குறிப்பாகவும், சிறப்பாகவும் கடவுள் என்பது என்ன என்பதைப்பற்றியும், மதம் என்பது என்ன என்பதைப்பற்றியும், தர்மம் என்பது என்ன என்பதைப்பற்றியும், பரிபாலனம் என்பது என்ன என்பதைப் பற்றியும் இந்துக்கள் என்போர்களின் ஆயிரத்திற்கொருவருக்குக்கூடக் குறைந்த அளவு ஞானமும் இல்லாமலே இருக்கிறது. இதைப்போல ஒரு பெரிய ஜனசமூகத்திற்குக் கேடான காரியம் வேறெதுவும் இல்லை. நம்மில் அநேகர் கடவுள் என்றால் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்?

 

கடவுள் நம்மைப்போல் மனித உருவத்தோடு இருப்பதாயும், அதற்குப் பெண்டாட்டி, பிள்ளை, தாய், தகப்பன், வீடு, வாசல், சொத்து, சுகம் உண்டென்றும், அதற்கும் கல்யாணம், ருது, சாந்தி, படுக்கை, வீடு, சீமந்தம், பிள்ளைப்பேறு உண்டென்றும் இப்படி ஆயிரக்கணக்கான கடவுள் - ஆயிரக்கணக்கான பெயரினால் இருக்கிறதாகவும், அதற்கு அபிஷேகமோ, பூஜையோ, உற்சவமோ செய்வதுதான் பக்தி என்பதாகவும் நினைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

 

அதுபோலவே மதம் என்பதையும், நெற்றியில் நாமமோ, விபூதியோ, கோபியோ, சந்தனமோ பூசுவது தான் இந்து மதம் என்றும், ஒருவரை ஒருவர் தாழ்ந்த ஜாதி என்று சொல்லுவதைத்தான் இந்துமதம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள். இம்மாதிரி சுவாமிகளுக்குக் கோயில் கட்டுவதையும், உற்சவம் நடத்துவிப்பதையும், இந்த உற்சவத்திற்கு வரும் ஜனங்களுக்கு மடம் கட்டுவதும், சத்திரம் கட்டுவதும், சாப்பாடு போடுவதும், தர்மம் என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இவ்விதக் காரியத்தைப் பிரசாரம் செய்வதையும், இவ்விதக் காரியங்களை நிர்வகிப்பதையும், இதற்காகப் பொது ஜனங்கள் பொருளைச் செலவு செய்வதையும் பரிபாலனம் என்று நினைக்கிறார்கள்.


இந்து சமூகத்திற்கு அடிப்படையான குற்றம் - அதாவது அஸ்திவாரத்திலேயே பலவீனம் - நாம் கடவுளையும், மதத்தையும் அறிந்திருக்கும் பான்மையேதான். இந்தப்பான்மையுள்ள சமூகம் உருப்படியாவதற்கு மார்க்கமேயில்லை. தொட்டதற்கெல்லாம் கடவுள் செயல் என்பதும், நமது தேவைகளையெல்லாம் நமது பிரயத்தனமில்லாமல் கடவுளை ஏமாற்றி அடைந்துவிடலாம் என்கிற பேராசைப் பைத்தியமும் நம்மைவிட்டு நீங்க வேண்டும். கடவுள் கை, கால், கண், மூக்குடன் மனிதனைப்போல் எங்கேயோ ஓரிடத்தில் இருக்கிறார். அவரை நினைத்தாலோ, பணிந்தாலோ, தேங்காய்பழம் உடைத்துப் பொங்கல் வைத்து பூஜை செய்தாலோ, பூசாரிக்குப் பணம் கொடுத்தாலோ மனிதனாய்ப் பிறந்ததற்குச் செய்ய வேண்டிய கடன் தீர்ந்துவிட்டது. மனிதன் செய்யும் தப்பிதம் எல்லாம் தீர்ந்து விட்டது என்று எண்ணுகிற எண்ணத்தைப் போல் ஒரு முட்டாள்தனமான எண்ணம் வேறொன்றுமே இல்லை.

