இந்த நிமிடத்தில் ரீ.ஆர்.ரீ வானொலியில் இடம்பெறும் சங்கமத்தை கேட்கிறேன்.அதுள், ஒரு பாடல்:ஈழம் தாங்குமோ...ஞாலம் உணர்ந்திடுமோ...என்று எமது துயரத்தை நினைந்துருகும் பாடல்.எனது உணர்வுகள் அஞ்சலியாகத் தோழர் இரயாகரனூடக தத்துவார்த்த முறையில் வந்துள்ளது.அவர் எமது கையறு நிலையிலும் சளைக்காது எழுதுகிறார்.

என்னால் முடியவில்லை!

 

புலிகளின் தலைமையை நயவஞ்சகமாகச் சரணடையவைத்துக் கொன்றவர்கள் நமக்குள்ளேயே மீளவும் சதி அரசியலை முன்னெடுக்கின்றார்கள்.

 

இந்திய-உலக நலன்கள்,பொருளாதாரக் கனவுகள்,புவிசார் இராணுவத் தந்திரோபாயங்கள் ஈழத்தில் தோன்றிய இயக்கங்களை வலுவாகச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கியது.இத்தகைய அந்நிய நெருக்கடிகளால் எமதுமக்களின் ஆளுமை சிதறி, நாம் அழிவுற்றோம்.அன்று ஆயுத இயக்கங்களாகத் தோன்றிய அமைப்புகளில் பல சதிகளால் சிதைவுற்றுப் போனபின்,புலிவழிப் போராட்டமானது மக்களின் அதிகாரத்தை முதன்மைப்படுத்தாது இயக்க நலன்களை முதன்மைப்படுத்தியும்,இயக்க இருப்புக்காகவும் அந்நிய நலன்களை இலங்கைக்குள் நிலைப்படுத்த முனைந்த சதிமிக்க அரசியலால், இன்று நமது மக்கள் தமது உற்றார் உறவினர்களையும்,தமக்காக இதுவரை களத்தில் நின்ற பல்லாயிரம் தமது குழந்தைகளையும், வாழ்விடங்களையும் பறிகொடுத்து அநாதைகளாகிறார்கள்-இப்போராட்டம் நயவஞ்சகமான அரசியலின் அதே தொடர்ச்சியால் புலிகளைப் பூண்டோடு அழித்துத் தலைமையே காட்டிக்கொடுத்துக் கொலை செய்துள்ளது.நெஞ்சே அடைக்கும் துக்கம்,நமது மக்களது இந்த அநாதையான நிலையால் உருவாகிறது!

 

இத்தகைய மனித அவலத்தையே மீளத் தமது அரசியல் வியூகமாகப் பயன்படுத்தும் நமது கயமைமிகு வெளிவிவாகரப் புலித்தலைமை தாம்கொண்டுள்ள மக்களது நிதிக்களைத் தமதாக்கும் முயற்சியில் நம்மை ஏமாற்றச் செய்யும் கபட அரசியலுள், பிரபாகரன் இன்னும் உயிருடன் இருப்பதாகக் கருத்துரைத்து நமது மக்களை அந்நியச் சக்திகளுக்கு முற்றுமுழுதாக அடிமைப்படுத்திவிடத் துடிக்கிறது.இது கடைந்தெடுத்த துரோகம்!இதுவரை போராடிய தலைவனுக்கே ஒரு அஞ்சலி செய்ய முனையாத கயவர்களைத் தண்டித்தே ஆகவேண்டும்.

