டாக்டர் ரவி ராமலிங்கம்
காது, மூக்கு, தொண்டை மருத்துவ நிபுணர், சென்னை


''செல்போன் பயன்படுத்துவதால் எத்தகைய பாதிப்புகள் ஏற்படும் என்று அறுதியிட்டு கூற முடியாது. காரணம் அது குறித்த ஆய்வுகள் எதுவும் இன்னும் முழுமையடையவில்லை. ஆனால், நடந்து கொண்டிருக்கும் ஆய்வுகளை வைத்து, செல்போனால் சில பிரச்னைகள் வர வாய்ப்பு இருப்பதாக கணித்திருக்கிறார்கள்.


காது ஒரு நுட்பமான உறுப்பு. சாதாரணமாக 70 முதல் 75 டெசிபல் வரையுள்ள சத்தங்களைத்தான் நம் காதுகள் கேட்க வேண்டும். அதிகபட்சமாக 90 டெசிபல் வரை உள்ள சத்தங்களை கேட்கலாம்.. ஒரு நாளுக்கு அதிக பட்சம் நான்கு மணி நேரம் அப்படிக் கேட்டால் பரவாயில்லை. அதுவும் விட்டு விட்டுத்தான் கேட்க வேண்டும். தொடர்ச்சியாக கேட்கக் கூடாது. அப்படி கேட்பதால் காதின் கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்பட வாய்ப்பு இருக்கிறது.

ஆனால், செல்போன் உபயோகிக்கும் போது என்ன நிகழ்கிறது தெரியுமா? சாதாரணமாகவே செல்போன் வழியாக 90 முதல் 100 டெசிபல் வரையுள்ள சத்தத் தைக் கேட்க வேண்டியுள்ளது. நம் காதுகளால் கேட்கக் கூடிய அதிகபட்ச ஒலி அளவை விட இது அதிகம். அதனால் காதுகளின் கேட்கும் திறன் நாளடைவில் குறையவும் வாய்ப்பு இருக்கிறது. செல்போனில் 15 முதல் 20 நிமிடங்கள் வரை பேசினால் அவ்வளவாக பாதிப்பு இருக்காது. ஆனால், தொடர்ச்சியாக அரை மணி நேரம், ஒரு மணி நேரம் என்று பேசுவதால் கண்டிப்பாக பாதிப்பு ஏற்படும்.

தவிர, செல்போனில் இருந்து வெப்பமும் வெப்ப கதிர்வீச்சும் வெளிப்படுகிறது. நாம் செல்போனை காதுக்கு மிக அருகில் வைத்துப் பேசுவதால், இந்த வெப்பமும் கதிர்வீச்சும் நம் காதுக்கு உள்ளே இருக்கும் மிக நுண்ணிய நரம்புகளை பாதிக்க வாய்ப்புள்ளது. அதேபோல செல்போனில் விட்டு விட்டு சிக்னல் கிடைப்பதால், கதிர்வீச்சின் அளவில் ஏற்ற இறக்கம் ஏற்படும். இந்த மாற்றத்தாலும் காது நரம்புகள் பாதிப்பு அடையலாம். நாளடைவில் தூரத்தில் ஹாரன் ஒலிப்பது, காற்றில் காலண்டர் அசைவது, பேனா கீழே விழுவது போன்ற சிறிய சத்தங்களைக் கூட கேட்க முடியாமல் போய்விடலாம்.

செல்போனை நேரடியாக காதுக்கு அருகில் வைத்துப் பேசாமல் ஹேண்ட்ஸ் ஃப்ரீ உபயோகித்துப் பேசுவதன் மூலம் பாதிப்பை ஓரளவு தவிர்க்கலாம்.''

தகவல்- M.RISHAN SHAREEF

http://maruththuvam.blogspot.com/2008/05/blog-post.html