 

மனிதர்கள் இவ்வளவு அக்கிரமங்கள் செய்யக் காரணமே கடவுளைச் சரியானபடி உணராததும், உணர்ந்திருப்பதாய் நினைக்கும் பலர் கடவுளை வணங்கி மன்னிப்புக் கேட்டால் மன்னித்து விடுவார் என்கிற நம்பிக்கையும் தான். கடவுள் ஒருவர் இருக்கிறார்! அவர் எல்லாவற்றையும் அறிந்து கொண்டு இருக்கிறார் என்று எண்ணுகிற மக்களிலேயே ஆயிரத்தில் ஒருவன் கூட கடவுள் கட்டளைக்குப் பயந்து நடப்பது அருமையாய்த்தான் இருக்கிறது. இவற்றிற்குக் காரணம் இயற்கைக்கு விரோதமான கட்டளைகளையும், உண்மையான கடவுள் தன்மையையும் அறியாததேதான்.

 

கடவுள் கட்டளை என்று சொல்வது ஒவ்வொரு தேசத்திற்கும், ஒவ்வொரு ஜாதிக்கும் ஒவ்வொருவிதமாக இருந்துவருவதை நாம் காண்கிறோம். இவை எப்படிக் கடவுள் - கட்டளையாக மதிக்கப்படும்? அதுபோலவே பாவ- புண்ணியம் என்பது தேசத்திற்கொருவிதமாகவும், மதத்திற்கொருவிதமாகவும், ஜாதிக்கொருவிதமாகவும் தான் கருதப்படுகிறது. நமது கல்யாணங்களிலேயே மதத்திற்கு மதம் வித்தியாசம், ஜாதிக்கு ஜாதி வித்தியாசம், சிலர் தனது சிறிய தகப்பனார் பெரிய தகப்பனார் புத்திரியை மணக்கிறார்கள். சிலர் அத்தை மாமன் புத்திரியை மணக்கிறார்கள்.

 

ஆகார விஷயத்திலோ சிலர் பசுவை உண்ணுவது பாவம் என்கிறார்கள். சிலர் பன்றியை உண்பது பாவம் என்கிறார்கள். சிலர் கோழியை உண்பது பாவம் என்கிறார்கள். ஜந்துக்களிலேயே சிலர் பசுவை அடித்துத் துன்புறுத்தி வேலை வாங்கலாம். ஆனால் பாம்பை அடிப்பது பாவம் என்கிறார்கள். சிலர் எந்த ஜீவனையும் வதைக்கக்கூடாது என்கிறார்கள். சிலர் எல்லா ஜீவனும் மனிதன் தன் இஷ்டம் போல் அனுபவிப்பதற்குத் தான் படைக்கப்பட்டது என்கிறார்கள். இந்த நிலையில் எது உண்மை? எது கடவுள் கட்டளை? எது பாவம்? என்று எப்படி உணர முடியும். இவற்றைப்பற்றி எவராவது ஆராய்ச்சி செய்யப் புகுந்தால் உடனே அவரை நாஸ்திகர் என்று சொல்லுவதும் இதெல்லாம் உனக்கு எதற்காக வேண்டும்? பெரியவர்கள் சொன்னபடியும் நடந்தபடியும் நடக்க வேண்டியதுதானே என்றும் சொல்லிவிடுவார்கள்.

 

பெரியவர்கள் யார் என்று யோசிக்கப்போனால் அதிலிருக்கும் கஷ்டத்திற்கு அளவேயில்லை. அன்றியும் அவர்கள் சொன்னதையும், நடந்ததையும் கவனிக்கப்போனால் அதிலுள்ள கஷ்டத்திற்கும் விவகாரத்திற்கும் முடிவேயில்லை. உதாரணமாகச் சிலர் "வேதம்" என்று ஒன்றைச் சொல்லி அதன்படி எல்லாரும் நடக்கவேண்டும் என்று சொல்லுவார்கள். அதில் என்ன சொல்லியிருக்கிறது நான் பார்க்கலாமா? என்றால் அது கடவுளால் சொல்லப்பட்டது அதை நீ பார்ப்பது பாவம் நான் சொல்வதைத் தான் நம்பவேண்டும் என்பார்கள்.

