குடியேறும் ஆரியப் பாதகர்கள் சூழ்ச்சியால்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
குறுநெறிச் சங்கரன் புத்தநெறி மாற்றிடக்
கொல்வித்த தமிழர் நெஞ்சும்,
படியேறு சமண்கொள்கை மாற்றிடச் சம்பந்தப்
பார்ப்பனன் சூழ்ச்சி செய்து
படுகொலை புரிந்திட்ட பல்லாயி ரங்கொண்ட
பண்புசேர் தமிழர் நெஞ்சும்,
கொடிதான தம்வயிற் றுக்குகை நிரப்பிடும்
கொள்கையால் வேத நூலின்
கொடுவலையி லேசிக்கி விடுகின்ற போதெலாம்
கொலையுண்ட தமிழர் நெஞ்சும்,
துடிதுடித் துச்சிந்தும் எண்ணங்கள் யாவுமே
தூயசுய மரியா தையாய்ச்
சுடர்கொண் டெழுந்ததே சமத்துவம் வழங்கிடத்
தூயஎன் அன்னை நிலமே!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt257