நீறு பூத்த நெருப்பாக இருந்து வந்த காசுமீர் மக்களின் சுதந்திர வேட்கை மீண்டும் கொழுந்துவிட்டு எரியத் தொடங்கியிருக்கிறது. காசுமீர் பள்ளத்தாக்கில், ஆகஸ்டு மாதம் தொடங்கி நடைபெற்றுவரும் போராட்டங்களில்"சுதந்திர காசுமீர்'' என மக்கள் முழங்குகிறார்கள். ஆகஸ்டு 15 அன்று, காசுமீர் தலைநகர் சிறீநகரில் உள்ள லால் சௌக்கில் ஏற்றப்பட்டிருந்த இந்திய தேசியக் கொடியை, ஆர்ப்பாட்டக்காரர்கள் மத்திய ரிசர்வ் போலீசு படையைக் கொண்டே கீழே இறக்கி விட்டு, பாக். நாட்டின் தேசியக் கொடியை ஏற்றியுள்ளனர்.


இந்திய தேசியவாதிகள் அனைவரும் இதனைக் கண்டு ஆடிப் போய்க் கிடக்கிறார்கள். இந்திய இராணுவம், கடந்த பத்தாண்டுகளில் காசுமீரில் ஏற்படுத்தியிருந்த "அமைதி'யை, பிரிவினைவாதிகளும், சந்தர்ப்பவாத அரசியல்வாதிகளும் சீர்குலைத்துவிட்டதாக அதிகார வர்க்கம் குற்றஞ்சுமத்துகிறது. ஜாடியில் இருந்து வெளியே வந்துவிட்ட"சுதந்திர பூதத்தை'' மீண் டும் ஜாடிக்குள் எப்படி அடைப்பது என மைய அரசு தலையைப் பிய்த்துக் கொண்டு திரிகிறது.


இரண்டு மாதங்களுக்கு முன்பு கூட, காசுமீர் பள்ளத்தாக்கு அமைதியாகத்தான் இருந்தது — இராணுவத்தின் துப்பாக்கி முனையில். இப்பொழுது அங்கே மீண்டும்"பிரிவினைவாதம்'' ஓங்கி ஒலிக்கிறதென்றால், அதற்கான முழுப்"பெருமை''யையும் காங்கிரசும், பா.ஜ.க.வும்தான் பங்கு போட்டுக் கொள்ள வேண்டும்.


எதிர்வரும் அக்டோபரில் நடைபெறவுள்ள காசுமீர் சட்டசபைத் தேர்தலில், ஜம்முவைச் சேர்ந்த இந்துக்களின் வாக்குகளை மொத்தமாக அள்ளிக் கொள்ளத் திட்டம் போட்ட காங்கிரசு மக்கள் ஜனநாயகக் கட்சி கூட்டணி, வனத்துறைக்குச் சொந்தமான 39.88 ஹெக்டேர் நிலத்தை, அமர்நாத் ஆலய நிர்வாக வாரியம் அனுபவித்துக் கொள்ள அனுமதித்துச் சட்டம் போட்டது. இதற்கு எதிராக காசுமீர் பள்ளத்தாக்கில் போராட்டம் வெடிக்கவே, அந்தச் சட்டம் பின்னர் ரத்து செய்யப்பட்டது. எனினும், கூட்டணியில் பிளவு ஏற்பட்டு, மாநில ஆட்சியை இழந்தது, காங்கிரசு. நிலம் ரத்து செய்யப்பட்டதை இந்துக்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியாகவும், துரோகமாகவும் பா.ஜ.க. உருவேற்றியது.


அயோத்தி ராமர் கோவில் விவகாரம், உ.பி.யில் கூட பா.ஜ.க.வுக்கு வாக்குகளைப் பெற்றுத் தரவில்லை; குஜராத் படுகொலை போல ஒரு கலவரத்தை நடத்தினால், அதற்கு எதிர்வினையாகக் குண்டு வெடிக்கும் உத்தரவாதம் உண்டே தவிர, நாடெங்கும் "இந்துக்களின்' வாக்குகளை அள்ள முடியுமாஎன்பது சந்தேகத்திற்குரியதுதான். அணுசக்தி ஒப்பந்தத்தைக் கடுமையாக விமர்சித்தால், அமெரிக்க மாமாவுக்குக் கோபம் வந்து, முதலுக்கே மோசமாகப் போய் விடும். விலைவாசி உயர்வினால், தற்பொழுது பா.ஜ.க. ஆளுங்கட்சியாக உள்ள மாநிலங்களிலும் அதிருப்தி நிலவுகிறது. இப்படி, நாடாளுமன்றத் தேர்தலைச் சந்திக்க ஏதாவதொரு பிரச்சினையின் துணையைத் தேடிக் கொண்டிருந்த பா.ஜ.க.வுக்கு அமர்நாத் நில ரத்து விவகாரம் கிடைத்தது.


