உலகில் எங்கும் இருப்பதைவிட இந்தியாவில் தான் அதிகமான ஆலயங்கள் இருக்கின்றன. இந்தியா முழுமைக்கும் பார்த்தால் தமிழ்நாட்டில் தான் அதிகமான பெரிய ஆலயங்கள் (கோவில்கள்) இருக்கின்றன.இந்தப்படி அதிகமான பெரிய ஆலயங்கள் கட்டப்பட்டிருப்பவையெல்லாம் பெரியதும் அக்கால அரசாங்க அரசர்களாலேயே கட்டப்பட்டவையாகும். இதற்குக் காரணம் என்னவென்றால் அக்காலத்தில் இந்த ஆலயங்கள் மூலம் அரசாங்கத்திற்குப் பணம் (நிதி) வருவாய்க்கு வழி செய்து கொள்ளும் ஏற்பாடு இருந்திருக்கிறது என்பது தான். எதுபோலென்றால் சுமார் 40 – 50 ஆண்டுகளுக்கு முன் வரையில் அரசாங்க நிதி (வரி) வசூலுக்கு அரசாங்கமே மதுக்கடைகளை ஏற்பாடு செய்து, அதை வியாபாரம் போல் செய்து பணம் சம்பாதித்து வரி நிதியோடு சேர்த்து வந்தது போலவேயாகும். அதனாலேயே கோவில் கட்டுவது என்பதை அரசாங்கத்திற்கே உரிமையாக வைத்துக் கொள்ளப்பட்டிருந்ததுடன் "அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் கோயில் கட்டக்கூடாது" என்கிற நிபந்தனையும் இருந்து வந்திருக்கிறது. இதற்கு ஆதாரம் நம் தேசத்தில் சுதேச சமஸ்தானங்கள் இருக்கும் வரை அந்த அரசாங்க அனுமதியில்லாமல் யாரும் எந்த கோவிலையும் கட்டக்கூடாது என்ற நிபந்தனை இருந்து வந்திருப்பதேயாகும்.

சுமார் 2000 - ஆண்டுகளுக்கு முன் சாணக்கியர் என்ற ஒரு பார்ப்பனர் பொருளாதார நிபுணராக இருந்தார். அவர் உண்டாக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நீதி நூலில் இதைப்பற்றி விளக்கியுள்ளார். இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரம் என்னும் நூலானது மனுதர்ம சாஸ்திரம், யாக்ஞ் வல்கியர் ஸ்மிருதி ஆகிய நூல்களுக்கும் முந்தியதாகும் என்பது ஆராய்ச்சியாளரின் முடிவு. இதிலிருந்து மனு, யாக்ஞவல்கியர் முதலிய நீதி நூல்களின் ஆயுள் சுமார் 2000 - ஆண்டுகளுக்கு உட்பட்டதென்றே தெரிகிறது. இந்த சாணக்கிய அர்த்த சாஸ்திரத்தில் மத சம்பந்தமான ஸ்தாபனங்களை மேற்பார்வைச் செய்யும் அரசாங்க அதிகாரி நகரங்களிலும், கிராமங்களிலும் உள்ள ஆலயங்களுக்குச் சொந்தமான சொத்துக்களில் வரும்படிகளையும் கோவில்களுக்கு பக்தர்களிடமிருந்து பணமாக வசூலித்து அந்தப்படி வசூலிக்கப்படும் பணத்தையும் அரசாங்க வருவாய் நிதியுடன் சேர்க்க வேண்டும் என்ற விதிகள் இருந்திருக்கின்றன.

