ஒன்று
மணம் முடிந்தது.
தனியிடம், விடுதலைபெற்ற இரண்டுள்ளம், அளவு
கடந்த அன்பு - இவை மகிழ்ச்சிக் கொடியேற்றிக்
காதல் முரசு முழக்கின - இன்ப விழா! முடிவில்லை.

இரண்டு
ஒருநாள் அவர்கள் இந்த உலகில் இறங்கி வந்து
பேசலுற்றார்கள்.
"மக்கள் தொடர்பில்லாதது. தென்றலில் சிலிர்க்கும்
தழை மரங்கள் உள்ளது. ஊற்றிற் சிறந்த நீர் நிலையின்
துறையில் அமைந்த நுழைவாயிலுல்லது. அழகிய
சிறுகுடில்! நாம் அங்கே தங்கலாம் - இது என் அவா
அத்தான்."
"ஆம்! குறைவற்ற தனிமை!"
பறந்தார்கள்.
மூன்று
"நாயின் நாக்கைப் போன்ற சிவந்த மெல்லடியைத்
தூக்கிவை குடிசையில்."
"நான் மட்டுமா?"
அதிர்ந்தது அவள் உள்ளம்!
இமைப்போதில் ஒன்றில் ஒன்று புதைந்த இரண்டுடல்
குடிசையில் நுழைந்தன.
"விட்டுப் பிரிவேன் என்று அச்சப் பட்டாயா?"
"மன்னிக்க வேண்டும்!"
குடிசை சாத்தப் பட்டது.
நாவற்பழம் நீர்நிலையில் விழுந்து கொண்டிருக்கும்
இச்சிச் சென்ற ஒலி குடிசைக்குள் சென்றது. அதே
ஒலி குடிசையினின்றும் வௌிவந்தது. இது எதிரொலி
யன்று!

நான்கு
"தேக்கும் அதில் உடல் பின்னிய சீந்தற் கொடியும்
பார், நம்மைப்போல!"
"இல்லை, அரண்மனை கசந்தால் அழகிய குடிலில்
குடியேறத் தேக்கு நடவாது; சீந்தல் நகராது."
வானில் ஓர் ஒலி!
"வைகையின் மங்கிய ஒளியில் மங்காத இன்னிசையை
உதிர்த்தன வானப் புட்கள், ஆணும் பெண்ணுமாக!"
"நாமும் வானில் -- அடடா சிறகில்லையே!"
நீர்நிலை கட்டித் தழுவிக் கொண்டது இருவரையும்.

ஐந்து
"கெண்டைகள் துள்ளி விளையாடி நீரின் அடிமட்டத்தில்
அள்ளி நுகர்வன இன்பத்தை!"
"நாமும் அங்கு இன்பம் நுகர்வோம் -- அடடா, நாம்
மீன்களல்லவே!"
கண்ணிமைப்போது நான் நீருக்குள் ஒளிந்து கொள்கிறேன்!
பிற்பகுதியும் கேள்."
"நிறுத்துங்கள்! முற்பகுதியே என் பாதி உயிரைப் போக்கி
விட்டது!"
மாற்றிச் சுவைக்கும் நான்கு விழிகள் தம்மிற் பிரியாமல்
நீராடின.

ஆறு
"கரையேறுங்கள் என்னோடு."
"மாலையின் குளிரும் நனைந்த சேலையின் குளிரும்
உன் இன்பத்தைப் பெருக்கவில்லையா?"
"தவறு! நம் இருவர்க்கும் நடுவில் முயல் நுழையும் வௌி,
இதற்கு நனைந்த ஆடை காரணம்."
"அதோ நம்மை நோக்கி நம் வீட்டு ஆள்."
குடிசையில் மறைந்தார்கள் ஓடி!

