மக்களின் எதிரிகளாக யார் உள்ளனரோ, அவர்களின் கைக்கூலிகள் தான் புலியெதிர்ப்புக் கும்பல். இதற்கு வெளியில் சுயாதீனமான மக்கள் அரசியல் எதுவும் இந்தக் கும்பலிடம் கிடையாது. இந்த புலியெதிர்ப்பு 'ஜனநாயகவாதிகள்"

 மக்களின் எதிரிகளிடம் பணத்தில் அரசியல் செய்வதுடன், அவர்களின் பாதுகாப்பில் நின்று அதற்கு விசுவாசமாக குலைக்கின்ற ஓட்டுண்ணிக் கும்பல். இதை யாரும் இல்லை என்று நிறுவமுடியாது.

 

இந்தக் கும்பல் கைக்கூலிக்குரிய விசுவாசத்துடன், புலியொழிப்பு என்று வித்தை காட்ட முனைகின்றனர். புலியை எதிரியாக காட்டி, தனக்கு பணம் தருபவனை எதிரியற்றதாக காட்டி எதிரிக்கு வாலாட்டி நக்குகின்றனர்.

 

எதிரி பற்றிய வரையறை என்ன? மக்களின் வாழ்வாதாரங்களுடன் பின்னிப்பிணையாத அனைத்தும், மக்களுக்கு எதிரி தான். மக்களைச் சார்ந்தே நிற்காத புலிகள், புலியெதிர்ப்புக் கும்பல் கூட, மக்களின் எதிரிதான். மக்களை எதிரியாகி செயல்படும் அரசு முதல் ஏகாதிபத்தியம் வரை மக்களின் எதிரிதான். மக்களுக்காக இவர்கள் சிந்திப்பதுமில்லை, செயல்படுவதுமில்லை. மக்களை வேட்டையாடி தமக்கும், சுரண்டும் வர்க்கத்துக்கும் சேவை செய்கின்றவர்கள் மக்களின் எதிரிதான்.

 

இந்த எதிரி புலியாக இருந்தாலும் சரி, புலியெதிர்ப்பு புலியொழிப்புக் கும்பலாக இருந்தாலும் சரி, ஒன்று தான். அதன் அரசியல் என்பது மக்களைச் சார்ந்து இருப்பதில்லை. மக்கள் தான், தமது சொந்த விடுதலைக்கு போராட வேண்டும் என்பதை மறுப்பவர்கள் இவர்கள். அவர்கள் கூறும் காரணம், மக்களை அணிதிரட்டுவது சாத்தியமில்லை என்கின்றனர். அத்துடன் மக்கள் தமக்காக போராட மாட்டார்கள் என்று சொல்லி, தரங்கெட்ட அரசியல் விபச்சாரம் செய்கின்றனர். புலியும் சரி, புலியெதிர்ப்பும் சரி, இதைத்தான் அன்று முதல் இன்று வரை சொல்லுகின்றது. அதனடிப்படையில் செயல்பட்டவர்கள் எதையும் பெற்றது கிடையாது. பார்ப்பனியம் போல் சலசலக்கும் இந்த மக்கள் விரோதிகள், பேய்களினதும் பிசாசுகளினதும் வைப்பாட்டிகள் தான்.

 

இப்படிப்பட்ட இவர்களில், தம்மை முற்போக்கு ஜனநாயகவாதிகளாக காட்ட முனையும் புலியெதிர்ப்பு 'ஜனநாயகவாதிகளின்" யோக்கியதை என்ன?

 

ஈ.என்.டி.எல்.எப் என்ற கூலிக் கும்பல், இந்தியா அரசிடம் பணம் வாங்கி இயங்குகின்ற, இயங்க வைக்கப்படுகின்ற ஒரு கொலைகார கும்பல். இந்தியாவின் பாதுகாப்பிலும், அண்மையில் இலங்கை அரசின் பாதுகாப்பில் இயங்கிய கருணா என்ற கும்பலுடன் கூடி செயல்பட்ட, ஒரு கொலைகாரக் கூலிக் கும்பல். இதற்கு மாற்றாக வேறு எந்த வேலைத் திட்டமும் இதனிடம் கிடையாது.

 

ஈ.பி.டி.பி இலங்கை அரசிடம் பணம் வாங்கி செயற்படும் ஒரு கூலிப்படை. அரசு கொடுக்கும் பணத்தில் கொலை செய்ய கூலிக்கு ஆட்களைத் திரட்டுவதுடன், அரசு பதவியைக் கொண்டு பிழைப்புவாத பிரமுகர்களை அடிப்படையாக கொண்ட ஒரு கூலிக் கும்பல். இலங்கை அரசின் பணத்துக்கு வெளியில் எந்த வேலைத் திட்டமும் இதனிடம் கிடையாது. இலங்கை அரசின் பாதுகாப்பில் நின்று, புலிக்கு நிகராகவே கொலை செய்கின்ற ஒரு கூலிக் கும்பல்.

