நாடுகடந்தெனினும் காசியண்ணா கனவு மெய்ப்படப்போகிறது
மேதகு எல்வாம் முடித்து மிதவாத தலைவர்களிடம்
தமிழன் தலைவிதியை தள்ளியுள்ளார்-
மண்ணில் எந்த முற்போக்குமெழா வண்ணம்
துடைத்தழித்து துரத்தி, யதார்த்தவாதி ராஜபக்ச
காலில்விழப்பாதி மீதியெல்லாம் புலத்தில் பிரகடனம்

இனிப்பழம் பழுக்கும் வெளவால் வரும்
பதின்மூணாம் சட்டம் எழும்
மேடைபோட்டு முழக்கமிடும்…எனினும்
இரத்தத்திலகமிட எவனும் வரமாட்டான்
மண்ணில் கொட்டிய குருதிகாயவில்லை
எடுத்துப்பொட்டிடுங்கள்
விசிலடிக்க கைதட்ட தென்பில்லை
வேதனையின் வடுக்கள் ரணமாகி
அழுகின்ற ஓலத்தை கேளுங்கள்
கைதுசெய்து கொண்டுசென்ற பிள்ளைகளின்
கதையெல்லாம் மறக்கும்…முகாமிலும்
தேர்தல்வரும் ஆச்சரியமில்லை
 
எந்தக்கண்ணிவெடி கிடக்கிறது..யாழில்
முஸ்லிம் சோதரர்கள் வாழ்ந்த நிலத்தில்
மீளக்குடியேற்று
காட்டைவெட்டி களனியாக்கி வாழ்ந்த கரங்களிலே
வீட்டைக்கட்டிக்கொடு
மீள்கட்டுமானம் நீட்டியதுவக்குகளின் நடுவே
முகாமிற்குள் றோட்டுப்போடுவதில்லை
வாழ்ந்த நிலத்திற்கு மீளச்செல்வது
கேட்டுப்பாருங்கள் பேரினவாதப் பேயிடம்
பின்னணியில் நின்ற காந்திதேசத்திடம்
கண்மூடிக்கிடந்த கருணை வள்ளல்களிடம்
எவன் வருவான்
உழைக்கும் மக்களும் சிந்தனையும்
ஓங்கிஒலிக்காவரை எவன் தருவான்