கார்பன் மோனாக்சைடு என்பது ஒரு கரி அணுவும், ஒரு ஆக்சிஜனும் இணைந்தது. இது எரிபொருள் சரியாக எரியாவிட்டால் வரும். எரிபொருள் நன்றாக எரிந்தால் கார்பன் டை ஆக்சைடு என்ற வாயு வரும்.

கார்பன் மோனாக்சைடு என்பது பெரும்பாலும் வண்டிகளில் இருந்து வரும். நமது இரு சக்கர, மற்றும் நான்கு சக்கர வாகனங்களை சரியாக பராமரிக்காவிட்டால் இது அதிகமாக வரும். சென்னையில், அதிக போக்குவரத்து இருக்கும் நேரத்தில் நிச்சயமாக இது அதிக அளவில் இருக்கும். சிகரெட் புகையில் இது மிக அதிக அளவில் உள்ளது

இதனால் என்ன பாதிப்பு? இது நாம் சுவாசிக்கும்பொழுது உடலில் ஆக்சிஜன் சேர்வதை தடுத்து விடுகிறது. நமது ரத்தத்தில் சிவப்பணுக்கள்தான் ஆக்சிஜனை காற்றிலிருந்து எடுத்துக்கொள்ளும். ஆனால், கார்பன் மோனாக்சைடு, அந்த சிவப்பணுக்களுடன் சேர்ந்து (வினை புரிந்து) ஆக்சிஜன் சேராமல் பார்த்துக்கொள்ளும். உடலில் ஆக்சிஜன் குறைவானால்?
முதலில் தலைவலி, பின் தலை சுற்றல், மயக்கம் கடைசியாக இறப்பு.

கார்பன் மோனாக்சைடில் உள்ள பெரிய பிரச்சனை என்ன என்றால், அதற்கு நிறமோ மணமோ கிடையாது. நம் வீட்டு சமையல் எரிவாயு கசிந்தால், அதில் ஒரு வித துர்நாற்றம் வரும். உடனே நாம் “அபாயம்” என்பதைப் புரிந்து கொண்டு கசிவை நிறுத்தவும், அந்த இடத்தை விட்டு எல்லோரையும் வெளியேற்றவும் செய்யலாம். கார்பன் மோனாக்சைடு இருந்தால், முதலில் கொஞ்சம் தலை வலிக்கும். “சரி, இன்னிக்கு ஆபிஸில் வேலை அதிகம் போல” என்றோ, “வெயில் அதிகம்” என்றோ நினைத்துக் கொள்வோம். கொஞ்ச நேரத்தில் தூக்கம் வருவது போல இருக்கும். சுதாரிக்காவிட்டால் மயக்கம் வந்து விடும். அதே இடத்தில் கவனிப்பாரற்று இருந்தால் இறந்து விடுவோம்.

பல சமயங்களில் வீட்டில் நெருப்பு வந்தால், பலர் நேரடியாக நெருப்பால் சாவதை விட, கார்பன் மோனாக்சைடை சுவாசித்து நினைவிழந்து (அல்லது தலை சுற்றி நகர முடியாமல்) பின்னர் நெருப்பில் எரிந்து போவது உண்டு.

இதனால்தான் அமெரிக்காவில் எல்லா வீடுகளிலும் கார்பன் மோனாக்சைடு அலாரம் (Carbon Monoxide Detector Alarm) நிச்சயமாக இருக்கும். இது மேல் சுவற்றில் இருக்கும். இது சட்டப்படி நடக்கிறது. (நமது இந்திய சமையலில் மிளகாய் போட்டு தாளிக்கும் போது அது ‘கீ கீ' என்று அலறும். நம் மக்களும் அவசர அவசரமாக chair மேல் ஏறி, ஈரத்துண்டால் அந்த அலாரத்தை மறைத்து, புகை அதை நெருங்காமல் பார்த்துக் கொள்வார்கள். அலாரம் நின்று விடும்).

இந்த மாசு ஒரு விஷயத்தில் பரவாயில்லை. அது என்ன என்றால், நம் உடல் இதை கொஞ்சம் கொஞ்சமாக வெளியேற்றி விடும். இதை கொஞ்ச அளவு சுவாசிக்க நேர்ந்தால், நாம் சுத்தமான காற்றை கொஞ்ச நேரம் சுவாசித்தால் போதுமானது. தனியாக மருந்து மாயம் தேவையில்லை. அதிக அளவு சுவாசித்தால், நிறைய நாள் பாதிப்பு இருக்கும்.

நைட்ரஜன் ஆக்சைடுகள்: இவை நைட்ரஜன் வாயுவும் ஆக்சிஜனும் இணைந்து வரும் வாயுக்கள் ஆகும். குறிப்பாக NO மற்றும் NO2 ஆகிய இரண்டும் மாசுக்களாகும். மற்ற N2O , N2O5 போன்ற வாயுக்கள் மாசாகக் கருதப்படாது. ஏனென்றால அவற்றால் அவ்வளவு பாதிப்பு இல்லை.

NO மற்றும் NO2 இந்த இரண்டும் பொதுவாக NOx என்று சொல்லப்படும். இதை “நாக்ஸ்” என்று சொல்லுவார்கள். இவை எங்கிருந்து வருகின்றன?

நமது இருசக்கர (மூன்று சக்கர) மற்றும் நான்கு சக்கர வண்டிகளில் இருந்து வருகின்றன. இந்த வண்டிகளில், என்ஜின் ஓடும்பொழுது வெப்ப நிலை அதிக்மாகிறது. அப்போது காற்றில் இருக்கும் நைட்ரஜனுடன் ஆக்சிஜன் வினை புரிந்து ‘நாக்ஸ்' வருகிறது.

இது தவிர, அனல் மின் நிலையங்களில் இருந்தும், ஆலைகளில் இருந்தும் வருகிறது. பொதுவாக அதிக வெப்பனிலையில் காற்று ‘நாக்ஸை' உருவாக்கும்.

சரி, இதனால் என்ன பாதிப்பு? ஒன்று, இவை காற்றில் நீராவியுடன் இணைந்து ‘அமில மழை' ஏற்படக் காரணம் ஆகிறது. அமில மழையால் ஏரிகளில் உள்ள மீன்கள் சாவதும், பயிர்கள் அழிவதும், கட்டடங்கள் ‘கரைவதும்' நடக்கின்றன.

நாக்ஸின் இன்னொரு விளைவு, காற்றில் 'smog' என்று சொல்லப்படும் புகை மண்டலத்தை உருவாக்குகிறது. காற்றில் நாக்ஸ் மட்டும் இருந்தால் பரவாயில்லை. கூடவே ‘VOC' எனப்படும் ‘எளிதில் ஆவியாகும் கரிமப் பொருள்' (உதாரணம் பெட்ரோல் ஆவி) இருந்தால், இரண்டும் இணைந்து புகை மண்டலத்தை உருவாக்கும். அதனால் நமது நுரையீரல் பாதிக்கப்படும்.

குறிப்பு. இவை ‘Green House gases' எனப்படும் ‘பூமியின் வெப்பத்தை அதிகரிக்கும்' வாயுக்கள் அல்ல. N2O எனப்படும் வாயு பூமியின் வெப்பத்தை அதிகரிக்கும். ஆனால் அது ‘நாக்ஸ்' என்ற வகையில் வராது.

http://fuelcellintamil.blogspot.com/2008/03/2-air-pollution-control-2.html