 

உலகத்தில் எத்தனைக் கடவுள் இருப்பார்கள்! ஒரு கடவுள் தானே! அவர் சொல்லியிருப்பாரானால் அது உலகத்திற்கெல்லாம் ஒப்புக் கொள்ளப்பட்டதாயிருக்க வேண்டாமா? அப்படியானால் கிறிஸ்து மகம்மது முதலிய மதங்கள் இந்தியா தவிர மற்ற தேசங்களும் இதை ஒப்புக்கொள்ளும்படி கடவுள் ஏன் செய்யவில்லை? ஆனதனால் இது கடவுள் சொன்னார் உடனே அவனை வேதப்பிரஷ்டன் என்று சொல்லிவிடுவார்கள். இம்மாதிரி மூடுமந்திரமானதும், இயற்கைக்கும், அனுபவத்திற்கும், நாணயத்திற்கும் விரோதமானதுமான கொள்கைகள் நமது நாட்டில் இந்து மதத்தின் பெயரால் இருந்து கொண்டு ஒரு பெருஞ் சமூகத்தையே தேய்ந்து போகும்படிச் செய்வதோடு, இதன் பரிபாலனம் என்னும் பெயரால் தேசத்தின் நேரமும், அறிவும், பொருளும் அளவற்று அனாவசியமாய் செலவாகியும் வருகின்றன.

 

மதத்திற்கொரு கடவுளா? ஜாதிக்கொரு கடவுளா? மதத்திற்கொரு வேதமா? மதத்திற்கொரு புண்ணிய பாவமா? கடவுளுக்கும் மோட்சத்திற்கும் நரகத்திற்கும் வேறு ஒரு உலகமிருக்கிறதா? ஒருக்காலும் இருக்கவே முடியாது.

 

பெரியவர்கள் கோயிலில் சுவாமி கும்பிடும் போது கட்கத்திலிருக்கும் குழந்தை எப்படி ஒன்றும் அறியாமலும், மனதில் ஒன்றும் நினைக்காமலும் தானும் கைக்கூப்பிக் கும்பிடுகிறதோ அதுபோலவே நமக்குத் தெய்வம் - மதம் - தர்மம் என்கிற சொற்கள். மற்றவர்கள் சொல்வதைக் கேட்டு அர்த்தமில்லாமல் நமக்குள் பதிந்து விட்டன. இதுபோலவே பக்தி – தொண்டு அகிம்சை என்னும் பதங்களும் அர்த்தமில்லாமலே வழங்கப்படுகின்றன. யோசித்துப் பார்ப்போமேயானால் நம்மிடையில் உள்ள பக்தி செய்யத்தக்க கடவுள் அவர்களுக்குச் செய்யும் தொண்டதான் கடவுள் தொண்டு. அம்மக்களின் விடுதலை தான் மோட்சம் ஜீவன்களிடம் கருணை காட்டுவதும் அவை வேதனைப்படாமலிருப்பதும் தான் அகிம்சை.

 

மாமிசம் சாப்பிடுவதில்லை என்பது மாத்திரமே அகிம்சையதகாது. பகுத்தறிவுள்ள மக்களைக் கஷ்டப்படுத்தாமல் அவர்கள் மனவேதனை அடையச் செய்யாமல் இருப்பதும், அவர்களுடைய கஷ்டத்தையும், அடிமைத்தனத்தையும் நீக்க உழைப்பதும் தான் அகிம்சையாகும். "மாட்டு மாமிசம் சாப்பிடாமலிருந்து விட்டு மாட்டை வண்டியில் கட்டி சுமக்கமாட்டாத பாரம் வைத்துத் தினம் கஷ்டப்படுத்துவது ஒருக்காலும் அகிம்சையாகாது."