 

இன்று இடம்பெற்றுவரும் மிகக் கேவலமான புலி எதிர்ப்பு-புலி ஆதரவுப் பரப்புரைகள் நம்மை முட்டாளாக்கிவிட்டு,தம்மைத் தலைவர்களாக்கும் விய+கத்தைக் கொண்டிருக்கிறது.தமிழ் மக்களது பிணம் தின்னிகளான இந்த முகமூடி மனிதர்கள் இப்போது பற்பல முகாமுக்குள் நின்று, நம்மைக் குழப்பியெடுக்கிறார்கள். நம்மை,நமது வாழ்வைக் கேவலமாக்கும் கும்பல்களாக்க முனையுமிந்த அரசியல் பொறுக்கிகள், அற்ப சலுகைகளுக்காக நமது ஜனநாயக உரிமைகளை-வாழ்வாதார அடிப்படையுரிமைகளை, அந்நிய நாடுகளின் அரசியல்-பொருளியல் நலன்களுக்குத் தாரைவார்த்துக் கொடுக்கும் பொறிமுறைகளை இந்தப் புலியழிப்பு யுத்த்தில் குறியாகக்கொண்டியங்கியுள்ளார்கள்.இவர்களே இறுதிவரைப் புலித்தலையை வன்னிக்குள் முடக்கிப் பிரபாகரனது குடும்பத்தையே முற்றாகக் கொன்று குவித்துள்ளனர்.இவர்கள் அனைவரும் பிரபாகரனின் இடத்தைப் பிடித்திடவும்,அவரைவிடப் பன்மடங்கு நம்மையொடுக்கவும், அந்நியரோடு சேர்ந்து காரியமாற்றத் தொடங்கிவிட்டார்கள்.இவர்கள் எவருமே மக்களின் நலனுக்கான ஜனநாயக விழுமியத்துக்காகக் குரலிடவுமில்லை,போராடவுமில்லை.இவர்களிடம் ஆயுத, ஊடக-பணப்பலமுண்டு.இதன்மூலம் நம்மைச் சிதைத்துச் சின்னாபின்னமாக்கி வெறும் கொத்தடிமைகளாக்கும் அரசியலை முன்னெடுக்கத் திட்டமிட்டுள்ளார்கள்.கடந்த சில மாதங்கள்முன் புலித்தலைவர் பிரபாகரனால் முன்மொழியப்பட்ட இன்றைய வெளியுலகப் புலிப் பொறுப்பாளர் குறித்து நீண்ட கேள்விகளை நாம் ஏலவே எழுப்பியிருக்கின்றோம்.

 

நமது தேசியத் தன்மைகளைக் குலைக்க முனையும் சக்திகள் எமது மக்களில் ஒருசாரர்களை,அவர்களது வர்க்க நலன்களுக்கிணங்கப் பயன்படுத்துகிறது.தமிம் மக்களின் சுயநிர்ணய உரிமையை-தேசிய அபிலாசைகளை, தமிழ் மக்களின் வாழ்வியல் உரிமைகளைக்காக்கும் சுயசார்பு அரசு ஒன்றால் பாதுகாக்கப்படுவதை நமது எதிரிகள் எவரும் விரும்புவதில்லை. இந்த நிலையில் நமக்குள் பற்பல முரண்பாடுகளை அவ்வப்போது செயற்கையாக உருவாக்கி, நமது இறைமையைச் சிதைப்பதில் தமிழ் மக்களின் எதிரிகள் விழிப்பாகவே இருக்கிறார்கள்.இதன் காரணத்தால் தேசியத்தின் குறியீடாகப்பட்ட பிரபாகரனை நயவஞ்சக வலையில் வீழ்த்திக் கொன்றதன் தொடர்ச்சியில் இவ்வர்க்கம் வெற்றியீட்டியுள்ளது.

 

இத்தகைய எதிரிகளை நாம் வலுவாக முறியடித்தாகவேண்டும்!

 

அதற்கு நம்மிடமிருக்கும் அனைத்து வளங்களையும் நமது மக்கள் பயன்படுத்தி,அதை அனைத்துச் சிறுபான்மை இன மக்களுக்குமான விடுதலையைத் தோற்றும் அரசியல் நகர்வாக முன்னெடுப்பதும் காலத்தின் அவசியமாகும்.சர்வேதேச மனிதவுரிமை-போராட்ட நெறிகளுக்கு எதிராகச் சரணடைந்தவர்களை இரகசியமாகக் கொலை செய்த இந்திய-இலங்கை அரசகூட்டை அம்பலப்படுத்திச் சர்வதேச அரங்கில் போர்க் குற்றவாளிகளாக்க வேண்டும்.இதற்காகக் கொல்லப்பட்ட புலித்தலைமைகளது நிலைமைகள்-எங்ஙனம் ஏமாற்றப்பட்டார்களென்பது அவசியமாகத் துருவி ஆராயப்படவேண்டும்.