அரசாங்கத்திற்குப் புதிய வருவாய்த் திட்டங்களாக மக்களை ஏமாற்றி வசூலிக்கப் பல திட்டங்கள் இருந்தன. ஒரு இரவில் பொது மக்கள் யாருக்கும் தெரியாமல் ஒரு கடவுளை அல்லது மேடையை ஏற்படுத்தி, அதைத் தானாகத் தோன்றியது என்று விளம்பரப்படுத்தி அதை வணங்கினால் பல கெடுதிகள், வியாதிகள் விலகுமென்று கூறி, திருவிழாக்கள் முதலியன நடத்தி, அதன் மூலம் பணம் சம்பாதித்து பொக்கிஷத்தில் சேர்க்க வேண்டியது. அரசாங்க ஒற்றர்களை விட்டு ஒரு மரத்தில் பிசாசு, முனி இருப்பதாகப்பொது மக்களிடம் பயத்தை ஏற்படுத்தி விட வேண்டும். பிறகு இதை விரட்டவும், திருப்தி செய்யவும், பெரிய சாந்தி விழா நடத்தி பெருந்தொகை வசூலித்து பொக்கிஷத்திற்குச் சேர்த்துவிட வேண்டும். அரசரது ஒற்றர்கள் சந்நியாசி மாதிரி வேடம் பூண்டு இந்தத் தந்திரத்தைச் செய்து பணத்தை வசூலிக்க வேண்டியது. இவற்றால் பிசாசு நகரத்தை விட்டுப் போய் விடுகிறது. பணம் அரசரது பொக்கிஷத்திற்குச் சேருகிறது. அந்தக் காலத்தில் அரசனுக்குப் பணம் தேடிக் கொடுக்கும் வேலை அதிகாரிகளுக்கும் கடுமையான வேலையாகவே இருந்திருக்க வேண்டும். மற்றும் பாம்பைக் காட்டி பணம் பறிக்கும் தந்திரம் இதைவிடவிசித்திரமானது. இது இன்றுங்கூட சிறிது மாற்றத்துடன் ஒரு கோவிலிலாவது இருந்து வருவதாகத் தெரிகிறது.

சாணக்கியர் காலத்தில் தீர்த்தம் எவ்வாறு பயன்படுத்தப்பட்டிருக்குமென்பதை எளிதாக உணர்ந்து கொள்ளலாம்.சாதாரணமாக எளிதில் இவ்விஷயங்ளை நம்பாத மக்களிடத்தில் தான் இந்தத் தீர்த்தம் உபயோகப்பட்டது. இதை அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் மருந்தாக உபயோகித்தார்கள். ஆனால், இந்தத் தந்திரங்களையெல்லாம் அரசர்களுடைய காரியத்திற்காக உபயோகித்தார்களேயன்றி, இன்று நடப்பது போல் ஒரு சிலருடைய சுயநல வாழ்வுக்காகவன்று என்பதை ஞாபகத்திலிருத்திக் கொள்ள வேண்டும். தந்திரம் இரண்டும் ஒன்று தான்."பார்ப்பான் தன்னலத்தையும், ஆதாயத்தையும் கருதி கோவில்களில் ஏமாற்றிப் பணம் பறிக்க எவ்விதத் தந்திரத்தையும் உபயோகிப்பான்" என்று பிரஞ்சு பாதிரியாரான கற்றறிந்த "ஆபி டூபாய்" ஒரு நூற்றாண்டுக்கு முன் எழுதியிருக்கிறார். மேலும், சாணக்கியர் கூறுவதாவது :

"அரசனது தோட்டத்தில் ஏதாவது ஒரு மரம் பால் வடித்தாலாவது அல்லது அகலமாகப் பூக்கவோ, காய்க்கவோ செய்திருந்தாலாவது அதில் கடவுள் தோன்றியிருக்கிறார் என்று பொது ஜனங்களிடம் காட்டி, பிரசித்தப்படுத்த வேண்டும். "அல்லது ஒரு கிணற்றில் அநேக தலைகளையுடைய பாம்பு ஒன்று இருப்பதாகச் சொல்லி அதைப் பார்க்க வருபவர்களிடமிருந்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம். "

"ஒரு பாம்பு விக்கிரகத்தில் துவாரமிட்டோ அல்லது கோவிலின் இருட்டு மூலையிலோ அல்லது ஏதாவது பொந்திலோ பசியால் வாடிக் கிடக்கும் பாம்பு ஒன்றை வைத்து ஜனங்களைப் பார்க்கச் சொல்லி பணம் வசூலிக்கலாம்."