விலைவாசி உயர்வினால் விழி பிதுங்கிக் கிடக்கும்"இந்துக்கள்'', அமர்நாத் ஆலயத்திற்கு நிலம் ஒதுக்கப்பட்டதையோ, பின்னர் அந்த உத்தரவு ரத்து செய்யப்பட்டதையோ ஒரு பொருட்டாக மதிக்கவில்லை. ஆனால், பா.ஜ.க.தான் கஞ்சா சாமியார்களின் பிரச்சினையை, "தேசிய'ப் பிரச்சினையாக்கச் சதித்திட்டம் போட்டது. காசுமீர் தலைநகர் சிறீநகரை இந்தியாவோடு இணைக்கும் ஜம்முசிறீநகர் நெடுஞ்சாலையில் தடைகளை ஏற்படுத்தி, பொருளாதார முற்றுகையை காசுமீர் முசுலீம்களின் மீது திணித்தது, ஆர்.எஸ்.எஸ்சிவசேனா கும்பல்.


"ஜம்மு இந்துக்களை மட்டுமே நம்பி பொருளாதாரத் தடையை அமல்படுத்த முடியாது என்பதால், பஞ்சாப் போன்ற வெளிமாநிலங்களில் இருந்து பா.ஜ.க. தொண்டர்கள் வரவழைக்கப்பட்டனர். காசுமீர் பள்ளத்தாக்கில் விளைந்த ஆப்பிள், பேரிக்காய் போன்ற பழவகைகளும், பூக்களும் வெளிச்சந்தைக்குச் செல்ல முடியாமல் போனதோடு, பெட்ரோல், சமையல் எரிவாயு, மருந்துப் பொருட்கள் போன்றவை பள்ளத்தாக்கிற்கு எடுத்துச் செல்லப்படுவதும் தடுக்கப்பட்டது. மட்டன் கிடைக்காததால், அங்கே பல திருமணங்கள் தள்ளி வைக்கப்பட்டன'' என இப்பொருளாதாரத் தடையின் வெற்றியைப் பற்றி சந்தர் சுடா டோக்ரா என்ற ஜம்முவைச் சேர்ந்த"இந்து'' பெருமிதமாகக் குறிப்பிடுகிறார். (அவுட்லுக், ஆக.18).


தேசிய ஒருமைப்பாடு பற்றி வாய்கிழியப் பேசும் மைய அரசு, இச்சட்டவிரோதமான பொருளாதாரத் தடையைத் தடுத்திருக்க வேண்டும். ஆனால் மைய அரசோ, மறைமுகமாக இத்தடையை ஆசீர்வதித்தது."ஜம்மு சங்கர்ஷ் சமிதி ஜூலை 28 அன்று பொருளாதாரத் தடையை அறிவித்தது. அடுத்த ஆறு நாட்களுக்கு, எந்தவொரு லாரியும் பள்ளத்தாக்கிற்குள் செல்லவோ, அங்கிருந்து வெளியே வரவோ முடியவில்லை. முசுலீம் வியாபாரிகள், கடைக்காரர்கள், காசுமீரில் பதிவு செய்யப்பட்ட லாரிகளை ஓட்டி வந்த ஓட்டுநர்கள் அச்சுறுத்தப்பட்டதோடு, தாக்கவும் செய்யப்பட்டனர். ஆகஸ்டு 2ஆம் தேதி வாக்கில், லாரிகளுக்குப் பாதுகாப்பு கொடுக்க இராணுவம் வரவழைக்கப்பட்டது. எனினும், அதற்குள் காசுமீரில் அத்தியாவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டது'' என பிரேம் சங்கர் ஜா என்ற பத்திரிகையாளர் குறிப்பிடுகிறார்.


