முன்பக்கம்

உலாவுவோர்

We have 164 guests online

உலாவியோர்

Content View Hits : 4893000
Visits [+/-]
Today:
Yesterday:
Day before yesterday:
291
2474
2577

-103
This week:
Last week:
Week before last week:
16771
11797
11230

+567
ஞாயிறு, 01 ஆவணி 2010
 


தெருநாயின் உயிரைவிட மக்களின் உயிர் மலிவானதா?

E-mail Print PDF
எழுத்து (பெருப்பிக்க - சிறுப்பிக்க)

பெருப்பிக்கசிறுப்பிக்க

mars_2007.jpg

பெங்களூரில், கடந்த டிசம்பரில் 8 வயது சிறுமி வெறி பிடித்த தெரு நாய்களால் கடித்துக் கொல்லப்பட்ட செய்தி மனிதாபிமானம் உள்ள எவரையும் கலங்கச் செய்து விடும். காட்டில் வாழும் சிங்கம், புலி போன்ற கொடூர விலங்குகள் கூட்டாகச் சேர்ந்து மான்களை வேட்டையாடுவது போல, இந்தச் சிறுமியை நாய்கள் துரத்தித் துரத்திக் கடித்துக் குதறியுள்ளன. பெயிண்டராக வேலை

 பார்க்கும் தனது தந்தையை உணவருந்த அழைக்கச் சென்ற சிறுமி ஸ்ரீதேவி இப்படி நாய்களிடம் மாட்டிக் கொண்டதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் செய்வதறியாமல் திகைத்தனர். கற்களைத் தூக்கியெறிவதைத் தவிர அவர்களால் அந்த வெறிநாய்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. வெறிபிடித்த நாய்களோ சிறுமியைக் கடித்துக் குதறி கொன்றுவிட்டுத்தான் அகன்றன.

 

தகவல் தொழில்நுட்பத் துறையின் சொர்க்கமாக விளங்கும் பெங்களூரில், மக்கள் நடமாட்டம் அதிகமாக உள்ள சந்திரா லேஅவுட் பகுதியில் காலை 7.30 மணிக்கு நடந்த இந்தக் கொடூரம் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது. சமீபத்தில் கொடைக்கானலிலும் இது போன்றே ஒரு சிறுவனை நாய்கள் கூட்டமாகக் கடித்துக் குதறின. சில மாதங்களுக்கு முன்பு இதே பெங்களூரில் 16 பேரை ஒரு நாய் கடித்தது; மணிப்பூரில் ஒரே சமயத்தில் 18 பேர் நாய் கடித்தததால் ""ரேபிஸ்'' நோய் தாக்கி உயிரிழந்தனர். சேலத்திலும் ஒரு சிறுவன் நாய் கடித்து உயிரிழந்தான். கோவைசெல்வபுரத்தைச் சேர்ந்த அஜீத் என்ற சிறுவன் தெரு நாய்களால் கடித்து குதறப்பட்டு மாண்டு போனான். கோத்தகிரியைச் சேர்ந்த நாகராஜ் என்ற சிறுவன் தெரு நாய்களால் வேட்டையாடப்பட்டு நீண்ட சிகிச்சைக்குப் பிறகு உயிர் பிழைத்துள்ளான். இப்படி நாய்க் கடியால் மக்கள் அவதியுறும் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

 

இவையெல்லாம் பத்திரிக்கைச் செய்திகளில் வந்தவை மட்டுமே; இன்னும் செய்திகளில் வராத எத்தனையோ நாய்க்கடிகளும், அதனால் மக்கள் படும் அவதிகளும் தினமும் நிகழ்ந்துக் கொண்டுதான் இருக்கின்றன. சென்னை, பெங்களூர், ஹைதராபாத் போன்ற பெருநகரங்களில் மாதம் ஒன்றிற்கு மட்டும் குறைந்தது 5000 பேருக்கு அரசு மருத்துவமனைகளில் நாய்கடிக்கு சிகிச்சை தரப்படுகிறது. ஆனால், அரசின் கணக்குகளில் வராத எத்தனையோ நாய்கடிகளும், அரசு மருத்துவமனைகளில் மருந்தின்றி கைவிடப்பட்டவர்களும் ஏராளம்.