இப்படியே ஒவ்வொரு விஷயத்திலும் மற்றொரு ஜீவனுக்கு உபத்திரவமும் கொடுமையும் செய்யாமலிருப்பது தான் அகிம்சை. மனிதனுக்கு மனிதன் பார்ப்பது பாவம்! தெருவில் நடப்பது பாவம்! என்று சொல்லிக் கொண்டு பட்டை நாமம் போட்டுக்கொண்டும், பஞ்சகச்சம் வைத்து வேட்டி கட்டிக் கொண்டும், வாயால் ராம்.. ராம்.. என்று ஜபித்துக் கொண்டும் இருந்தால் அது ஆசாரமும் பக்தியுமாய்விடுமா?

 

நம்மைச் சுற்றிக் கோடிக்கணக்கான மக்கள் குடியிருக்க நிழல் இல்லாமலும் இரண்டு நாளைக்கு ஒரு வேளைகூட சாப்பிடச் சக்தியில்லாமல் தரித்திரத்தால் வாடிக் கொண்டிருக்கும் போது சோம்பேறிகளும், விபசாரிகளும் தங்கும்படி மடங்களும், சத்திரங்களும் கட்டுவதும் வயிறு நிறையச் சாப்பிட்டுவிட்டு பாயசத்திற்குப் குங்குமப்பூ போடவில்லை, பொங்கலுக்கு பாதாம் பருப்பு போடவில்லை என்று சொல்லிவிட்டுப் போகும் தடியர்களுக்குப் பொங்கிப்போடுவதும் சமாராதனை செய்வதும் தர்மமாகுமா?

 

இவற்றை உணராமல் சுயநலக்காரர்கள் தங்கள் நன்மைக்கு எழுதி வைத்திருக்கும் ஆபாசக் களஞ்சியங்களை நம்பிக் கொண்டு நமது பொருள், நேரம், அறிவு முதலியவற்றை வீணே பாழாக்குகிறோம். இந்துக்கள் என்போர்களோ, இந்து மத ஆச்சார்யர்கள் என்போர்களோ சற்றும் கவலையற்று தங்களது வாழ்வுக்குச் சிலதைத் தொழிலாய் வைத்துக் கொண்டு காலங் கழித்து வருகிறார்கள்.

 

இப்படி நடந்து வருவதால் தனிப்பட்ட நபர்களுக்கும் சில தனிப்பட்ட வகுப்புகளுக்கும் அனுகூலமாயிருப்பதால் இவ்வா பாசங்களை வெளியார் அறியாமலிருப்பதற்கு இவ்வகுப்பாரின் கட்டுப்பாடான சூழ்ச்சியும், மற்ற வகுப்பாரின் அறியாமையும் உதவி செய்து வருகின்றன. நமது சென்னை மாகாணத்தில் மாத்திரம் இந்து மத சம்பந்தமான சடங்குகள் பெயராலும், மதப் பெயராலும் தெய்வங்கள் பெயராலும் வருடம் ஒன்றுக்கு 10 - கோடி ருபாய்க்கு அதிகமாகச் செலவாகி வருகிறது என்று சொல்வது அதிகமாகாது.

அதாவது எவ்வளவு யாத்திரை, ஸ்தலம், எவ்வளவு வேண்டுதல், ஸ்தலம் எவ்வளவு, உற்சவ ஸ்தலம், எவ்வளவு மதச் சடங்குகள் இவற்றுக்கேற்படும் செலவு மௌனக்கேடு இவற்றைக் கணக்குப் பார்த்தால் எவ்வளவு 10 - கோடி ருபாயாகும்? இதனால் என்ன பலனை அடைகிறார்கள்? மனதில் ஏற்படும் ஒரு குருட்டு நம்பிக்கையாலும், இதனால் லாபமடையும் வகுப்பார்களால் ஏமாற்றப்படுவதாலும் தானே நம் மக்கள் இவ்விதக் கஷ்ட நஷ்டமெனக் கேடுகளுக்குக் கட்டுப்பட வேண்டியிருக்கிறது? அல்லாமலும் இதனால் எவ்வளவு அடிமைப் புத்தி வளர்கிறது? இவ்விஷயங்களையெல்லாம் ஒழுங்குபடுத்தவும், இம்மாதிரிக் கஷ்ட நஷ்ட மௌனக்கேடுகள் ஏற்படாமலும் அவை உண்மையில் பலனளிக்ககத்தக்க வழியில் உபயோகப்படவும் வேண்டிய முயற்சிகள் எடுத்துக் கொள்வதுதான் மத தர்ம பரிபாலனங்களை ஒழுங்காக நடைப்பெறச் செய்தல் என்பது.