 

புளாட், ஈ.பி.ஆர்.எல்.எப் முதல் அனைத்தும் இலங்கை அரசின் பாதுகாப்பில் இருப்பதுடன், அவர்களிடம் பணத்தை பெற்று அரசியல் செய்கின்ற ஒட்டுண்ணிக் கும்பல்கள். அன்றாடம் கொலையும், வரியும் அறவிடுவதே இவர்களின் கைதேர்ந்த அரசியல்.

 

கருணா என்ற கொலைகார புலிக்கும்பல். இலங்கை அரசின் இன்றைய செல்லக்குழந்தை. புலியொழிப்பின் பெயரில் கொலை, கொள்ளை, ஆள்கடத்தல், வரி, கப்பம், அடிதடி, ரவுடித்தனம் என்று, புலியின் அனைத்து வகை வக்கிரத்தையும் கிழக்கில் செய்யும் தனிக்காட்டு ராஜா. இந்த கருணா கும்பலின் அரசியல் என்பது, புலி செய்த கொலைகார அரசியல்தான். இன்று இலங்கை அரசுக்காக கொலை செய்கின்ற, இலங்கை அரசின் ஒரு கொலைகாரக் கூலிக் கும்பல். இந்த கொலைகார அரசியல், கிழக்கை குத்தகைக்கு எடுத்துவைத்துள்ளது. இந்த அரசியல் போக்கிரித்தனத்தை செய்ய, கிழக்கு வாழ் மக்களின் குழந்தைகளை திருடுகின்ற மக்களின் முதல்தரமான விரோதிகளின் ஒருவன் தான் கருணா. இந்தளவுக்கு இதை சாதிக்க, இலங்கை மற்றும் இந்திய அரசின் பாதுகாப்பும், பணமும் உதவுகின்றது.

 

கூட்டணியைச் சேர்ந்த ஆனந்தசங்கரி. இலங்கை அரசிடமும் பணம் பெற்று, அவர்களின் பாதுகாப்பில் திடீர் 'ஜனநாயகவாதி"யானவர். அரசு மற்றும் ஏகாதிபத்திய செயல்பாட்டு எல்லைக்கு வெளியில் எந்த மாற்று அரசியலும் கிடையாது. மக்களை நம்பி இவர்கள் குலைப்பதில்லை.

 

இவர்கள் எல்லாம் ஜனநாயக வாதிகள். தமது சொந்த அமைப்பில் கூட ஜனநாயகத்தின் மூச்சை காட்ட முடியாதவர்கள். கொலை, அடி உதை, மிரட்டல், பணத்தை கொடுத்து விலைக்கு வாங்குவது, ஆசைகாட்டுவது, அடிபணிய வைப்பது, தூக்கியெறிவது என்று, இந்த அமைப்புகளின் உட்கட்சி ஜனநாயகம் உள்ளது. இவர்கள் தான் புலிகளிடம் இருந்து, ஜனநாயகத்தை மீட்கப்போகின்றார்களாம். அதை புலியொழிப்பு என்று கூறிக்கொண்டு, புலியெதிர்ப்பை முன்வைத்து புலியை ஒழிக்க கொலை செய்கின்றனர்.

 

சொந்த அமைப்பில் ஜனநாயகத்தை, மக்கள் நலத் திட்டத்தை வைக்க முடியாதவர்கள், மக்கள் மேல் தமது சர்வாதிகாரத்தை திணிக்கின்றனர். இலங்கை மற்றும் இந்திய அரசிடமும், ஏகாதிபத்தியத்திடமும் பணமும் ஆயுதமும் வாங்கி திரிகின்ற கூலிக் குழுக்கள் தான் இவை. ஏகாதிபத்தியத்திடம் பணத்தையும், வசதி வாய்ப்புகளையும் பெறுகின்றனர். உலகத்தைச் சுற்றிவர இலவச விமான ரிக்கற்றுகள் முதல் பற்பல சலுகைகள். புலியெதிர்ப்பு புலியொழிப்பை ஊக்குவிக்க, ஏகாதிபத்திய நிறுவனங்கள் பட்டங்களையும் பரிசுகளையும் கூட வழங்குகின்றது.