 

தமிழ் இளையோரே,

எம் ஆற்றலைவிட

ஆயிரம் மடங்கு ஆற்றலுடைய

அமீபாக் குஞ்சுகளே!

வெளியே வாருங்கள்,

எம்மை வேரோடு சாய்த்த

நயவஞ்சகர்களை இனங்காணுங்கள்.

வஞ்சகத்தால் வீழ்ந்த புலித்தலைமைக்கு

நேரடியாக அஞ்சலியைச் செய்யுங்கள்

 

இதிலிருந்து உணர்வோடு

ஒன்றித்துப்போகாதே!

தவறுகளைக் கற்பதற்கு

உண்மையோடு உறவாடுங்கள்.

போராட்டம் தோற்றதன் தவறுகளை

மீளாய்வு செய்யுங்கள்.

நாம் இதுவரை சொன்னவற்றை கிண்டிக்கிளறுங்கள்.

 

புலிகளது போராட்ட முறைகளை மதிப்பிடுங்கள்.

இப்போது தலைமையை அழித்த

புலிக்குள் இருக்கும் நயவங்சகக் கூட்டையும்

அதன் பின் அணிவகுத்து

மக்கள் சொத்தை-புலிகள் நிதியைக் கொள்ளையடிக்க முனையும்

வர்க்கத்தைக் கண்காணியுங்கள்

உங்களால் இது முடியும்.

 

யாரது உயிரையும் யாரும் எடுக்க வேண்டாம்.நிமலன் என்ற ரீ.ஆர்.ரீ.வானொலி நேயரது கருத்தை மறுதலித்து முன்னேறுங்கள்.நாம் கொலைகாரர்கள் இல்லை-விடுதலைப் போராட்ட வீரர்கள் என்பதை நிரூபியுங்கள்.நீங்கள்தான் புலிகள் என்பதை பிரகடனப்படுத்தும் நீங்கள்,புரட்சிகரமாகச் சிந்திக்க முனையுங்கள்.உணர்ச்சிகரமான அரசியலைவிட்டு உண்மைகளைக் காணுவதற்காக வன்கொடுமை யுத்தத்தால் கொல்லப்பட்ட தமிழ்பேசும் மக்களுக்கும், நயவங்சகத்தனமாகக் கொல்லப்பட்ட புலித்தலைவர் பிரபாகரனுக்கும், பல்லாயிரம் போராளிகளுக்கும் அஞ்சலியைச் செய்யுங்கள்.

 

மக்களைச் சுயவெழிச்சுக்குள் தள்ளி அவர்களால் போராட்டத்தை முன்னெடுக்கத் தடையாகவுள்ள ஒவ்வொரு நாளியும் நமக்கு ஆபத்தே!மக்கள் சுயமாகப் போராடாது தடுத்துவருபவர்கள் மக்களின் விரோதிகள் என்பது நமது நிலைப்பாடாகவே இருக்கிறது.எங்கள் மக்களின் தயவில் சாராத எந்தப் போராட்ட வியூகமும் இலங்கை-இந்தியச் சதியை முறியடித்து நமது மக்களை விடுவிக்க முடியாது.இது, நாம் அறிந்த நமது போராட்ட அநுபவமாகவே இப்போதும் விரிகிறது.நமது போராட்ட இயக்கம், நமது மக்களைத் தொடர்ந்து ஆயுதங்களால் மிரட்டிப்பணிய வைத்தபடி நமது மக்களை முட்டாளாக்கி அந்நிய சக்திக்களுக்கு அடியாளாக இருப்பதை எமது இளைய தலைமுறை நிராகரித்துத் தமது வளங்கள் அனைத்தையும் பயன்படுத்துப் புலிகளின் தவறுகளையும்,புலித் தலைமையைக்கொன்று அத்தலைமையைக் கைப்பற்றியச் சதிகாரக்கூட்டத்தையும் இனங்கண்டு முறியடித்தாவேண்டும்.இதனூடகப் புதிய முறையில் போராட்டபாதைகளைத் தகவமைத்துப் புரட்சிகரமாக இளைய தலைமுறை அணிதிரளவேண்டும்.இவர்களை வழிநடாத்தும் புரட்சிகரத்தலைமை உருவாகவேண்டும்.இது,காலத்தின் தேவையாக நம்முன் இருக்கிறது.போராட்ட அணிகளைப் புரட்சிப்படையாக மறுசீரமைப்பது இன்றைய எமது இழி நிலையிலிருந்து நாம் கற்கும் பாடமாகும்.இதைப் பின்தள்ளும் புத்தி ஆபத்தானது.