 

இவற்றை உத்தேசித்தே இந்து மத பரிபாலனைச் சட்டம் என்று சென்னை சட்டசபையில் ஒரு சட்டம்கூட நிறைவேற்றப்பட்டிருக்கிறது. ஆனாலும் அச்சட்டம் பண சம்பந்தமான வரவு – செலவுகளைத் தணிக்கைப் பார்க்கக்கூடியதாய் இருக்கிறதே தவிர நான் மேலே சொல்லியுள்ள குற்றங்களை நிவர்த்தி செய்யத்தக்கது என்று சொல்ல முடியாது. ஆனாலும் இவ்வளவாவது எவ்வளவோ சூழ்ச்சிக்கிடையில் நிறைவேற்றி முடித்தவர்களின் வீரத்தைப் போற்றாமலிருக்க முடியாது. ஆனாலும் இன்னமும் அச்சட்டத்தை ஒழிப்பதற்கு அதனால் இப்போது கொள்ளையடிக்க முடியாத ஒரு வகுப்பாரால் எவ்வளவோ காரியங்கள் நடைபெற்று வருகின்றன.

 

ஸ்ரீமான்கள் எஸ். சீனிவாசய்யங்கார் சி.இராஜகோபாலாச்சாரியார் முதலியவர்கள் சுயராஜ்யக் கட்சி பெயரைச் சொல்லிக் கொண்டும் கள்ளு நிறுத்துவதென்பதைச் சொல்லிக் கொண்டும் சட்டசபைக்கு ஆள் பிடிப்பதும் அவர்களுக்கு ஓட்டு வாங்கிக் கொடுப்பதும் இதே கருத்தைக் கொண்டுதான் நமது மதத்தின் பெயரால் நம் மக்களிடமிருந்து கோடிக்கணக்காய் வசூலாகும் பணத்திற்குக் கணக்குக் கேட்பதுகூட நமது அய்யங்கார் - ஆச்சாரியார் கூட்டங்களுக்குக் கஷ்டமாய் இருப்பதன் காரணம் என்னவென்பதை ஊன்றிக் கவனித்தால் யாவருக்கும் அதன் இரகசியம் விளங்கும்.

 

ஆதலால் தர்ம பரிபாலனமென்பது ஒவ்வொரு மனிதனும் கவலையெடுத்துக் கொண்டு அது பிரயோஜனப்படத்தக்க வழியில் உழைக்க வேண்டியது ஒவ்வொரு மனிதனின் முக்கியமான கடமை. அப்பேர்ப்பட்ட கடமையை நீங்கள் அய்ந்தாவது கொள்கையாக வைத்திருப்பதைப் பற்றி நான் மிகுதியும் போற்றுகிறேன். ஆகவே உங்கள் சங்கம் நீடுழி வாழ்ந்து அதன் கொள்கைகள் பூராவும் நிறைவேறித் தங்கள் சமூகத்திற்கும் நாட்டிற்கும் தக்க பலனையளிக்க எல்லாம் வல்ல சக்தியை வேண்டுகிறேன்.

 

(23.05.1926 ஏழாயிரம் பண்ணையில் நடந்த ஆண்டு விழாவில் தந்தை பெரியார் அவர்களின் தலைமையுரை. குடிஅரசு 30.05.1926)

http://thamizachi.blogspot.com/