"இம்மாதிரி தந்திரங்களை எளிதில் நம்பாத ஜனங்களுக்கு மயக்க மருந்து கலந்த நீரைத் தீர்த்தமென்றும், பிரசாதமென்றும் சொல்லி, குடிக்கும்படிச் செய்து அவர்கள் குடித்து மயங்கியவுடன் அதற்குக் கடவுள் கோபம் என்றும் என்றும் சொல்ல வேண்டியது. அல்லது தாழ்ந்த ஜாதியானொருவனைப் பாம்பு கடிக்கும்படிச் செய்து, இம்மாதிரி துர்சகுணம் நேரிடாது தடுக்கப் போவதாகப் பாசாங்கு செய்து ஒற்றர்கள் பணம் வசூலிக்கலாம்."

"தெய்வங்களுக்குச் சமர்ப்பிக்கப்படும் காணிக்கைகள் அரசனது பொக்கிஷத்தைச் சேர வேண்டும். அரசனது செலவுக்காக அரசன் அரசன் வாழும் பொருட்டு பணம் வசூலிக்க ஒரே இரவில் தேவதைகளையும், பீடங்களையும், ஸ்தாபித்து திருவிழாக்கள் நடத்த வேண்டும். காணிக்கைகளைப் பெறுவதற்காக அடிக்கடி கடவுள்கள் தோன்றும்படிச் செய்ய வேண்டும்."

சாதாரணமாக மிக வெளிப்படையான தந்திரங்கள் தான் அதிகமாகப்பலனை அளிக்கிறது. கடவுள் தம்மூலம் பேசுவதாகப் பாசாங்கு செய்துபணம் திரட்டும் வழி முன்காலத்தில் தான் மற்ற நாட்டுப் புரோகிதர்களாலும் கையாளப்பட்டு வந்தது. ஆனால், இந்தியாவில் இன்றும் இவ்வழக்கம் ஓயவில்லை. இங்கு விக்கிரகங்களே பேசுகின்றன. இவற்றை வழிபடுகிறவர்கள் மிகக் கவனமாகக் கேட்டு பரவசமடைகிறார்கள். ஆனால் கல்விக்கிரகத்தின் உள்ளோ பக்கத்திலோ வஞ்சகன் ஒருவன் மறைந்திருந்து விக்கிரகத்தின் வாய் வழியாகப் பேசுகின்றான் என்பதை இவர்கள் அறிவதில்லை என்று "ஆபே டூபாய்" கூறுகின்றார்.

இவை போன்று இன்றளவும் கையாளப்பட்டு வருகிற பலவிதத் தந்திரங்களையும் அவர் விரிவாக விளக்குகிறார்.இனி நமது சாணக்கியரைக் கவனிப்போம். சாணக்கியர் காலத்தில் கோவில் வருவாயிலிருந்து ஒரு பைசாவாவது அரசானது பொக்கிஷத்தைச் சேரதவறி விட்டால் அந்த இடத்திலேயே கோவில் அதிகாரி ஏன் தூக்கிலிடப்பட்டிருப்பார் என்பதை நாம் மேற்சொன்னவற்றிலிருந்து அறிந்து கொள்ளலாம்.அது மிகவும் நியாயமே. ஏனெனில் அக்காலத்தில் விக்கிரகங்களும், பீடங்களும் அரசனது வியாபாரத்திற்காக ஏற்பட்டவைகளாகும். பொது ஜனங்களின் பணத்தைச் செலவிட்டே விக்கிரகங்களையும், பீடங்களையும், மடங்களையும் உண்டு பண்ணி பரிபாலித்து அவற்றைப்பற்றி பெரிதாக விளம்பரப்படுத்தியும் வந்தார்கள். இக்காலத்தில் அரசாங்கத்தார் எவ்வாறு பெரும் பொருள் செலவிட்டு மேட்டூர் தேக்கத்தையும், சுக்கூர் அணைக்கட்டையும் கட்டி அவற்றினின்றும் லாபத்தை எதிர்பார்க்கின்றார்களோ அதேபோல முன்காலத்து அரசர்கள் கோவில்களையும், ஸ்தலங்களையும் உற்பத்தி செய்ததும் லாபத்தைக் கருதியேயாகும்.