இந்து மதவெறி அமைப்புகள் திணித்த இப்பொருளாதாரத் தடையுத்தரவுக்குப் பதிலடியாக,"எல்லைக் கட்டுப்பாடு கோட்டைக் கடந்து பாக். வசமுள்ள ஆசாத் காசுமீரின் தலைநகர் முசாஃபராபாத்துக்குச் செல்வோம்'' என்ற திட்டம் முன் வைக்கப்பட்டது. காசுமீர் பழ உற்பத்தியாளர்கள், வியாபாரிகள் மற்றும் வர்த்தக அமைப்புகளின் சங்கங்களால் முன் வைக்கப்பட்ட இப்போராட்டத்திற்கு மக்களின் ஆதரவு பெருகியது. இதனால் ஹூரியத் மாநாட்டுக் கட்சி உள்ளிட்ட காசுமீரின் சுயநிர்ணய உரிமைக்காகப் போராடும் அமைப்புகள் மட்டுமின்றி, தேசிய மாநாட்டுக் கட்சி, மக்கள் ஜனநாயகக் கட்சி ஆகிய ஓட்டுக் கட்சிகளும் இப்போராட்டத்தை ஆதரிக்க வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டன.


சிறீநகரையும், முசாஃபராபாத் நகரையும் இணைக்கும் நெடுஞ்சாலை மட்டுமல்ல, சிறீநகரை வெளியுலகத்தோடு இணைக்கும் வேறு சில சாலைகளையும் திறந்து விடவேண்டும் என காசுமீர் மக்கள் வெகுகாலமாகக் கோரி வருகின்றனர். காசுமீரில் "அமைதி'யை ஏற்படுத்த மைய அரசால் நியமிக்கப்பட்ட ஆலோசனைக் குழுக்களும், இந்தியாபாக். இடையே நடந்த பேச்சுவார்த்தைகளிலும் இச்சாலைகளைத் திறப்பது தொடர்பாக உத்தரவாதங்கள் அளிக்கப்பட்டுள்ளன. எனினும் மையஅரசு, இச்சாதாரண உரிமையைக் கூட காசுமீர் மக்களுக்கு வழங்க மறுத்து, அவர்களை கடந்த 60 ஆண்டுகாலமாகச் சிறைப்படுத்தியே வைத்திருக்கிறது. இந்த நிலையில் பா.ஜ.க. கும்பல் பொருளாதாரத் தடையை ஏற்படுத்தவே, எல்லைக் கட்டுப்பாட்டைத் தாண்டிச் செல்லும் போராட்டத்தைக் கையில் எடுக்கும் நிலைக்கு காசுமீர் மக்கள் தள்ளப்பட்டனர். இந்தப் போராட்டத்தைக் கையில் எடுக்கவில்லை என்றால், இந்திய அரசு, தங்களைப் பட்டினி போட்டுக் கொல்லும் அடக்குமுறையை அடிக்கடி கையில் எடுக்கும் என்பதை சாதாரண காசுமீரி கூட உணர்ந்து இருந்தார்.


ஆகஸ்டு 11 அன்று நடந்த எல்லைக் கட்டுப்பாடு கோட்டைத் தாண்டும் போராட்டத்தின் மீது நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டில், ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர் அப்துல் அஜீஸ் ஷேக் உள்ளிட்டு 12 பேர் கொல்லப்பட்டனர்; இருநூறுக்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்தனர்.


இந்த வீரமரணங்கள் காசுமீர் பள்ளத்தாக்கையே கொதித்தெழச் செய்தன. அப்துல் அஜீஸ் ஷேக்கின் இறுதி ஊர்வலத்தில் ஊரடங்கு உத்தரவையும் மீறி, மூன்று இலட்சம் மக்கள் கலந்து கொண்டனர். மேலும், வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த ஹூரியத் மாநாட்டுக் கட்சியின் தலைவர்கள் மிர்வாயிஸ் ஃபரூக், சையத் அலிஷா ஜிலானி இருவரையும், பொதுமக்கள் போலீசாரோடு மோதி விடுதலை செய்ததோடு, இறுதி ஊர்வலத்திற்குத் தலைமையேற்கும்படியும் செய்தனர்.


