05_2005.jpg"பொதிகை கலா மன்றம் நடத்தும் பிரபல திரைப்பட இசை அமைப்பாளர் கங்கை அமரன் இன்னிசைத் திருவிழா மார்ச் 13 அன்று திருநெல்வேலி சாப்டர் பள்ளி மைதானத்தில் நடைபெறுகிறது; நன்கொடை ரூ. 1000, ரூ. 500, ரூ. 200, ரூ. 100'' என்ற விளம்பரம் திருநெல்வேலி நகர், முழுவதும் தட்டி போர்டுகளிலும் சுவரொட்டிகளிலும் நிரம்பியிருந்தது. இதைப் பார்த்த எனக்கு, "பொதிகை கலா மன்றம் என்ற பெயரை இதுவரையில் நெல்லையில் கேள்விபட்டதே இல்லையே! இந்த அமைப்பை யார் தோற்றுவித்தார்கள்? கோயில் திருவிழாக்களிலும் திருமணம் போன்ற இதர நிகழ்ச்சிகளிலும் இசை நிகழ்ச்சிகள் இலவசமாக நடத்தப்படும்போது,

 ஏன் பொதிகை கலா மன்றத்தினர் மட்டும் கட்டணம் வசூலிக்கிறார்கள்?' என்ற எண்ணம் எனக்குள் தோன்றியது. ஒருவேளை, உடல் ஊனமுற்றோருக்கு உதவி செய்வதற்காக இப்படி கட்டணம் வசூலித்து நிகழ்ச்சி நடத்துகிறார்கள் போலும் என்று கருதிக் கொண்டேன். குறைந்தபட்சக் கட்டணமாக ரூ. 100 கொடுத்து இந்நிகழ்ச்சியைக் கண்டுகளிக்க என்னால் இயலாததால், நான் இந்த இன்னிசைத் திருவிழாவிற்குச் செல்லவில்லை.

 

ஆனால், எதிர்பாராத விதமாக அந்நிகழ்ச்சி நடந்த அன்று அவ்வழியாகச் சென்று கொண்டிருந்த போது நான் கேட்ட பாடல், எனக்குத் தெரிந்த ஒருவரால் பாடப்படுவதை அறிந்து கொண்டேன். ""தமிழா, நீ பேசுவது தமிழா?'' என்ற அந்தப்பாடலைப் பாடிக் கொண்டிருந்தவர், சி.பி.எம். கட்சியின் கலை இலக்கிய அமைப்பான தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டுள்ள திருவுடையான். அவர் இந்தத் திருவிழாவில் பாடுவது ஏன் என்று அறிந்து கொள்ள முயற்சித்தேன். அதில் கிடைத்த முதல் தகவலே எனக்கு அதிர்ச்சியைக் கொடுத்தது. கங்கை அமரனின் இன்னிசைத் திருவிழாவை பொதிகை கலா மன்றத்தின் பெயரால் நடத்தியது போலி கம்யூனிஸ்டுகளான சி.பி.எம். கட்சியினர்தான்!

 

சி.பி.எம். கட்சி நேரடியாகவே உழைக்கும் மக்களிடம் போய் பிரச்சாரம் செய்து நன்கொடை திரட்டலாமே! ஏன் அப்படிச் செய்யவில்லை? ஏனென்றால், அக்கட்சி அரசியல் ரீதியாக ஊனமடைந்து, அதன் சந்தர்ப்பவாதம் மக்களிடம் அம்பலப்பட்டுப் போய்விட்டது. எனவேதான் பொதிகை கலாமன்றம் என்ற லெட்டர் பேடு அமைப்பின் பெயரால் பார்ப்பன கலாச்சாரமும் பாலியல் வக்கிரமும் நிறைந்த டப்பாங்குத்து சினிமா பாடல்களைப் பாட வைத்து கட்சிக்கு நிதி திரட்டும் புரட்சிகர வேலையில் இறங்கி விட்டனர்.

 

சி.பி.எம். கட்சித் தலைவர்கள் கார்களில் சொகுசாய் பறந்து முதலாளிகளிடமும் தன்னார்வக் குழுக்களிடமும் நன்கொடை திரட்டுவதைத் தொடர்ந்து செய்து வருகின்றனர். இதுதவிர, த.மு.எ.ச. மூலம் கலைவிழாக்கள் நடத்தி வசூல் செய்து பார்த்து, அந்த வியாபாரம் போணியாகாததால் கடையை மூடிவிட்டனர். பின்னர், பெரியாரின் 125வது பிறந்தநாளை முன்னிட்டு பெரியார் கொள்கைகளைப் பரப்புவதாகக் கூறிக் கொண்டு ""கலகக்காரர் தோழர் பெரியார்'' நாடகம் நடத்தி அதற்கான வசூல் என்று பெரியார் வியாபாரத்தை கடந்த ஆண்டில் மேற்கொண்டனர். இப்போது மீண்டும் அதே வியாபாரத்தை நடத்தினால் எதிர்பார்த்தபடி வசூலாகாது என்பதால், இப்போது பினாமி பெயரில் இன்னிசைத் திருவிழா நடத்தி வசூல் செய்து கொழுத்த ஆதாயமடைந்துள்ளனர்.

 

கோயில் திருவிழாக்களில் நடத்தப்படும் இன்னிசைக் கச்சேரிகளில் முதலில் ஓரிண்டு பக்திப் பாடல்களுக்குப் பிறகு ரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க ஆபாச வக்கிர சினிமா பாடல்கள் பாடப்படுவதைப் போல, இங்கேயும் ஓரிரண்டு முற்போக்கு பாடல்களைப் பாடிவிட்டு ஆபாச சினிமா பாடல்களின் திருவிழாவை அரங்கேற்றியுள்ளனர். கோயில் திருவிழாக்களின் பக்தியின் பெயரால் ஆபாசப் பாடல்கள். சி.பி.எம். கம்பெனியின் கலை விழாக்களில் முற்போக்கின் பெயரால் ஆபாச இன்னிசைப் பாடல்கள். இந்த வியாபாரத் தந்திரம் வெற்றி பெற்றதும், நெல்லை மட்டுமின்றி இப்போது தூத்துக்குடியிலும் இத்தகைய இன்னிசைத் திருவிழா எனும் புதிய கடையை விரித்துள்ளனர்.

 

கட்சியின் பெயரைச் சொல்லி, வெளிப்படையாக அரசியலை முன்வைத்து, மக்களிடம் ஏன் நிதி வசூலிக்க முடியவில்லை என்பதை புரட்சியை நேசிக்கும் சி.பி.எம். கட்சியின் அணிகள் ஒருகணம் யோசித்துப் பார்க்கட்டும். பின்னர் அக்கட்சியில் இன்னமும் நீடிப்பதா, அல்லது புரட்சிகர அமைப்புகளில் அணிதிரளுவதா என்பதை முடிவு செய்யட்டும்!

 

ஃபிரடரிக் டக்ளஸ், நெல்லை.