 

வரலாறு காணாத துரோகத்தைச் செய்வித்த உலகத்தை இனம்காண்பதும், அவர்களைப் புரட்சியின்-ஈழவிடுதலையின் எதிரிகளாகப் புரிந்துகொள்ளுங்கள்.இந்தப் புரிதலில் புலிகள் உருவாகியுள்ள நயவஞ்சக வெளிவிவாகாரத் தலைமையை இனம்கண்டு அம்பலப்படுத்துங்கள்.இது, அவசியமானவொருபணியாகவே இப்போது உங்கள்முன் இருக்கிறது.

 

உங்கள் போராட்டவுணர்களோடு தமது இருப்பை உறுதிசெய்ய முனையும் இத்தலைமை உண்மைகளைமறைத்துத் தமது துரோகத்தை பிரபாகரன் உயிருடன் இருப்பதாகச் சொல்லி மறைப்பதற்கெடுக்கும் முயற்சிகளைத் தோற்கடியுங்கள்.இதிலிருந்து புரட்சிகரமானவொருபணியாகப் புலிகளது தோல்விக்கான காரணிகளைக் கண்டடையும் ஆய்வுகளை செய்யுங்கள்.அதற்கான தகமை உங்களுக்கு உண்டு.

 

நமது மக்களது சாவில் அரசியல் செய்ய முனையும் இந்தியக் கைக்கூலி கருணாவையும்,டக்ளசையுமே சுற்றித் துரோக அரசியலைப் புரிவதைவிடப் புலித் தலைமைக்குள் புதிதாகவுருவாகிய ஏகாதிபத்தியங்களின் கைக்கூலிகளை முதலில் இனங்காண்பதற்கான தேடுதலில் இறங்குங்கள்.அதற்காக நயவஞ்சக வலையில் வீழ்ந்து மரணித்த உங்கள் தேசியத் தலைவர் பிரபாகரனது மறைவுக்கும் நேர்மையோடு அஞ்சலிக்க முனையுங்கள்.

 

பிரபாகரன் உயிரோடிருப்பதாகக் கட்டுரை எழுதிப் புதிய நயவஞ்சகர்களைக் காப்பதற்கு முனையாதீர்கள்!

 

இதுவரையான வெளித் துரோகங்களை இனம் காணும் நீங்கள், உட்துரோக அரசியலது தலைமையை இனங்காண்பதில் தவறிழைத்துள்ளீர்கள்!எமது வாழ்வு பலவகைகளிலும் நாசமாக்கப்பட்டு,மனிதவுரிமைகளற்ற காட்டுமிராண்டித்தனமான சூழலில் எமது மக்கள் வாழும்போது, சிங்கள அரசின் அத்துமீறிய யுத்தங்கள் கிழக்கிலும் வடக்கிலும் அவர்களைக் காவுகொண்டு-அவர்தம் சமூகவாழ்வையே சின்னாபின்னாமாக்கியுள்ளது.கடந்த ஒருசில வாரத்தில்மட்டும் பல பத்தாயிரம் தமிழ் மக்களைக் கொன்றுகுவித்துள்ள இந்திய-இலங்கை அரசுகள் புலிவழிப்போராட்டத்தை முழுமையாக அழித்துள்ளது.

