இன்றைக்கு ஒரு மீட்டிங் அசோக் நகர்ல இருக்கு வரீங்களா என்றேன் அலுவலகத்தில். ஆளாளுக்கு ஒரு சாக்கை சொன்னார்கள். அதில் ஒருவர் “உங்களால முடியுது பாருங்க எப்படித்தான் எப்படி மேனேஜ் பண்றீங்களோ”. “என்னங்க நான் என்னவோ சாகசம் பண்ணப்போறமாதிரி பேசறீங்க.

 மக்களோட பிரச்சினை சம்பந்தமா ஒரு மீட்டிங் அதை பாக்கறதுக்கோ அல்லது கேக்கறதுக்கோ தயராயில்லை அப்படித்தானே. உங்களோட நிகழ் கால பிரச்சினைகளை முகமுடி போட்டுகிட்டுதான் பாக்குறீங்க அது எத்தனை நாள் தாங்கும்?”

 

நான்  பர்மிசனை வாங்கிவிட்டு கிளம்பினேன், வருகிறேன் என்றவர்களை போய்க்கேட்டேன். “என்னபண்றது ஜாப் இருக்குல்ல”என்றார்கள். அன்று ஜாப் வரத்து குறைவு என்று எனக்கும் தெரியும். கார்டை ஸ்வைப் செய்து விட்டு லிப்டில் ஏறினேன். அதில் என்னுடன் பணி புரியும்  ஒரு பெண், ஒரு ஆண் வந்திருந்தார்கள். அவன் “என்னப்பா சீக்கிரம் கிளம்பிட்டே”என்க,


“ஒரு வேளை அவசரமா இருக்கு” என்றேன். ஏய் ஏதாவது டேட்டிங்கா வித்……… என்று இழுக்க எனக்கு சுளீரென்று கோபம் வந்தது. அருகில் வந்த பெண்ணோ சாதாரணமாக நின்று கொண்டு வந்தார். அவருக்கு கோபம் வந்த மாதிரி தெரியவில்லை.

 

நேரம் இப்பவே  ஆகிவிட்டது. இவனிடம் அதிகம் பேசிக்கொண்டிருக்க முடியாது, சுருக்கமாய் சொன்னேன் “டேட்டிங் இல்லப்பா மீட்டிங்க அங்க இப்படி எவனாவது பேசினா பீட்டிங்” . அவன் சிரித்தான். அடித்து பிடித்துக்கொண்டு கூட்டத்துக்கு போய்விட்டு வந்தேன். அடுத்தநாள் அப்பெண்ணிடம் கேட்டேன் “ஏங்க அவன் டேட்டிங் போறியான்னு என்னை கேக்குறான் உங்களுக்கு கோவமே வரலீயா?  டேட்டிங் அப்படிங்குற பேர்ல ஊர்மேயப்போறீயாங்குறான் பெண்களை இழிவுபடுத்துறான்  உங்களுக்கு ஏன் கோவம் வரல ?” அவர் அமைதியாய் இருந்தார்.

 

“பேசாம இருக்காதீங்க பேசுங்க” “அவர் சாதாரணமாத்தான சொன்னாரு அதை ஏன்?…….” “என்னது சாதாரணமா சொன்னானா? சரி அவனோ இல்லை வேற யாராவது பசங்க  ஒரு பெண்ணைப்பத்தி உங்க கிட்ட கிண்டலடிச்சா என்ன பண்ணுவீங்க? ” ” அவர் அமைதியாய் இருந்தார். “எவனுமே இது வரைக்கும் நான் அவளைபார்த்தேன் மூஞ்சு அப்படி இருந்துச்சு உங்ககிட்ட சொல்லி ஜோக் அடிச்சதே இல்லையா? அப்ப என்ன பண்ணுவீங்க?” “நான் எதுவுமே பேசமாட்டேன் அமைதியாயிருப்பேன் என்னால என்ன பண்ண முடியும்?” “என்ன பண்ண முடியுமா உங்க பாலியல்இனத்தை சேர்ந்த ஒருவரை ஒருத்தன் கேவலப்படுத்துறான் உங்களுக்கு அது ஏன் உரைக்கல? எனக்கு இருக்குற தன் மான உணர்ச்சி உங்களுக்கு ஏன் வரமாட்டேங்குது? சரி திட்டத்தான் தைரியம் இல்லை அங்க எந்த வெங்காயத்துக்கு இருக்குறீங்க குறைந்தபட்சம் அடுத்து வர நாட்களில அவன் கிட்ட பேசாம இருக்கவாவது முயற்சி செஞ்சுஇருக்கீங்களா என்ன?”

