப்பு என்றால்
வழிவிடுங்கள் தூ! தூய்மைவாதிகளே
 
விடுதலையின் விரோதிகளைச் சரித்தபோது
விழுப்புண்கள் சொரிந்த இரத்தம் நமது கைகளிலும்
சொல்லிவிட்டுப் போகின்றோம் சுயவிமர்சனமாய்
விலகுங்கள் வீணர்களே மக்கள் என்ன அறிவாளிகளா?