 

நாய்க்கடியில் அடிக்கடி மாட்டிக் கொள்பவர்கள், பெரும்பாலும் உழைக்கும் ஏழை, நடுத்தர மக்களே. இரவு வேலைக்குச் சென்று திரும்பும் உழைப்பாளிகளும், பள்ளிக்கோ, வேலைக்கோ சென்று திரும்பும் அவர்களது குழந்தைகளுமே. இப்படி நாய்களிடம் கடி வாங்கி அல்லற்படுகின்றனர்.

 

இப்படி நாளுக்கு நாள் பெருகிவரும் நாய்களின் தொல்லை குறித்து அதிகாரிகளிடம் கேட்டபோது, பெங்களூரின் தென்பகுதி சுகாதார அதிகாரி நாகராஜ் என்பவர் ""மக்கள் தெருக்களில் குப்பைகளைக் கொட்டுவதும், அனுமதி இல்லாத இறைச்சிக் கடைகள் அதிகரித்துள்ளதும் நாய்கள் பெருகுவதற்குக் காரணமாக உள்ளன'' என்கிறார். பெங்களூர் மாநகர கமிஷனர் ஒருபடி மேலே போய், ""மக்களுக்கு சமூக அக்கறை வேண்டும், சாலையோரங்களில் கழிவுகளைக் கொட்டுவது கூடாது, சட்ட விரோதமாய் இயங்கும் இறைச்சிக் கடைகளைத் தட்டிக் கேட்க வேண்டும்'' என்று பழியை மக்கள் மீதே சுமத்துகின்றõர்.

 

தமிழகத்தில் ""சிக்குன் குன்யா'' நோய் பரவிய போது மக்களிடம் உள்ள சுகாதாரக் கேட்டினால்தான் நோய் பரவிவிட்டதாகக் கதைவிட்ட அரசின் அதே திமிர்த்தனம் இப்போது நாய்க்கடியினால் மக்கள் அவதிப்படும்போதும் வெளிப்படுகின்றது.

 

இப்படிப் பெருகி வரும் நாய்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்த அரசு ஏன் முன்வரவில்லை? நகரங்களில் பெருகிவரும் தெரு நாய்களுக்குக் காரணம், மக்களா? அல்லது அதைக் கட்டுப்படுத்தத் தவறிய அரசா?

 

இந்தியாவின் ஒவ்வொரு நகரத்திலும் லட்சக்கணக்கான தெரு நாய்கள் சுற்றித் திரிவதும், அவை கட்டுப்பாடின்றி பல்கிப் பெருகுவதும் மக்களின் நகர வாழ்க்கையை நரக வாழ்க்கையாக மாற்றி வருகின்றன.

 

முன்பெல்லாம் முனிசிபாலிட்டி நாய் வண்டி வந்து எல்லா தெரு நாய்களையும் பிடித்துச் சுருக்கு மாட்டியோ, நச்சுப் புகை கொடுத்தோ கொன்று விடுவர். ஆனால் இப்போதெல்லாம் அப்படிச் செய்வதில்லையே, ஏன்?