 

இந்நிலையில்,புலித்தலைமை எங்ஙனம் காட்டிக்கொடுக்கப்பட்டதென்பதை முதலில் புரிவதற்கு,அவரது மரணத்தை மறைக்க முனையும் அரசியலைக் கேள்விக்குட்படுத்துங்கள்.இனிமேலும் மறைப்பு அரசியலில் மறைந்திருந்து துரோகத்தைத் தியாகமாக்க முனைவது, எமது மக்களது முற்றுமுழுதான அடிமைத்தனத்தை உறுதிப்படுத்தும் அரசியலாகவே மாறும் அபாயம் உண்டு.இதைக் கணக்கிலெடுங்கள்.

 

புலியழிப்பென்ற போர்வையில் தமிழர் தேசியவிடுதலையையே அழித்தெறிந்த இந்த இருள்சூழ்ந்த அவலத்தை மறைத்து,இத்தகைய யுத்தம் புலிகளை-புலிகளின் பயங்கரவாதத்துக்கெதிரானதாகக் காட்டி உலகத்தை ஏய்த்த பிற தமிழ்குழுக்கள்-கட்சிகள் இந்தியாவின் எலும்புத்துண்டுக்காக நமது மக்களின் எதிர்காலத்தோடு தமது குறுகிய அரசியல் இலாபத்துக்காகப் பொறுக்கித்தனமாக அரசியல் செய்யும் இன்றைய சூழலாக எமக்கு முன் விரிகிறது!பிரபாகரனது உடலத்தை அடையாளங்காட்டும் தமிழினத்துரோகி கருணா சிரித்தபடி இராஜபக்ஷவுக்குப் புகழாரஞ் செய்கிறான்,மக்களைப் பூண்டோடு அழித்துப் புலித் தலைமையைக் கொன்றதற்காக.

 

புலித்தலைமையை நயவஞ்சகமாகக் காட்டிக்கொடுத்து அழித்த புதிய புலித்தலைமையின் அரசியல், மக்களின் அபிலாசைகளின் வாயிலாக வெளிநாடுகளில் வாழும் புலம்பெயர் மக்களிடம் திரட்டப்பட்ட செல்வங்களைக் கைகயகப்படுத்தியபடி புதியஅதிகாரங்களும் அதனூடாகப் பெறப்பட்ட-பெறப்படும் பதவிகளும் பாரிய அதிகாரச் சுவையை, நாக்கில் வீணியூறும் படியாக ஆசையாக்கி விட்டுள்ளது.இதன்வாயிலாகவெழும் அற்ப விருப்புகள் மக்களின் உரிமைகளையே பாசிச அதிகார மையங்களுக்கு அடகு வைத்துத் தமது நலனை அடைவதில் குறியாகவுள்ளது.இத்தகைய சூழலில்தாம் இன்று பற்பல கொலைகள் வீழ்ந்து வருகிறது.அரசியல் கொலைகள் எத்துணை அவசியமாக நமது நாட்டில் முன்னெடுக்கப்படுகிறது.இவற்றினூடாகக் காய் நகர்த்தித் தம் வலுவைத் தக்கவைக்க முற்படும் அதிகார மையங்கள் நம் இனத்தின் விடிவுக்கு வேட்டுவைத்தே இதைச் செய்கிறார்கள்.பிரபாகரனை நம்ப வைத்துக் கழுத்தறுத்தவர்களது கனவு இங்ஙனமே அவரது சரணடைவை வற்புறுத்தி,அதை மக்களுக்கு தெரியாதபடி மறைத்து அவரை ஈனத்தனமாகக் கொன்றுள்ளது.இந்தத் துரோகத் தலைமையை நாம் இனம் காணவேண்டாமா?

