|
புலிகளால் இனசுத்திகரிப்புக்குள்ளான முஸ்லீம்கள்: "தமிழ்த் தேசிய"த்தின் இருண்ட பக்கம்
தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் - சமாதானத்துக்கான யுத்தம் - என்ற பெயரில் இலங்கை அரச படைகளினால் நிராயுதபாணிகளான மக்கள் கொன்றொழிக்கப்படுவதும், ஈழ விடுதலைப் போராட்டம் - தேசிய விடுதலைப் போராட்டம் - என்ற பெயரில் நிராயுதபாணிகளான முஸ்லீம் மற்றும் சிங்கள மக்கள் கோரத்தனமாகக் கொன்றொழிக்கப்படுவதும் தொடர்ந்து கொண்டிருந்தவேளை "தீப்பொறி"க் குழுவைச் சேர்ந்தவர்கள் தமிழீழ விடுதலைப் புலிகளின் கொலைக்கரங்களிலிருந்து தம்மைப் பாதுகாப்பதை நோக்கமாகக் கொண்டு வடக்குப் பகுதியிலிருந்து தென்னிலங்கையை வந்தடைந்து கொண்டிருந்தனர். தமிழர்களினதும் முஸ்லீம்களினதும் தாயகம் என அழைக்கப்பட்ட வடக்குக்-கிழக்குப் பகுதிகள் இப்பொழுது தமிழீழ விடுதலைப் புலிகளின் "தாயகமாக" மாற்றம் பெற்றுக் கொண்டிருந்தன. வடக்குக்-கிழக்கில் வெகுஜனப் பத்திரிகைகள் அனைத்தும் தமிழீழ விடுதலைப் புலிகளின் பூரண கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டு தமிழீழ விடுதலைப் புலிகளின் பிரச்சார ஏடுகளாக மாற்றம் பெற்றதுடன் முற்போக்கு ஜனநாயக சக்திகளைக் கொன்றொழித்து அல்லது வடக்குக்-கிழக்கிலிருந்து விரட்டியடித்து மாற்றுக் கருத்தை முழுமையாக வெளிவராது தடை செய்திருந்த வேளையில் தமிழீழ விடுதலைப் புலிகளின் செயற்பாடுகள் எந்தவித விமர்சனத்துக்கும், எதிர்ப்புக்கும் அப்பாற்பட்டு தொடர்ந்து கொண்டிருந்தன. தென்னிலங்கையைப் பொறுத்தவரை நிலைமைகள் வேறுவிதமாக அமைந்திருந்தன. "ராவய", "யுக்திய" போன்ற வெகுஜனப் பத்திரிகைகள் இலங்கை அரசினதும், தமிழீழ விடுதலைப் புலிகளினதும் மக்கள் விரோதப் போரை விமர்சித்துக் கொண்டிருந்ததுடன் வாசுதேவ நாணயக்கார தலைமையிலான நவசமசமாஜக் கட்சி உட்பட இடதுசாரிக் கட்சிகள் போருக்கெதிரான கருத்துக்களைப் பகிரங்கமாக வெளியிட்டுக் கொண்டிருந்தன.
Read more...
|