 

நாய்களின் மேல் அக்கறை கொண்ட ""ப்ளூ கிராஸ்'' போன்ற மிருகாபிமான தன்னார்வ நிறுவனங்கள் தெரு நாய்களைக் கொல்லாமல் அவற்றுக்குக் குடும்பக் கட்டுப்பாடு செய்வதன் மூலம் அவற்றைப் பெருக விடாமல் தடுத்துவிடலாம் என்று அரசிடம் பரிந்துரைத்துச் செயல்படுத்தி வருகின்றன. கொக்கின் தலையில் வெண்ணை வைத்த கதையாக, பிடித்த நாயைக் கொல்லாமல், குடும்ப கட்டுப்பாடு செய்து வரும் இவர்களிடம் பிடிபடாத நாய்களில் ஒன்று, வருடத்திற்கு 10 முதல் 15 குட்டி போடுவதும், குடும்ப கட்டுப்பாடு செய்யப்பட்டு தெருவில் விடப்படும் நாய்கள் மக்களைக் கடிப்பதும் தெரியாதா?

 

குளிர்சாதனம் செய்யப்பட்ட வண்டியில், ஏதாவதொரு பகுதிக்குச் சென்று நாய்களைப் பிடித்து கு.க. செய்து தெருவில் விட்டுவிட்டுக் கணக்கு காட்டும் இந்தத் தன்னார்வக் குழுக்களிடம் நாய்களைக் கட்டுப்படுத்தும் பொறுப்பினை ஒப்படைத்ததை மறைக்கவே அரசும் அதிகாரிகளும் மக்களின் மேல் பழி போடுகின்றனர்.

 

இப்படி கு.க. செய்யும் முறை பயன் தராது என்று சென்ற நூற்றாண்டிலேயே நிரூபிக்கப்பட்டும், நாய்களின் மேல் உள்ள ""கருணை''க்காக ஏகாதிபத்திய நாடுகள் தங்களுக்கு டாலர் கருணை காட்டுவதால், அதனைக் கைவிட இந்த தன்னார்வக் கூலி நிறுவனங்கள் மறுக்கின்றன. குளுகுளு நட்சத்திர ஓட்டல்களில் கூட்டம் நடத்தித் தங்களது மிருகாபிமானத்தை வெளிப்படுத்தும் இவர்களிடம் மனிதாபிமானத்தை எப்படி எதிர்பார்க்க முடியும்?

 

இன்றைக்கு உலகமயமாக்கலினால் கிராமங்களில் வேலையும், நிலமும் இழந்து நகரங்களை நோக்கி ஓடிவந்து, ஒருவேளை சோற்றுக்கே அல்லாடி, தினக்கூலியாய், கொத்தடிமையாய் மக்களே கவனிப்பாறின்றி கிடக்கும்போது நாய்களை யார் கவனிப்பது? இப்படி கவனிப்பாரற்று தெருவில் விடப்படும் நாய்கள்தான் பல்கிப் பெருகுகின்றன. இப்படி தெருவுக்கு வரும் ஒரு நாயின் மூன்றாவது தலைமுறை, முழுமையாக மனிதனிடமிருந்து பிரிந்து, அதனுள் இருக்கும் விலங்கின் குணம் அதிகரித்து, வீட்டு விலங்காக இல்லாமல் காட்டு விலங்காக மாறி விடுகின்றது.

 

இப்படி காட்டு விலங்காகிவிட்ட தெரு நாய்கள் கூட்டமாக வாழ்வதும், காட்டு விலங்குகள் போலவே நடந்து கொள்வதும் இன்றைக்குப் பல நகரங்களில் காண முடியும். சிறுமி ஸ்ரீதேவியைக் கூட்டமாக வேட்டையாடிய நாய்களுக்குக் கண்டிப்பாக வீட்டு விலங்கின் தன்மை இல்லை. சென்னை ஐ.ஐ.டி வளாகத்தின் புதர்க்காடுகளில் உள்ள மான்குட்டிகளை நாய்கள் கூட்டமாகச் செயல்பட்டு வேட்டையாடுவதும் அதிகரித்துள்ளது.

 

காட்டு விலங்குகள் நாட்டிற்குள் வந்து மக்களைத் தொல்லைப்படுத்தினால் அவற்றைக் கொன்றொழிப்பதுதானே அரசின் கடமை! அதனை அரசாங்கம் செய்யாமல் இருப்பது ஏன்? அதற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது.

