தவளைகளை பற்றி ஒரு உண்மையை உங்களுக்குச் சொல்கிறேன். சாதரண தண்ணீரில் ஒரு தவளையை விட்டால் அது உடனே எகிறி குதித்து ஓடாது. அதே தவளையை கொதிக்கும் நீரில் எடுத்து போடுங்கள், அது சட்டென எகிறிக்குதித்து தன்னை காப்பாற்றிகொள்ளும். ஆக சூடான் நீரில் இருந்தால் உடல் வெந்துபோகும், மரணம் நிச்சயம் என்பது அதன் அறிவுக்கு எட்டுகிறதோ இல்லையோ, கொதிக்கும் நீரின் வெப்பம் தாங்காமல் அது எகிறி குதிக்கிறது என்பது உண்மை. ஆனால் சாதரண நீரில் தவளையை விட்டு, நீரை கொஞ்சம் கொஞ்சமாக வெப்பமேற்றினால் தவளைக்கு சூடு அதிகரிப்பது உணர்வதற்குள் அதற்கு மரண ஓலை வாசிக்கப்பட்டிருக்கும். இந்த தவளைக் கதையை பல ஆண்டுகளாக மக்கள் சொல்லக் கேள்வி. இதே நிலைதான் நம் மனிதகுலத்துக்குமா என்கின்றனர் அறிவியலர்கள். தவளைக்கும் மனிதர்களுக்கும் எப்படி இங்கே தொடர்பு வந்தது?

 

கவனமாகக் கேளுங்கள். திடீரென உலகத்தின் அழிவு பற்றிய அதிர்ச்சியூட்டும் தகவல் ஒன்று வெளியானால் மனிதகுலம், குறிப்பாக அரசாங்கங்கள் கொதிநீரில் போட்ட தவளையாக வெளியே எகிறிக்குதித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளுமா அல்லது மெல்ல மெல்ல சூடேற்றப்படும் நீரில் சுகமாக நீந்தி மடியும் தவளைபோல் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படாமல் போகுமா? இக்கேள்விக்கு விடை தெரியவேண்டுமா இன்னும் சில நாட்கள் நாம் பொறுத்திருப்போம்.

 

நாளைய தினம் பிரான்ஸ் தலைநகர் பாரிசில் வெளியிடப்படவுள்ள ஐ நாவின் காலநிலை மாற்றம் பற்றிய அறிக்கை, அதிர்ச்சியூட்டும் வகையில் அமைந்துள்ளதாக கூறப்படுகிறது. உலகின் 130க்கும் மேலான நாடுகளைச் சேந்ந்த 2500 அறிவியலர்களின் ஆய்வுகளின் அடிப்படையில் உருவான இந்த அறிக்கையை தொகுக்க 6 ஆண்டுகாலம் தேவைப்பட்டதாம். இந்த அறிக்கை உலக வெப்ப ஏறலோடு மனித குலத்தின் தொடர்பு அல்லது பங்கு பற்றிய முக்கிய, நம்பகமான ஆதரங்களை அளித்துள்ளது. இந்த உலக வெப்ப ஏறல், கால நிலை மாற்ற பிரச்சனைக்கான மனித குலத்தின் செயல்பாடுகள், நடவடிக்கைகளை அதிகரிக்கச் செய்யும் வகையில் அதிர்ச்சியூட்டுவதாக அமைந்துள்ளது என்கிறார் காலநிலை மாற்றம் பற்றிய அரசாங்கங்களுக்கிடை குழு என்ற சர்வதேச வல்லுநர் குழுவின் தலைவர் ஆர்.கே.பச்சோரி.

 

இதைவிட நம்பகமான, ஆதாரத்தன்மைக்கொண்ட ஆவனமேதும் கிடைக்க வாய்ப்பில்லை என்பதால் இந்த அறிக்கை மக்களையும், அரசாங்கங்களையும் அதிர்ச்சியூட்டி, மேலும் தீவிரமான நடவடிக்கைகளையும், செயல்திட்டங்களையும் மேற்கொள்ளத்தூண்டும் என்கிறார்இந்தியாவின் உயர் நிலை சுற்றுச்சூழல் மையமான ஆற்றல் மற்றும் ஆய்வு நிறுவனத்தின் தலைவராகவும் உள்ள இந்த அறிவியலர்.

 

பெட்ரோல், நிலக்கரி உள்ளிட்ட எரிப்பொருட்களின் எரியூட்டல் முதற்கொண்டு மனிதர்களின் பல்வேறு நடவடிக்கைகள் கடந்த 50 ஆண்டுகளிலான உலக வெப்ப ஏறலுக்கு காரணம் என்பதை குறைந்தது 90 விழுக்காடு உறுதிபடுத்தும் வகையில் இந்த காலநிலை மாற்றம் பற்றிய அறிக்கை அமைந்துள்ளது என்று தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகின்றன. இந்நூற்றாண்டில் வெப்பநிலை 2 முதல் 4.5 டிகிரி செல்சியஸ் உயரும், அனேகமாக 3 டிகிரி செல்சியஸாக இருக்கக்கூடும் என்று இந்த அறிக்கை மதிப்பிடும் எனப்படுகிறது.