காசுமீர் பிரச்சினையில் ஐ.நா. மன்றத்தைத் தலையிடக் கோரி, சிறீநகரில் உள்ள ஐ.நா.வின் இராணுவக் கண்காணிப்புக் குழுவினரிடம் மனு அளிப்பதற்காக ஆக.18 அன்று நடத்தப்பட்ட ஊர்வலத்தில் ஏறத்தாழ ஒரு இலட்சம் பேர் கலந்து கொண்டதாக முதலாளித்துவப் பத்திரிகைகளே எழுதியுள்ளன."இந்திய ஆதிக்கத்தை முடிவுக்குக் கொண்டு வர வேண்டும்; கடந்த இரண்டு பத்தாண்டுகளாக இந்திய இராணுவமும் போலீசும் காசுமீரில் நடத்தியுள்ள போர்க் குற்றங்களைப் பற்றி விசாரணை நடத்த வேண்டும்; ஐ.நா.வின் அமைதிப் படையை நிறுத்த வேண்டும்'' என இம்மனுவில் கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டிருந்தன.


ஆகஸ்டு 11க்குப் பிறகு நடைபெற்ற போராட்டங்களின் மீது போலீசும், துணை இராணுவப் படைகளும் நடத்திய துப்பாக்கிச் சூடுகளில் 40 பேர் கொல்லப்பட்ட போதும், போராட்டத்தின் வீச்சு தணிந்து போய்விடவில்லை."காசுமீர் மாநிலத்தின் வர்த்தக நலனுக்காக, ஜம்மு காசுமீரோடு, ஆசாத் காசுமீரை இணைக்கும் சாலைகளைப் போக்குவரத்திற்குத் திறந்து விடவேண்டும்; அரசியல் காரணங்களுக்காகக் கைது செய்யப்பட்ட காசுமீரிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும்; ஆயுதப் படை சிறப்பு அதிகாரச் சட்டத்தை ஜம்முகாசுமீரில் இருந்து விலக்கிக் கொள்ள வேண்டும்'' என்ற மூன்று கோரிக்கைகளை முன்வைத்துப் போராட்டம் தொடர்ந்து நடந்து வருகிறது.


காசுமீர் பள்ளத்தாக்கிலும் ஜம்முவிலும் ஒரே சமயத்தில் போராட்டங்கள் நடந்து வந்தாலும், முசுலீம்கள் மீது நடத்தப்பட்ட அளவிற்கு ஜம்மு இந்துக்களின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்படவில்லை. காசுமீர் முசுலீம்கள் நிராயுதபாணிகளாகப் போராடிக் கொண்டிருந்தபொழுது, ஜம்முவில் ஆர்.எஸ்.எஸ். கும்பல் திரிசூலத்தையும், கத்திகளையும், பெட்ரோல் குண்டுகளையும் எடுத்துக் கொண்டு போராட்டம் நடத்தினர். ஹூரியத் மாநாட்டுத் தலைவர்கள் வீட்டுக் காவலில் வைக்கப்பட்டிருந்த பொழுது, ஜம்முவின் ஆர்.எஸ்.எஸ். தலைவர்கள் சுதந்திரமாக பத்திரிகைகளுக்கு பேட்டி கொடுத்தனர்.


"ஜம்முவில் நடந்த போராட்டம் இரும்புக் கரம் கொண்டு ஒடுக்கப்படவில்லை; மாறாக, வெல்வெட் கரம் கொண்டு தடவிக் கொடுக்கப்பட்டதாக'' மைய அரசின் அதிகாரியே ஒப்புக் கொண்டுள்ளார். (அவுட்லுக், ஆக.25) மைய அரசின் இம்மென்மையான அணுகுமுறை ஒருபுறமிருக்க, காங்கிரசு கட்சியைச் சேர்ந்த கரண்சிங், மதன்லால் சர்மா, லாங் சிங் ஆகிய மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களும் ஆர்.எஸ்.எஸ். கும்பல் நடத்திவரும் போராட்டத்திற்கு வெளிப்படையாகவே ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்தச் சாதகமான நிலைமைகளைப் பயன்படுத்திக் கொண்டு ஜம்மு பகுதியை, காசுமீரில் இருந்து பிரித்துவிட வேண்டும் என மனப்பால் குடிக்கிறது, இந்து மதவெறிக் கும்பல்.