 

உலகிலேயே நாய்க்கடிக்கு அதன்மூலம் பரவும "ரேபிஸ்' என்ற கொடிய நோய்க்கு பெருமளவில் பலியாகும் மக்களைக் கொண்ட நாடு, நமது நாடு. இங்கு ஏற்கெனவே மலிவு விலையில் கிடைத்து வந்த "ரேபிஸ்' தடுப்பு மருந்தை இதே தன்னார்வக் குழுக்கள் மூலம் நிறுத்தியாகி விட்டது. போதாக்குறைக்குக் காப்புரிமைச் சட்டமும் திருத்தப்பட்டு விட்டது. இனிமேல் நாய்க்கடிக்கு பன்னாட்டு நிறுவனங்கள்தான் மருந்து தரவேண்டும். ஒரு ஊசியின் விலை ரூ. 300 முதல் ரூ. 1000 வரை விற்கப்படுகின்றது.

 

இப்படி உலகிலேயே "ரேபிஸ்' மருந்து அதிகமாக விற்பனையாகும் மிகப் பெரிய சந்தையாக இந்தியா உள்ளது. இங்கே நாய்க்கடிகள் குறைந்தால் பன்னாட்டு மருந்து கம்பெனிகளின் லாபம் குறையும். இங்கே நாய்களே இல்லையென்றால் அவர்கள் கடையை மூடிவிட்டுக் கிளம்ப வேண்டியதுதான்!

 

நமது நாட்டு மக்களின் சாவில் லாபம் பார்க்கக் காத்திருக்கும் வல்லூறுகளாக இந்தப் பன்னாட்டு மருந்துக் கம்பெனிகள் உள்ளன. அந்நிறுவனங்கள் தரும் எச்சில் காசில்தான் இந்தத் தன்னார்வக் குழுக்கள் தங்களது மிருகாபிமானத்தைக் காட்டுகின்றன. இக்குழுக்களை நம்பித்தான் நாய்களுக்கு கு.க. செய்து கட்டுப்படுத்தும் பொறுப்பினை அரசு ஒப்படைத்துள்ளது. நகராட்சிகளின் நிர்வாக ஆணையம் இதற்காக ஐந்து கோடியே எழுபத்தெட்டு லட்ச ரூபாயை ஒதுக்கியுள்ளது. பாலுக்குப் பூனையைக் காவல் வைத்த கதையாக நாட்டு மக்களின் உயிரை இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளிடம் அடகு வைத்துவிட்டது இந்த அரசு.

 

மறுகாலனியாக்கம் தோற்றுவித்த பயங்கரத்தால் உழைக்கும் மக்களின் வாழ்க்கை நாய்படாத பாடாகி விட்டது. வீட்டு விலங்குகள் இயல்பு நிலை பிறழ்ந்து காட்டு விலங்குகளாக மாறி மக்களைக் கடித்துக் குதறி அச்சுறுத்துகின்றன. வெறிபிடித்த தெருநாய்களை அடித்துக் கொல்வது மட்டுமல்ல; அதற்கு முன்பாக ஏகாதிபத்திய மறுகாலனியாக்க வெறி நாய்களையும் அவற்றின் எடுபிடிகளையும் ஒழித்துக் கட்டுவதற்கான பெரும் புரட்சிக்கு உழைக்கும் மக்கள் அணிதிரள வேண்டியுள்ளது.

 

· அழகு

Trackback(0)
கருத்துக்கள் (0)Add Comment

கருத்துக்களைப் பதிவிடுக
quote
bold
italicize
underline
strike
url
image
quote
quote
சுருக்குக | விசாலமாக்குக

busy
 
Copyright © 2010 தமிழரங்கம். All Rights Reserved.
Joomla! is Free Software released under the GNU/GPL License.
Banner