 

மனிதத்தையே ஏகாதிபத்தியத்திடம் கூவி விற்கும் இந்த புல்லுருவிகள், ஏகாதிபத்திய ஊக்கத்தையும், ஆக்கத்தையும் பெற்றபடி தான் மானிட விடுதலை பற்றி கொக்கரிக்கின்றனர்.

 

இப்படிப்பட்ட இந்தக் கும்பலில் யோக்கியதை உலகமறிந்தது. இப்படி இலங்கை இந்திய உள்ளிட்ட ஏகாதிபத்திய ஆதரவு பெற்ற இந்த 'ஜனநாயக" கனவான்கள், மக்களிடம் அரசியல் செய்வது கிடையாது. மக்களிடம் செல்ல எந்த வேலைத்திட்டமும் கிடையாது. சொந்த மக்களை நம்புவது கிடையாது. அதாவது மக்களை நம்பி அரசியல் செய்வது கிடையாது.

 

அன்னிய பணம், அன்னிய பாதுகாப்புக்குள் நின்று குலைக்கின்ற கொலைகாரக் கும்பல்கள் இவை. இவர்கள் தான் புலிப் பாசிசம் பற்றியும், ஜனநாயக மீட்புப் பற்றியும் பிதற்றுகின்றனர்.

 

அன்னிய பணத்தில், அன்னிய பாதுகாப்பில் நின்று நடத்துகின்ற அரசியல், மக்களை அவர்களுக்கு அடிமைப்படுத்துவதைத் தவிர வேறு எதையும் செய்வதில்லை. இவர்கள் கடந்த 25 வருடத்தில் இந்தக் குழுக்களும், இந்த குழுக்களைச் சேர்ந்தவர்களின் அரசியல் பித்தாலாட்டங்கள், மனித விரோத செயல்பாட்டுகள் எம்முன்னால் விரிந்து கிடக்கின்றது.

 

புலியின் பாசிச அரசியலுக்கு மாற்றாக எந்த மாற்று அரசியல் வழியும் இவர்களிடம் கிடையாது. புலிகள் எப்படி மக்களை பார்க்கின்றரோ, அப்படித் தான் இந்தக் கும்பலும் மக்களை பார்க்கின்றது. புலிகள் எப்படி மக்களை நடத்துகின்றனரோ அப்படித்தான் இந்தக் கும்பலும் நடத்துகின்றது. புலிகள் எப்படி மக்களை அடக்கியொடுக்குகின்றனரோ, அப்படித்தான் இந்தக் கும்பலும் நடக்கின்றது. புலிகள் எப்படி மக்கள் நலன்களையும், அவர்களின் சொந்தப் போராட்டங்களையும் புலித் தமிழீழத்தின் பின் என்கின்றனரோ, அப்படித்தான் இவர்கள் அதை புலியொழிப்பின் பின் என்கின்றனர்.

 

எல்லா விதத்திலும் புலியாக இருப்பதில், புலியொழிப்பு புலியெதிர்ப்புக் கும்பல் ஒன்றுபட்டே நிற்கின்றது.

 

இந்தக் கும்பலுக்கும், இதற்கு அன்னக்காவடி எடுத்தாடும் புலம்பெயர் கொள்கை கோட்பாடற்ற எடுபிடிகள், தம்மைத் தாம் 'ஜனநாயகவாதிகள்" என்கின்றனர். இவர்கள் கூடிக் குலாவி செய்யும் விபச்சாரம் மூலம், ஜனநாயகத்தை மீட்பதாகச் சதிசெய்கின்றனர். நல்ல வேடிக்கையான அரசியல்.

 

இலங்கை அரசு என்ற பேய்க்கும், ஏகாதிபத்தியம் என்ற பிசாசுக்கும் துதிபாடுகின்ற, அதன் பின்னால் நின்று குலைக்கின்ற இந்த கும்பல், மக்களின் எதிரிகள் தான். இதற்கு வெளியில் எதையும் இவர்கள் செய்வதில்லை.

 

புலிகள் போல் எந்த விதத்திலும் இவர்கள் குறைந்தவர்கள் அல்ல. புலிகள் பெருமெடுப்பில் கொலைகளைத் தொடங்க முன்பு, புளாட் பாரிய உட்படுகொலைகளை நடத்தியவர்கள். இந்திய இராணுவம் எம்மண்ணை ஆக்கிரமித்து இருந்த காலத்தில் ஈ.என்.டி.எல்.எப், ஈ.பி.ஆர்.எல.எப் நடத்திய படுகொலைகள் புலியை மிஞ்சியது. இவர்கள் இன்றுவரை அதை சுயவிமர்சனம், விமர்சனம் செய்ய மறுப்பவர்கள். இன்று ஈ.பி.டி.பி நடத்தும் கொலைகள் புலிக்கு நிகரானது.