 

காலநிலை மாற்றம் பற்றிய 4வது அறிக்கையாக அமைந்துள்ள இந்த அறிக்கையின் கண்டுபிடிப்புகள் முந்தைய அறிக்கைக்களோடு ஒப்பிடுகையில் கரிசனைக்குரிய விடயமாக மட்டுமே அமையாது ஆனால் மேலும் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படும் என்று அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில் திரு. பச்சோரி குறிப்பிட்டார். பசுங்கூட வாயுக்களின் வெளியேற்றம் வெப்பநிலை உயர்வு, கடல் மட்ட உயர்வு, பனிப்பாறைகள் உருகுதல், அச்சமூட்டும் வானிலை குழப்படிகள், குடிநீர் பற்றாக்குறை என பல பிரச்சனைகளுக்கு காரணமாக அமைந்துள்ளதற்கான ஆதாரங்கள் தற்போது உலகில் உள்ளன. உதாரணமாக உலகின் மற்ற பகுதிகளை விட ஆர்டிக் பிரதேசத்தில் பனிப்பாறைகள் வேகமாக உருகிக்கொண்டிருக்கின்றன. இந்நிலை எதிர்பார்த்ததைவிட வேகமாக காணப்படுகிரது. இதனால் பாதிப்பு அச்சுறுத்தலுக்குரிய உலகின் சில பிரதேசங்களில் இதன் விளைவுகளும், தாக்கங்களும் மேலும் தீவிரமானவையாக அமையும். சிறு தீவு நாடுகளும், தெற்காசியாவின் எளிதில் பாதிக்கப்படக்கூடிய பகுதிகளும் வெள்ளப்பெருக்கு, வறட்சி, மற்றும் பனிப்பாறை உருகல் பிரச்சனைகலுக்கு முகம் கொடுக்கவேண்டியிருக்கும் என்று கூறுகிறார் ஆர்.கே.பச்சோரி.

 

காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு முன்னெப்போதுமில்லாத அளவு இன்று உலகு தழுவிய அளவில் காணப்படுகிறது. இந்த காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன.

காலநிலை மாற்றத்துக்கும் மனிதகுலத்துக்கும் இடையிலான தொடர்பு, குறிப்பாக மனிதகுலத்தின் செயல்பாடுகள் எப்படி இந்த காலநிலை மாற்றத்தை தூண்டியுள்ளன என்பது பற்றிய சந்தேகங்கள் வெளிச்சத்துக்கு வந்த பல ஆதாரங்களால் ஆட்டம் கண்டுள்ளன. இது பற்றி கூறிய பச்சோரி, கால்நிலை மாற்றம் தொடர்பான சந்தேகங்களும், நம்பகமற்ற கருத்துகளும் தொடரத்தான் செய்யும் ஆனால் அவற்றின் தீவிரமும், அளவு குறைந்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். அறிவியல் துறையில் யாருக்கு எவ்வளவு தெரியும், எதை பற்றி மனிதர்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதில் நிச்சயம் இடைவெளியும், வேறுபாடும் நீடிக்கவே செய்யும் ஆனால் நமது பகுத்தறிவின் மூலமான சீர்தூக்கி பார்க்கும் தன்மையை பயன்படுத்தவேண்டும் அதுவே நல்ல கொள்கை என்பதன் சூட்சுமம்.

 

காலநிலை மாற்றம் பற்றிய விழிப்புணர்வு முன்னெப்போதுமில்லாத அளவு இன்று உலகு தழுவிய அளவில் காணப்படுகிறது. இந்த காலநிலை மாற்றம் தொடர்பான நடவடிக்கைகளில் ஜப்பானும், ஐரோப்பிய நாடுகளும் சிறப்பாக மேற்கொண்டுள்ளன. காலநிலை மாற்றத்துக்கும் மனிதகுலத்துக்கும் இடையிலான தொடர்பு, குறிப்பாக மனிதகுலத்தின் செயல்பாடுகள் எப்படி இந்த காலநிலை மாற்றத்தை தூண்டியுள்ளன என்பது பற்றிய சந்தேகங்கள் வெளிச்சத்துக்கு வந்த பல ஆதாரங்களால் ஆட்டம் கண்டுள்ளன. இது பற்றி கூறிய பச்சோரி, கால்நிலை மாற்றம் தொடர்பான சந்தேகங்களும், நம்பகமற்ற கருத்துகளும் தொடரத்தான் செய்யும் ஆனால் அவற்றின் தீவிரமும், அளவு குறைந்துகொண்டிருக்கின்றன என்று குறிப்பிட்டார். அறிவியல் துறையில் யாருக்கு எவ்வளவு தெரியும், எதை பற்றி மனிதர்களுக்கு எவ்வளவு தெரியும் என்பதில் நிச்சயம் இடைவெளியும், வேறுபாடும் நீடிக்கவே செய்யும் ஆனால் நமது பகுத்தறிவின் மூலமான சீர்தூக்கி பார்க்கும் தன்மையை பயன்படுத்தவேண்டும் அதுவே நல்ல கொள்கை என்பதன் சூட்சுமம். உரிய நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் உலக வெப்ப ஏறலின் தீமையான விளைவுகள் மற்றும் தாக்கங்களை குறைக்க வாய்ப்புகள் அதிகம் என்கிறார் காலநிலை மாற்றம் பற்றிய அரசாங்கங்களுக்கிடை குழு என்ற சர்வதேச வல்லுநர் குழுவின் தலைவர் ஆர்.கே.பச்சோரி.

 

http://tamil.cri.cn/1/2007/02/05/62@48296_2.htm