இப்பிரிவினையை நியாயப்படுத்துவதற்காக,"காசுமீர் மாநில அரசால், இந்துக்கள் வாழும் ஜம்மு பகுதி கடந்த 60 ஆண்டுகளாகப் புறக்கணிக்கப்படுவதாக'' ஒரு பச்சைப் பொய்யை ஆர்.எஸ்.எஸ். கும்பல் பரப்பி வருகிறது. இந்து வெறியோடு குறுகிய தேசிய வெறியை கலந்து ஒகேனக்கல் பிரச்சினையை உருவாக்கியதைப் போன்ற அதே நரித்தனம்தான் இது. ஜம்மு வளர்ச்சியடையவில்லையென்றால், இந்திய அரசுதான் காரணமேயொழிய, அதற்கு காசுமீர் முசுலீம்கள் மீது பழிபோடுவது கடைந்தெடுத்த அயோக்கியத்தனம்.


இத்துணை "களேபரத்துக்கும்' இடையிலும், அமர்நாத் யாத்திரை எவ்வித இடையூறும் இன்றி நடந்து முடிந்திருக்கிறது. சுற்றுலா செல்வதுபோல யாத்திரையில் கலந்து கொண்ட நடுத்தர வர்க்க இந்துக்கள் கூட, வசதி போதவில்லை எனக் குறைபட்டுக் கொண்டதாகத் தெரியவில்லை. அமர்நாத் யாத்திரையை ஆர்.எஸ்.எஸ். கும்பல் அரசியலாக்கிய பிறகு, இந்தப் "பக்தி' யாத்திரையை முதலாளித்துவ நிறுவனங்கள்தான்"வழங்குவதாக''க் (ஸ்பான்ஸர்) கூறுகிறார், அரசியல் விமர்சகர் அருந்ததி ராய். (அவுட்லுக், செப்.1, பக். 15).


இப்படிப்பட்ட நிலையில், அமர்நாத் ஆலய நிர்வாக வாரியத்திற்கு வனத்துறை நிலத்தை ஏன் மீண்டும் ஒதுக்க வேண்டும்? அப்படியே வசதி வேண்டும் என்றால், அதனை அமர்நாத் ஆலய நிர்வாக வாரியத்தின் மூலம்தான் செய்து தரவேண்டும் என்ற அவசியம் கிடையாது. இந்து மதவெறிக் கும்பலைத் திருப்திபடுத்துவதற்காகவே தொடங்கப்பட்டுள்ள அமர்நாத் ஆலய நிர்வாக வாரியத்தைக் கலைத்துவிட்டு, ஆண்டாண்டு காலமாக இந்த யாத்திரையை நிர்வகித்து வந்த பேடாகுந்த் முசுலீம்களிடயே, பக்தர்களுக்கு வசதி செய்து தரும் பொறுப்பை மீண்டும் ஒப்படைக்கலாம்.


பா.ஜ.க. மட்டுமல்ல, காங்கிரசும் இப்பிரச்சினையை உடனடியாகத் தீர்த்து விடாமல், கொதிநிலையில் வைத்துக் கொள்ளவே விரும்புகிறது. இதன் மூலம் காசுமீரில் நடந்து வரும் சுயநிர்ணய உரிமைப் போரை, இந்துமுசுலீம் மோதலாகச் சீரழித்துவிட அக்கட்சிகள் சதி செய்கின்றன.


தேசிய ஒருமைப்பாடு என்ற கண்ணாடியைக் கழட்டிவிட்டுப் பார்த்தால்தான், பா.ஜ.க. காங்கிரசு கும்பலின் சதித்தனங்கள் கண்ணுக்குத் தெரியும். ஒரு நூறு ஏக்கர் நிலத்தை "இந்துக்களுக்கு'க் கொடுக்கக் கூடாது என்ற அற்பத்தனமான போராட்டத்தை காசுமீரி முசுலீம்கள் நடத்திக் கொண்டிருக்கவில்லை; காசுமீரிகளின் சுயநிர்ணய உரிமைக்காக உயிரைக் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள் என்ற உண்மை புரியும்.


· மணி