இம்மாதிரி "மத ஸ்தாபனங்க" ளை ஏற்படுத்தி முற்கால மன்னர்களைச்சுற்றி விரோதிகள் எப்போழுதும் இருந்து வந்ததால் இடைவிடாது யுத்தங்கள் நேரிட்டுக் கொண்டேயிருந்தன. இதற்காக அவர்கள் பெருஞ்சேனைகளை வைத்திருந்தனர். யுத்தங்களுக்கும், சேனைகளுக்கும் வேண்டிய பணத்திற்காக ஏராளமான வருவாய் தேவைப்பட்டது. கோவில் வருவாயைக் கொண்டு பார்ப்பனருக்கு மட்டும் சோறு போடுவது என்றிருந்தால் அரசும் கோவிலும் அன்றே மறைந்திருக்கும். இக்கோவில்களையும், பீடங்களையும், கடவுள்களையும் படைத்த அக்காலத்து அரசாங்கத்தை நடத்தும் கஷ்டம் எவ்வளவு என்று தெரியும்.

உதாரணமாக பூணர மதுவிலக்கு ஏற்பட்டால் நாட்டில் உயர்தரக் கல்வியை நிறுத்த நேரிடுமென்று இன்று (இராஜாஜி முதலியவர்கள்) சொல்லுவது போல தங்களது ஷேமமும், கோவில் வருமானத்தில் தொங்கிக்கிடந்தன என்பதை அக்கால அரசர்கள் அறிந்திருந்தார்கள். ஆதலால் அவர்கள் மீது மிகுந்த கவனம் செலுத்தி வந்தார்கள். இவ்வுலக சுக துக்கங்களைக் குறித்து அவர்கள் நினைத்தார்களேயன்றி மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கவில்லை. இக்காலத்து சுதேச மன்னர்களில் பெரும்பாலோர் யாதொரு பொறுப்பும் கவலையுமெடுக்காது மோட்சலோகத்தைப்பற்றி நினைக்கிறார்கள். பார்ப்பானை திருப்தி செய்தால் மோட்சத்துக்குச் சீட்டு கிடைத்துவிடுமென நம்புகிறார்கள். அங்ஙனம் செய்துவிட்டு தங்கள் ராஜ்ஜியங்களைவிட்டு தற்கால மோட்ச பூமியான பாரிஸ் முதலிய மேல்நாடுகளுக்குச் சென்றுவிடுவதுமுண்டு.

சர்தார் கே.எம்.பணிக்கர் அவர்கள் "இந்திய சமஸ்தானங்களும், இந்திய அரசாங்கமும்" என்ற தனது புத்தகத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்:

"பல சிற்றரசர்கள் மிதமிஞ்சிய சுக போகங்களுடன் இழிவான வாழ்க்கை வாழ்வதற்குக் காரணம் அவர்கள் இராஜ்ஜிய பாரத்தில் நேராக பொறுப்பேற்று நடத்தாததேயாகும். முன் காலங்களில் குடிகளைத் துன்புறுத்தும் கொடுங்கோல் மன்னனையும், தனது சுகமொன்றையே கருதும் துர் நடத்தைக்காரரையும் சும்மா விட்டு வைத்திருக்கமாட்டார்கள். வெளியிலிருந்தேற்படும் படையெடுப்போ அன்றி உள்நாட்டுக் கலகமோ அவனது வாழ்க்கையை முடித்துவிடும். ஆனால் இக்காலத்தில் அப்படியல்ல. ஒரு அரசன் தான் பிரிட்டிஷ் அரசாங்கத்தோடு செய்துகொண்ட உடன்படிக்கையை மீறாதிருப்பது வரையும் நாகரீக ஆசாரங்களை வெளிப்படையாக புறக்கணியாதிருப்பதுவரையும், அவனுக்கு பிரிட்டிஷ் அரசாங்கத்தார் ஆதரவிருக்கின்றது. அவன் தனது சுக போகங்களுக்காகத்தன் இஷ்டம் போல் பொக்கிஷத்தை உபயோகிக்கவம் குடிகளை கொள்ளையடிக்கவும் விட்டுவிடுகிறார்கள்."