 

புலியெதிர்ப்பின் பின் புலியொழிப்பு அரசியல் நடைமுறையாக இருப்பது கொலைகள் தான். புலியொழிப்பு வேலைத்திட்டமே அதுதான். இன்று வடக்கு கிழக்கில் நடக்கும் கொலை, ஆள்கடத்தல், வரி, கப்பம் எல்லாம் யார் செய்கின்றனர். எல்லாம் இந்த ஜனநாயகவாதிகள் தான். கொலைகளை செய்துவந்த புலிகளை விரட்டிவிட்டு, இவர்கள் கொலைகளைச் செய்கின்றனர். இது தான் புலியொழிப்பு. வேறு வழி இவர்களிடம் இதற்கு வெளியில் கிடையாது.

 

புலியொழிப்பு 'ஜனநாயகவாதிகள்" புலி படுகொலைக்கு எதிராக குதித்தவர்கள், இன்று கள்ள மௌனத்துடன் அதை செய்வதும் ஆதரிப்பதும் வெளிப்படையானது.

 

அண்மையில் கிழக்கு சென்ற புலியொழிப்புக்கு தலைமை தாங்கும் தலைவர்கள், கிழக்கை கருணா என்ற புலியொழிப்பு கொலைகாரனுக்கு குத்தகைக்கு கொடுத்ததை பெருமையாக பீற்றினர். கொலைகார கருணாவுக்கும் தமக்கு இடையில் மோதலை உருவாக்கும் சதி என்று கூறி, ஜனநாயகத்துக்கே வெடி வைத்தனர். கருணா என்ற கொலைகார புலிக் குழுவுக்கு மாற்றாக, தேர்தலில் பங்குகொள்ள அனுமதி இல்லை என்பதையே, இந்த மோதல் பற்றிய கூற்று பளிச்சென்று விளக்கியது.

 

கிழக்கில் புலியின் முன்னைய கொலைகார வாரிசும், இன்றைய போட்டி கொலைகாரனுமான கருணா கும்பல் நடத்துகின்ற கொலைகள், மனித உரிமை மீறல்களை, அவர்களால் மக்கள் படும் துன்பத்தை பற்றி பேச முடியாத இவர்கள் ஊமை ஜனநாயகவாதிகளாக மாறி மட்டக்களப்பை சுற்றிப்பார்த்தனர். அதைப் பற்றி பேசினால் அது மோதல், புலிச் சதி என்று கூறும் ஜனநாயகத் துரோகிகள்.

 

கருணா என்ற புலிக் கொலைகாரன் நடத்துகின்ற வெறியாட்டங்கள், இந்த ஜனநாயகவாதிகளுக்கு இப்படி கண்ணில் தெரியாமல் போகின்றது. எப்படிப்பட்ட பொறுக்கிகள். கிழக்கு மக்களுக்கே அதே யாழ் மேலாதிக்க உள்ளடகத்தில் இங்கும் துரோகம் செய்கின்றனர். கிழக்கில் ஜனநாயகம் என்பது கருணாவுக்கு உட்பட்டது என்பது இவர்களின் அகராதி கூறுகின்றது. நாங்கள் அங்கு ஜனநாயக ரீதியாக செயல்பட மாட்டோம் என்கின்றது. இதையே ஆனந்தசங்கரி என்ற புலியொழிப்பு கனவான் பி.பி.சிக்கு பேட்டியாக கொடுக்கின்றார்.

 

எங்கள் ஜனநாயகம் புலியை ஒழிப்பது தான். அதை யார் செய்தாலும், அதை கண்டு கொள்ளமாட்டோம். அதில் ஜனநாயக விரோதம் நடந்தால் அதை ஆதரிப்போம் அல்லது கண்டுகொள்ளவே மாட்டோம் என்கின்றனர்.

 

இவர்களிள் நோக்கம் மக்களின் ஜனநாயகத்தை மீட்பதல்ல. அதற்கென்று எந்த வேலைத்திட்டமும் இவர்களிடம் கிடையாது. சொந்த அரசியல், மக்களைச் சார்ந்து நிற்றல் என்று, இந்தக் கும்பலிடம் எந்த அரசியல் அகராதியும் கிடையாது. புலியைப் போல் ஒரு பாசிச மாபியாக் கும்பல். புலியை மட்டுமல்ல, இந்த புலியெதிர்ப்பு புலியொழிப்பு பாசிச கும்பல்களையும் இனம் கண்டு மக்களாக ஒழிக்காத வரை, சமுதாயத்தில் ஜனநாயகம் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.

பி.இரயாகரன்
02.09.2007