பெண்கள்துயர் காண்பதற்கும் கண்ணிழந்தீரோ!
கண்ணிழந்தீரோ! உங்கள் கருத்திழந்தீரோ!
பெண்கள்துயர்...

பெண்கொடிதன் துணையிழந்தால்
பின்புதுணை கொள்வதிலே
மண்ணில்உமக் காவதென்ன வாழ்வறிந்தோரே?
வாழ்வறிந்தோரே! மங்கை மாரைஈன்றோரே!
பெண்கள்துயர்...

மாலையிட்ட மணவாளன் இறந்துவிட்டால்
மங்கைநல்லாள் என்னசெய்வாள்? அவளைநீங்கள்
ஆலையிட்ட கரும்பாக்கி உலகஇன்பம்
அணுவளவும் அடையாமல் சாகச்செய்தீர்!

பெண்டிழந்த குமரன்மனம்
பெண்டுகொள்ளச் செய்யும்எத்தனம்
கண்டிருந்தும் கைம்பெண்என்ற கதைசொல்லலாமோ?
கதைசொல்லலாமோ? பெண்கள் வதைகொள்ளலாமோ?
பெண்கள்துயர்...

துணையிழந்த பெண்கட்குக் காதல்பொய்யோ?
சுகம்வேண்டா திருப்பதுண்டோ அவர்கள்உள்ளம்?
அணையாத காதலினை அணைக்கச்சொன்னீர்
அணைகடந்தால் உங்கள்தடை எந்தமூலை?

பெண்ணுக்கொரு நீதிகண்டீர்
பேதமெனும் மதுவையுண்டீர்
கண்ணிலொன்றைப் பழுதுசெய்தால் கான்றுமிழாதோ?
கான்றுமிழாதோ? புவிதான் பழியாதோ?
பெண்கள்துயர்...

 

http://www.tamilnation.org/literature/bharathidasan/mp165pennulagam.htm#dt138