சர்.தாமஸ் மன்ரோவின் அடியிற்கண்ட குறிப்புக்களையும் திரு.பணிக்கர் அவர்கள் எடுத்துக் கூறுகிறார்கள். இந்தியாவில் மோசமான ராஜ்ய பாரம் ஏற்படுமாயின் அரண்மனையில் புரட்சி உண்டு பண்ணியோ அல்லது உள்நாட்டுக் கலகத்தாலோ அதைச் சரி படுத்துவது தான் வழக்கம். ஆனால் உள்நாட்டு வெளிநாட்டு விரோதிகளினின்றும் மன்னனைக் காப்பாற்ற பிரிட்டிஷ் படைகளிருப்பதால் அவ்விதம் கொடுங்கோன்மையைப் பரிகரிக்கும் வழியெதுவுமில்லாமற் போய்விடுகின்றது. தனது பாதுகாப்புக்கு அன்னியர் உதவியிருக்கிறதென்ற நம்பிக்கையால் அவன் சோம்பேறியாய் விடுகின்றான். தனது குடிமக்களுடைய வெறுப்பு தன்னையொன்றுஞ் செய்ய முடியாவனாகவும், பேராசை பிடித்தவனாகவும் ஆகிவிடுகின்றான். கோவில்களிலிருந்து தனக்குப் பணம் வந்துகொண்டே இருக்க வேண்டும் என்பதொன்றையே அரசன் கவனிப்பான் என்பது இதுகாறும் எடுத்துக் காட்டியவற்றிலிருந்து விளங்கும். யார் கோயிலுக்குப் போய் வணங்கினார்கள் யார் மதுவருந்தினார்கள் என்பதைப்பற்றியெல்லாம் அவன் கவனித்ததில்லை. இவர்கள் சண்டாளராகவும், சூத்திரராகவும், வைசியராகவும், சத்திரியராகவும், பிராமணராகவும் இருக்கலாம். சண்டாளனாகவிருந்தாலும் அவன் எவ்வளவுகெவ்வளவு அதிகமாகப் பணம் கொடுக்கிறானோ அவ்வளவுக்கவ்வளவு அரசனும் திருப்தியடைந்திருப்பான். பணம் வரும் என்று தெரிந்தால் அரசன் தனது விக்கிரகங்களையும், பீடங்களையும், ஸர்ப்பங்களையும் கொண்டு சண்டாளருக்கு விசேஷ வேடிக்கைகளையும் காட்டியிருப்பான். ஒரு சண்டாளன் தனது கோவிலுக்குள் நுழையவோ விக்கிரகத்தையோ பாம்பையோ மரத்தையோ வணங்கவோ செய்யவொட்டாமல் ஓர் "வர்ணாசிரம தர்மி" தடுப்பது நிமித்தம் தனக்கு நியாயமாக வரவேண்டிய வருவாய் தடைபடுவதாகத் தனது காதுக்கு எட்டினால் இம்மாதிரி தடை செய்பவர்கள் பார்ப்பனராக இருந்த போதிலும் இவர்களை சமீபத்திலிருக்கும் மரத்தில் கட்டி தூக்கியிருப்பான்.

அக்காலத்தில் இந்துக் கோவில்கள் அரசனுடைய வருவாய்க்கு அவ்வளவு தூரம் மூலகாரணமாயிருந்தன. ஆகவே எக்காரணத்தைக் காட்டியேனும் இவன் சண்டாளன் இவன் தாழ்ந்த சாதி ஆகையால் கோவிலுக்குள் போகவோ வணங்கவோ கூடாதென்று யாரேனும் சொன்னால் அவன் அந்த இடத்திலேயே கொடிய குற்றஞ்செய்தவனாகக் கருதப்பட்டிப்பான். கோவில்கள், அரசாங்க ஸ்தாபனங்களாகவிருந்தன. ஏதேனும் ஒரு ஸ்தாபனம் "பொதுச் சொத்து" என்று சொல்லக்கூடியதாக இருந்திருந்தால் அது இந்தக் கோயில்களாகும். இப்போது உயர் சாதி இந்து வக்கீல்கள் கோயில்களைப் பொது ஸ்தாபனங்கள் என்று சொல்லும் போது ஒரு புது மாதிரியான விசேஷ அர்த்தத்துடன் சொல்லுகின்றார்கள். பிரதம திருஷ்டியில் நான்கு சாதியாருக்கும் தட்டுத் தடையின்றி இக்கோயில்களில் பிரவேசித்து வழிபட உரிமையுண்டு என்பது இவர்கள் கூற்றாகும்.