 

“எல்லாரும் உங்கள மாதிரி இருக்க முடியாது?  நீங்க வாழ்ந்துவந்த சூழல் அப்படி”  “தெளிவா சொல்லுங்க நான் சொல்றதே தப்பு அப்படிங்குறீங்களா? ஊர் மேயக்கூடாது ஆனால் அது தப்புன்னு ஊர்மேயரவனை  விமர்சிக்கவும் மாட்டேன். இது தான் உங்க கொள்கையா? அருமைங்க”  “என்ன பண்ண சொல்லுறீங்க?”


“உங்க பதில் நான் உங்களை கட்டாயப்படுத்துற மாதிரி இருக்குது. எப்படி வேணுமினாலும் வாழலாம் அது உங்க விருப்பம், ஒரு மனிதன் இப்படித்தான் வாழணுமின்னு கிடையாது அதுக்காக எது சுதந்திரம் எது விபச்சாரம்ன்னு கூடவா தெரியாது.

 

அதை விடுங்க போன மாசம் ஒரு மீட்டிங் இருக்குன்னு சொன்னேன் வரேன் சொல்லிட்டு கடைசியில போனை எடுக்க வே இல்லை. புரிஞ்சுக்கோங்க உங்க கலாச்சாரம் எதையுமே வெளிப்படையா முன்வைக்காத ஒரு நபரா உங்களை மாத்தியிருக்கு, கேட்டதுக்கு சினிமாவுக்கு போய்ட்டேன்னீங்க. அவசராவசரமா அடிச்சு புடிச்சு தியேட்டருல சீட் வாங்கி சினிமா பார்க்கத்தெரியுது ஆனா உங்களோட பிரச்சினையப்பத்தி மக்கள் பிரச்சினையப்பத்தி பேசத்தோணமாட்டேங்குது இல்லையா? அதுக்குப்பேர் என்னங்க எதுக்காக வாழறோம்ன்னு கூடத்தெரியாம வாழ்க்கைய ஓட்டிக்கிடு இருக்கமா இல்லையா? டிரஸ்ல இருந்து செருப்பு வரைக்கும் மேட்சிங்கா போடத்தெரியுற உங்களால டிரெஸ்ஸே இல்லாம இருக்குறவங்களப்பத்தி ஏன் சிந்திக்க முடியல?”

 

“ஏதோ என்னால முடிஞ்ச உதவியை நான் பன்ணிட்டுதான் வரேன்” “என்ன உதவி?” “பிச்சைக்காரங்களுக்கு காசு போடுவேன் அப்புறம்……..” “பிச்சைகாரனுக்கு காசு போடுறதால நம்ம நாடு அடிமைத்தனத்துல இருந்து மாறிடுமா? விவசாயத்தை திட்டமிட்டு அழிச்சாங்களே அது கடவுள் கிட்ட பிரார்த்தனை பண்ணுனா மாறிடுமா?பெண்களை கிண்டலடிக்குறவனெல்லாம் திருந்திவானா என்ன?”