 

அன்பு வாசகர்களே,எமது பரம எதிரியான சிங்கள அரசு-இந்திய அரசு இன்றைய பொழுதில் தமிழ் மக்களின் இரட்சகனாகப்படும் ஒரு மாயையான சூழலில் நாம் இருத்தி வைக்கப்பட்டுள்ளோம்.எனவே,புலம்பெயர் புலிகளுக்குள் மக்களின் குரல்கள் ஓங்கியொலித்தாகவேண்டும்.இயக்கம் தனது கட்டமைப்பை மக்களோடு மக்களாக்க நிற்கும் பாரிய மறுசீரமைப்பைச் செய்தே ஆகவேண்டும்.இல்லையேல், தொடரும் சிங்கள-இந்தியக்கூட்டுப் புலிகளின் தலையை நயவஞ்சகமாக அழித்துவிட்டதுபோன்று, நமது குழந்தைகளின் கைகளிலுள்ள சரியான போராட்ட உணர்வையும் அவர்களது அறிவையும் பறித்துவிடப் போகிறது.அவர்களது சிந்தையை வேறு பக்கம் திருப்பவே மறைப்பில் பற்பல வியூகங்கள் அமைக்கப்படுகிறது.

 

அந்நிய சக்திகளிடம் கண்டுண்டு கிடக்கும் இலங்கைத் தேசத்தின் ஆளும் வர்க்கத்தால் ஈழத் தமிழர்களின் சுயநிர்ணயவுரிமை உதாசீனப்படுத்தப்படுகிறது.இதன் தொடர்ச்சியாக அவர்களது வரலாற்று வாழ்விடங்கள் இல்லாதாக்கப்பட்டு,தமிழர்கள் தேசம் தொலைத்த ஜிப்சி இனத்துக்குத்தோதானவொரு இனமாகப்பட்டுச் சிங்கள ஏக இனவாதம் தொடர்ந்து இருத்தி வகை;கப்படுகிறது.இதைப் பிரபாகரனது மரணத்தில் வெடிகொளுத்தி ஆனந்தக் கூத்தாடும் மக்களிடமும்,பிரபாகரனது உயிரற்ற உடலத்தைத் தோளில் வைத்துக் கூத்தாடும் சிங்கள இராணுவத்தின் அகவிருப்பிலிருந்தும் நாம் முழுமையாக இனங்கண்டாக வேண்டும்.

 

ஓணானை அடித்துக் கயிற்றில் கட்டியிழுத்து விளையாடும் சிறார்களது நிலையில்,சிங்கள இளைஞர்கள் கூத்தாடுகிறார்கள்!இது,இனவாதக்கூத்து.தமிழர்களை வென்றதற்கான கூத்து!!

 

இதற்குப் பதிலுரைக்கும் கடமை தமிழ் இளைஞர்களுக்குண்டு.அதை அவர்கள் செய்தே தீருவார்கள்.எம் சிறார்கள் மூடர்களில்லை.அவர்கள் போராட்ம் என்றால் என்னவென்று புரட்சியைக் கற்றுத் தமது வரலாற்றுக் கடமையைத் தொடருவார்கள்.அப்போது, எந்தப்பெரிய இந்திய-உலகச் சதியும் அவர்களிடம் தோற்கும்.இந்த நம்பிக்கையில் நயவஞ்சகமாகக் கொல்லப்பட்ட மக்களுக்கும்,போராளிகளுக்கும்,புலிகளது தலைவர்களுக்கும் எமது புரட்சிகரமான வீர வணக்கம்!

 

என் இனத்தின் அழிவில் நின்று

களிநடனமிடும் சிங்களத்து விருப்பு இருக்கும்வரை

நீ தமிழ்த் தேசியத்தின் குறியீடே பிரபா!

 

என் மக்களுக்கும்,

உன் சேனைகளுக்கும்,

உனக்கும் அஞ்சலிப்பது மட்டுமல்ல

எம்மை வீழ்த்திய

உனக்குள் மறைந்திருந்த நயவஞ்சகத் தலைமையையும்

இனங் காண்பதும் எனக்கும்

என் அடுத்த தலைமுறைக்கும் அவசியமானதே!

 

 

ப.வி.ஸ்ரீரங்கன்

24.05.09