"வேதங்களை அடிப்படையாகக் கொண்ட ஆரிய மதத்தில் விக்கிரக ஆதாரனையில்லை. இது பின்னர் தோன்றிய இழிவுபட்ட ஆராதனையாகும்" என்று காலஞ்சென்ற "மாக்ஸ்மூல்லர்" என்னும் உலகப் பிரசித்தி பெற்ற மேல்நாட்டு ஆசிரியர் கூறுகின்றார். வங்காள தேசத்து பிரபல வழக்கறிஞரான மிஸ்டர் ஜே.சி.கோஷ் தமதுதாகூர் சட்டப் பிரசங்கத்தில் அடியில் வருமாறு குறிப்பிடுகிறார்:

"மக்கள் யாகம் முதலியவற்றை நடத்திவந்த காலத்தில் கோயில்களையும், விக்கிரகங்களையும், ஸ்தாபிக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை. பிராமணர்கள் மட்டுமே அக்கினியை வளர்க்கலாம். அதனால் அவர்களை அக்கினி ஹோத்திரிகள் என்றழைத்தார்கள். மற்ற சாதியாரும் உயர்ந்த போது அவர்கள் வழிபடத் தெய்வங்கள் வேண்டியதாயிற்று. பிராமணரது ஆதிக்கம் குறையவும் அக்கினி வணக்கம் தனது செல்வாக்கையிழந்தது. இதிலிருந்து விக்கிரக வணக்கம் ஆரம்பமாயிற்று. மற்றும் புத்த விக்கிரகங்களையும், ஸ்தாபித்து புத்த மதத்தினர் வழிபடவாரம்பித்தது. இந்துக் கோயில்களையும், விக்கிரகங்களையும் ஸ்தாபிப்பதற்கு வழிகோலியாயிற்று. விக்கிரகங்களையும், கோயில்களையும் ஏற்படுத்தியபோது அவற்றைப் பரிபாலிக்க சொத்துக்களை விட வேண்டியதும் அவசியமாயிற்று! எனவே நிலங்களை விட்டதுமன்றி பல பழைய கோவில்களில் மக்களை ஈர்க்க (அடிமைப் பெண்களையும்) தாசிகளையும் விட்டார்கள். இதிலிருந்து இந்தியாவில் எந்த நோக்கத்துடன் விக்கிரக ஆராதனை ஆரம்பிக்கப்பட்டது என்பது புலனாகும். இப்பொழுது ஒவ்வொரு கோயிலிலும் நடனசாலை இருப்பதாகவே கருதப்படுகிறது என்று மிஸ்டர் கோஷ் சொல்கிறார்.

பண்டைக் காலத்தில் இக்காலத்திலிருப்பது போலவே கோவில்கள் வேடிக்கை விநோத ஸ்தலங்களாகவே இருந்து வந்தன. இவ்வுத்தேசத்துடன் தான் அக்கால அரசர்களும் ஆலயங்களை ஏற்படுத்தியிருந்தார்கள். எனவே இந்நாட்டிலிருக்கும் பல கோயில்கள் வேசியர் விடுதிகளைவிடச் சிறந்தவையல்லவென்று காந்தியார் குறிப்பிட்டது சரித்திரப்படியும் மிகையாகாது. இந்நோக்கத்துடனேயே ஆலயங்களை ஸ்தாபித்தார்கள் என்பது சரித்திரப்பூர்வமான உண்மையாகும்.

 

(1970 – ஆம் ஆண்டில் வெளியான தந்தை பெரியார் அவர்களின் 92 –வது பிறந்தநாள் விழா மலரில் தந்தை பெரியார் அவர்கள் எழுதிய கட்டுரை)(பெரியார் களஞ்சியம் 2 –ஆம் தொகுதியில் இருந்து…. பக்கம் :275)

http://periyarvizippunarvuiyakkam.blogspot.com/2008/04/blog-post_20.html