ஏழு
"அழைத்துவரச் சொன்னார்கள் அப்பா."
"ஏன்?"
"கப்பல் வந்திருக்கிறது."
"மெல்லப் பேசு!"
"என்ன ஓசை குடிசையின் உட்கட்டில்? விட்டு
விட்டு இசைக்கும் ஒருவகைச் சிட்டுக் குரல்!"
"என்ன சொன்னார் அப்பா?"
"அனுப்ப வேண்டுமாம் உம்மை."
"சிங்கைக்கா?"
"ஆம். -- என்ன அங்கே திட்டென்று விழுந்த
உடலின் ஓசை!"
"நாலு நாட்கள் நீடிக்கலாமா?"
"இன்றைக்கே! இதென்ன குடிசையில் வெள்ளம்?"
"நீ போ! இதோ வருகின்றேன்."
எட்டு br> "தேம்பி அழுது திட்டென்று வீழ்ந்து கண்ணீரை
ஆறாய்ப் பெருக்கினை அன்புடையாளே!"
"இறக்கமாட்டேன் அத்தான், உனைவிட்டுப்
பிரியவில்லை என்று நீங்கள் உறுதி கூறுமட்டும்."
"கடமை என் வாயை அடைக்கிறது."
"என் மடமை கிடந்து துடிக்கிறது."
"மடமை அல்ல; உயிரின் இயற்கை."
" `தந்தை சொற்படி நடக்கட்டும் என் அத்தான்'
என்று என் நெஞ்சுக்குக் கூற என்னால் முடிகிறது;
உயிருக்குச் சொல்லி நிறுத்த முடியவில்லை."
ஒன்பது
"தோழி, நான் அப்பாவிடம் போகிறேன்."
"நீர் நிலையை அடுத்த குடிசையிலா அப்பா இருக்கிறார்?"
"என் கால்கள் என்னை ஏமாற்றுகின்றன. என் பிரிவால்
அவள் சாகிறாள்! சென்று காப்பாற்று."
"எவ்வளவு நேரம்?"
"நேரமா?"
"எத்தனை நாள்?"
"நாளா? அடுத்த ஆண்டில் வந்துவிடுவேன்."
"கால் நாழிகை சாக்காட்டின் கதவைச் சாத்திப் பிடித்துக்
கொண்டிருக்க முடியும். ஐயா! அடுத்த ஆண்டில் அவள்
உடலின் துகள் கலந்த மண்ணும் மட்கி வௌியுடன்
வௌியாய்க் கலந்ததென்ற கதை பழமையாய்விடும்."
"என் துன்ப உள்ளத்தைத் தந்தையிடம் கூறுகிறேன்."

பத்து
(நூலேணியில் அழுகுரல், கண்ணீர் -- அவன் கப்பலேறுகிறான்.")
கப்பலுக்குள் - "இங்கே உட்கார வேண்டும் நீவிர்."
"கணவனும் மனைவியும் தங்கும் இடமல்லவா இது?"
"இறந்திருப்பாளானால், அது அவள் செய்த முதல்
குற்றம். இறந்தசெய்தி என் காதில் எட்டாதிருக்க
முயன்றிருப்பாளானால் அது இரண்டாவது குற்றம்."
"இரண்டாவது குற்றத்திற்கு அவள் ஆளாகவில்லை.
தன் நிலையை விளக்கும்படி என்னை அனுப்பினாள்."
"பயனற்றது இவ்வுலகம்! ஒரு பற்று என்னை வாட்டு
கின்றது. அவள் இறந்தாள்; ஆதலால் நான் இறந்தேன்.
இதை அவள் அறியாளே! நீவிர் சான்றாகக் கடலில்
கலக்கிறேன்."
சிரிப்பு! - இரண்டு இளைஞர்கள் தோழியும் தலைவியு
மாகிறார்கள்.
"அத்தான்! நாம் இருவரும் சிங்கைக்குப் போகிறோம்."
"தோழி! என் மாமாவிடமும் அத்தையிடமும் உடலும்
உயிருமாக இருவரும் செல்லுகின்றார்கள் என்று கூறு!"
வாழ்க, காதல் வாழ்வு!

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp166a.htm#dt203