நம்பிக்கை வாக்கெடுப்பையொட்டி மீண்டும் அழுகி நாறிய நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தை வீழ்த்திவிட்டு, மக்களுக்கு அதிகாரமளிக்கும் புதிய ஜனநாயகப் புரட்சிக்கு அணிதிரளுமாறு மக்களை அறைகூவி, ம.க.இ.க., வி.வி.மு., பு.மா.இ.மு., பு.ஜ.தொ.மு. ஆகிய புரட்சிகர அமைப்புகள் கடந்த 22.7.08 அன்று தமிழகமெங்கும் அணுசக்தி துரோக ஒப்பந்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டங்களை நடத்தின. அதன் தொடர்ச்சியாக, "அடிமையாக்குகிறது அணுசக்தி ஒப்பந்தம்; கொல்லுகிறது விலைவாசி; நாறுகிறது நாடாளுமன்றம்; இனி நாட வேண்டியது நக்சல்பாரி பாதையே!'' எனும் முழக்கத்துடன் இவ்வமைப்புகள் தமிழகமெங்கும் வீச்சாகப் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன.

 

6.8.08 அன்று ஈரோடுஅக்கிரகாரம், மாணிக்கம்பாளையம் சூளை பகுதியில் தெருமுனைக் கூட்டங்கள், 11.8.08 அன்று ஈரோடு மாவட்டம் வெள்ளக் கோவிலில் பொதுக்கூட்டம், 13.8.08 அன்று கோவில்பட்டியில் பொதுக்கூட்டம், 14.8.08 அன்று சென்னை பச்சையப்பன் கல்லூரி அருகே அரங்கக் கூட்டம், அதேநாளில் மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் பொதுக்கூட்டம், 16.8.08 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே ஆலம்பட்டியில் பொதுக்கூட்டம், 17.8.08 அன்று சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே ஆனைக்கவுண்டம்பட்டியில் பொதுக்கூட்டம், அதேநாளில் சென்னைதிருவெற்றியூரில் அரங்கக்கூட்டம், 21.8.08 அன்று மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே சாத்தாங்குடியில் பொதுக்கூட்டம், 22.8.08 அன்று தேனி மாவட்டம் தேவாரத்தில் பொதுக்கூட்டம், 25.8.08 அன்று சென்னை பல்லாவரத்தில் தெருமுனைக் கூட்டம் என தொடர்ச்சியாக இவ்வமைப்புகள் பிரச்சார இயக்கத்தை நடத்தி வருகின்றன. கேலிச்சித்திர கண்காட்சி, சிறுவர்களின் கலைநிகழ்ச்சி, குறுநாடகங்கள், ம.க.இ.க. மையக் கலைக்குழுவின் புரட்சிகர கலை நிகழ்ச்சி ஆகியவற்றோடு நடத்தப்பட்ட இப்பிரச்சார இயக்கம் உழைக்கும் மக்களிடம் பெருத்த வரவேற்பைப் பெற்றுள்ளது. அணுசக்தி துரோக ஒப்பந்தத்தை எதிர்க்கும் அதிகாரமே இல்லாத நாடாளுமன்ற போலி ஜனநாயகத்தையும், துரோகிகளான ஓட்டுக் கட்சிகளையும் திரைகிழித்துக் காட்டிய இப்பிரச்சார இயக்கம், நக்சல்பாரி புரட்சிப் பாதையில் போராட மக்களை அறைகூவுவதாக அமைந்தன.