 

“புதுசா சினிமாபோட்டா போகத்தெரியுது? இது ஏங்க தெரியமாட்டேங்குது?, தெரியாம இல்லைங்க எல்லாம் தெரியும் தான் சாவறதப்பத்தி தெரிஞ்சுக்கக்கூடாதுன்னு நினைக்குறீங்க, நீங்க பாதிக்கப்படுறதப்பத்தி பேச ஆரம்பிச்சா உங்க நண்பர்கள் வட்டாரம் குறஞ்சுபோயிடும் அப்புறம் சினிமாவுக்கு அல்லது ஊர் சுத்தவோ போகமுடியாது இதுதான உங்க கவலை. மத்தப்பொண்ணுங்களைபத்தி கிண்டலடிச்சா அங்க சிரிச்சுக்கிட்டு நிக்குறது அப்புறம் அவனே நம்மகிட்ட தப்பா நடந்துகிட முயற்சி பண்ணுனா அவன் கிட்ட மட்டும் பேசாம மத்தபடி அதே பேச்சு அதேவகை மத்தவங்களோட தொடங்குறது. நாமும் சேப்டியா இருக்கணும் மத்தபடி ஊர் சுத்தியும் ஆகணும் இல்லையா?

 

வாழ்க்கை எப்பவும் ஒரே மாதிரி இருக்காது. மற்றவன் சாவும் போது அதைபத்தி பேசாதவனுடைய சாவை பாரும் பேசப்போறதில்லை. எவ்வளவோ பேசுறீங்க அந்தப்படம் நல்லா இருந்துச்சு ஏய் உன் டிரஸ் நல்லா இருக்கு இந்த சுடி எங்க தைச்ச எவ்வளவோ விவாதம் பன்ணுறீங்க வெட்டியா ஜோதிகாவுக்கு கல்யாணம் நடக்குமான்னு தொடங்கி சிம்புவோட காதலி வரைக்கும், என்னைக்காவது உங்களப்பத்தி யோசிச்சு இருக்கீங்களா? ஒரு பெண்ணுக்குரிய,மனிதனுக்குரிய சுயமரியாதையோட வாழ்ந்து இருக்கீங்களா? ஆணாதிக்கத்தைப்பத்தி, சாதீயத்தைபத்தி, உங்களை நாயிலும்கீழா நினைக்குறானே இந்த கம்பெனி அவனைப்பத்தி,பாதிக்கப்பட்ட  பெண்ணைப்பத்தி பேசியிருக்கீங்களா?

 

“அப்படி பேசவிடாம எது தடுக்குது உங்க அடிமைத்தனத்தை தவிர, எதுக்கெடுத்தாலும் சொல்லுறீங்க  நான் அடிமை இல்லை எனக்காகத்தான் வாழறேன் எனக்கென்னவோ அப்படித்தெரியலையே உங்க உரிமைக்காகவே பேசாத நீங்க மத்தவங்களுக்காகவா பேசப்போறீங்க ” அவர் அமைதியாகவே இருந்தார் “உங்க அமைதி உங்களுக்கு எப்போதும்  நல்லது இல்லை, அதுதான் உங்களை கேவலப்படுத்தும் போதும் உங்களை அடங்கிப்போக வைக்குது” அவர் மீண்டும் அமைதியாகவே இருந்தார். “உங்களுக்கு இந்த மானங்கெட்ட கலாச்சாரத்தோடு  நுகர்வியலும் தேவை உங்களையும் பாதுகாத்துக்கணும், உங்க வாழ்க்கையை நீங்க தீர்மானிச்சுட்டீங்க ஆத்துல ஒருகால் சேத்துல ஒருகால்ன்னு கண்டிப்பா ஒருநாள் மூஞ்சில சேறு பூசி நிக்கப்போறீங்க. ஒண்ணும் மட்டும் உண்மைங்க அடிமையில ஆண் என்ன பெண் என்ன?”

http://kalagam.wordpress.com/2009/11/23/ஆண்-என்ன-பெண்-என்ன-2/